Thursday, August 9, 2012

சீக்கியர் படுகொலையும் இந்தியர் எதிர்பார்ப்பும்

அமெரிக்காவில் உள்ள விஸ்காஸினில் இருக்கும் ஓக் க்ரீக் குருத்வாராவில் கடந்த 5ம் தேதி வேட் மைக்கேல் பேஜ் என்ற முன்னாள் ராணுவ வீரன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சீக்கியர்கள் பலியானார்கள். 25க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் காயமடைந்தார்கள். உடனே பேஜை நோக்கி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் பேஜ் சுட்டு கொல்லப்பட்டான். இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதலை கண்டித்து புதுடில்லியில் பல்லாயிரக்கணக்கான சிக்கியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மைக்கேல் பேஜும் வெள்ளை இனவெறியாளனே என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. இந்தியர்களை குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல்களை இந்திய அரசு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கவலையை அமெரிக்க தூதர் நிருபமா ராவ் மூலமாக அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து பல்வேறு சீக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்களுக்கு வெறும் இனவெறி மட்டுமே காரணமல்ல. மக்களுக்கு சுலபமாக துப்பாக்கி கிடைக்க வகை செய்யும் அமெரிக்க சட்டங்களும் காரணம் என்பதை கவனிக்க வேண்டும். அதிலும் குருத்வாரா தாக்குதல் நடந்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் துப்பாக்கி வழங்கும் சட்டம் எளிதாக உள்ளது. துப்பாக்கியை மக்கள் எளிதாக கையில் எடுப்பதால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. போரில் பலியாகும் அமெரிக்க வீரர்களை விட துப்பாக்கி சூடுகளில் சிக்கி பலியாகும் அப்பாவி மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஓக் கிரீக் குருத்வாரா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அரசு அமெரிக்க தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் ஏற்றி மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக ஒபாமா அறிவித்தது இந்திய - அமெரிக்க உறவுக்கு நல்ல அறிகுறி. ஆனால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு அங்குள்ள உள்நாட்டு துப்பாக்கி சட்டமே காரணம் என்பதை கவனத்தில் கொள்ளாதவர்களாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கவாழ் இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு. அமெரிக்க அரசு அந்த நோக்கத்தை எப்போது பூர்த்தி செய்யும்?.

No comments:

Post a Comment