Saturday, August 11, 2012

நம்பிக்கை இளைஞர் விவேகானந்தர்

செப்டம்பர் 11... என்று சொன்னால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2001ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்பு 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, சிகாகோவில் நமது இந்தியத் திருநாட்டின் பெருமையை நிலைநாட்டினார் ஒரு இளைஞர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சுவாமி விவேகானந்தர் என்பது அந்த இளைஞரின் பெயர். சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும், வேகமும் நிரம்பிய இளைஞராக அவர் இருந்தார். ராமகிருஷ்ண பரஹம்சரை சந்தித்ததால் தனது வாழ்க்கையை ஆன்மீகத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர். துறவியாக முழுவதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்ததால் மக்கள் நமது பெருமைகளை மறந்து இருந்தார்கள். அடிமைகளாக வாழ்வதில் சுகம் அடைந்திருந்தார்கள். இந்த இந்த நிலையைக் கண்டு விவேகானந்தர் மனம் வருந்தினார். நமது பெருமைகளை நாம் கூறி புரிய வைப்பதைவிட மேலைநாட்டவர்கள் சொன்னால் நமது மக்களுக்கு நம் பெருமைகள் புரியும் என்பதை உணர்ந்துக் கொண்டார். அதன் காரணமாக அமெரிக்கா செல்ல தீர்மானித்தார். 1893ல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் சர்வமத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைப் பற்றி கேள்விப்பட்ட விவேகானந்தர் அந்த மாநாட்டிற்கு செல்ல தீர்மானித்தார். அதற்கான ஆயுத்தங்களை செய்யத் தொடங்கினார். குமரிமுனைக்கு சென்ற அவர், அங்குள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். தியானத்தின் போது கடவுள் பற்றி சிந்தனை செய்யவில்லை. மாறாக இந்தியாவின் அன்றைய வறுமை நிலைமையையும் கல்வி முன்னேற்றத்தையுமே சிந்தித்தார். இந்திய மக்களுக்கு உடனடி தேவை மதமல்ல, தொழிற்கல்வியே என்று உணர்ந்தார். விவேகானந்தர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு ஏராளமான சிற்றரசர்களும், செல்வந்தர்களும் முன்வந்தார்கள். ஆனால் விவேகானந்தர் தான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு காரணம் ஏழைகளுக்காக என்பதால் சாதாரண மக்களின் பங்களிப்பும் தனது பயணத்தில் இடம்பெற வேண்டுமென்று விரும்பினார். ஏற்கனவே அமெரிக்கா செல்வதற்கு பல செல்வந்தர்கள் வலியுறுத்தியப் பிறகும் விவேகானந்தர் தன்னுடைய சம்மதத்தை சென்னையில் இருந்த இளைஞர்களிடம்தான் வெளிப்படுத்தினார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆன்மீகத்தை போதிப்பதன் மூலம் இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி தரமுடியும் என்று நம்பினார். சென்னை இளைஞர்கள் விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பணம் திரட்டினார்கள். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அவர் சர்வமத மாநாடுகளுக்கு செல்ல நிதியளித்தார்கள். அவர்கள் செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி, மே 31ம் தேதி பம்பாயிலிருந்து அமெரிக்கா நோக்கி கப்பலில் புறப்பட்டார். கப்பலில்கூட விவேகானந்தர் தேசபக்தியை விடவில்லை. கப்பல் ஜப்பான் வழியாக அமெரிக்கா சென்றது. ஜப்பானில் இருந்த தொழிற்சாலைகள் அவரை கவர்ந்தன. தன்னுடன் பயணம் செய்த தொழிலதிபரிடம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்த தொழிலதிபர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் தொழிற்புரட்சிக்கு பெரிதும் உதவிய ஜாம்ஷெட்ஜி டாட்டா. அமெரிக்காவிற்கு ஜூலை மாதமே போய் சேர்ந்துவிட்டார் விவேகானந்தர். அங்குள்ள சூழ்நிலைகளுக்கு அவர் பழக்கிகொள்ளும் முன்பே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த சர்வமத மாநாடு செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. எந்த மனிதரும் தெரியாத ஊரில் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தார். சர்வமத மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியுமா என்றுகூட சந்தேகப்பட்டார். கையில் இருந்த பணமும் கரைய ஆரம்பித்தது. அவரை சந்தித்த அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றி தாங்கள் கேள்விப்பட்ட அவதூறுகளை பற்றி கேட்டார்கள். ஆனாலும் விவேகானந்தர் மனம் தளரவில்லை. ஒரு சிலர் அவருடைய உருவத்தை வைத்து அவரை தவறாக எடை போட்டார்கள். அவருடைய தலைப்பாகையை இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட உண்டு. ஒரு இடத்தில் அவரது உருவத்தைக் கண்டு சிறு கூட்டம் ஒன்று படுகோபத்துடன் அவரை துரத்திய சம்பவம்கூட நடந்தது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் அங்கு குடியேறிய இந்தியர்களின் எதிர்ப்புகளையும் சமாளித்தார். ஆனால் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டதால் நல்ல நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். மாநாடு தொடங்கும்வரை சிகாகோவில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இருந்த போஸ்டன் என்ற நகரத்தில் இருந்து தன்னுடைய செலவை குறைத்தார். அங்கு கேதரின் என்ற பெண் விவேகானந்தருக்கு நண்பரானார். அவர் மூலமாக பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நம்பிக்கையை பெற்றார் விவேகானந்தர். ஹென்றி ரைட் தனது நண்பரான சர்வமத மாநாட்டின் தலைவர் டாக்டர் பரோசுக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தி கடிதம் தந்தார். அத்துடன் விவேகானந்தரின் செலவுகளை சமாளிப்பதற்காக அங்கு இந்தியாவைப் பற்றிய சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்தார் ஜான் ரைட். இத்தனை தடைகளையும் மீறி சர்வமத மாநாட்டிற்கு போய் சேர்ந்தார் விவேகானந்தர். அங்கு ‘சகோதரர்களே! சகோதரிகளே!’’ என்று அழைத்து உரையை ஆரம்பித்ததுதான் காரணம். ஒட்டுமொத்த அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது. அந்த மாநாட்டின் போது அவருடைய வயது முப்பதுதான். அவருடைய பேச்சுகளைக் கேட்ட அமெரிக்கர்கள் நண்பர்களானார்கள். பல இடங்களில் அவரை பேச கூப்பிட்டார்கள். தனது உரைகளின் மூலம் அமெரிக்கர்களுக்கு இந்தியாவின் ஆன்மிகத்தையும், அப்போதிருந்த உண்மைநிலை பற்றியும் புரிய வைத்தார். அதனால் பல வெளிநாட்டு சீடர்கள் அவருக்கு கிடைத்தார். ஐரீஸ் நாட்டில் பிறந்து, இந்தியப் பெண்ணாக வாழ்ந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிய சகோதரி நிவேதிதையும் அவர்களில் ஒருவர். இந்தியா வந்த விவேகானந்தரை இந்தியர்கள் அனைவரும் வரவேற்றார்கள். அவரது கருத்துக்களை பிடிக்காதவர்கள் கூட அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவரது செயல்திட்டங்களுக்கு ஊக்கம் தந்தார்கள். ‘‘நூறு இளைஞர்களை எனக்கு தந்தால் வலிமையான இந்தியாவை உருவாக்கி காட்டுவேன்’’ என்றவர் விவேகானந்தர். அவரது வாழ்க்கை ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல. செயல்படத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் உற்சாகம் தருகிறது.

No comments:

Post a Comment