Monday, August 13, 2012

அத்வானி: வலைப்பூவில் மலரும் நம்பிக்கை?

லால் கிருஷ்ண அத்வானி, 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் முன்னாள் துணை பிரதமர். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்; வாஜ்பாய் அளவுக்கு இல்லையென்றாலும் சிறந்த பேச்சாளர்; பா.ஜ.க.வின் 60 ஆண்டுகால அரசியல் பயணத்தின் சாட்சியாக இருப்பவர்; பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. இப்போது இவரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, பா.ஜ.க.வின் தலைவர் பொறுப்போ இல்லை. மேலும் இவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாரும் கட்சியில் முக்கிய பதவிகளில் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக இவருக்கு அடுத்தக்கட்டத் தலைவர்களான நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்களின் பெயர்கள் அடிபடத் துவங்கியுள்ளன. சமீப காலமாக அத்வானியின் வலைப்பூக்களில் அவர் என்ன எழுதினாலும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. இவை ‘பிரதமர் பதவிக்கான போட்டியில் தனது பெயரையும் சேர்க்க விரும்புகிறாரோ இந்த பிதாமகர்’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. தனது வலைப்பூ எழுத்துக்களில் தனக்கென ஒரு பார்வையை முன்வைக்கிறார் அத்வானி. ஆகஸ்டு முதல் வாரத்தில் அவர் எழுதிய கட்டுரையொன்று தேசிய அளவில் புயலை உண்டாக்கியது. ‘2014 தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் இவர்கள் யாராவது ஒருவரின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியை கைப்பற்றும்’ என்று அவர் சொன்னதாக தேசிய ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் கட்சி, அவரது கருத்து பா.ஜ.க.வின் நிலவும் குழப்பங்களை கூறுவதாக கேலி செய்தது. அத்வானி சார்ந்திருக்கும் பா.ஜ.க.வோ எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தது. உண்மையில் அந்த கட்டுரையில், அந்த கருத்தை ஒரு விருந்தில் இரண்டு மத்திய அமைச்சர்கள் தன்னிடம் கூறியதாகவும் தனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றும் பா.ஜ.க. தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் பதிவு செய்திருந்தார். மேலும் காங்கிரசின் நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி சி.பி.ஐ. தான் என்றும் அவர் கேலி செய்திருந்தார். இந்த கட்டுரை மட்டுமல்ல. சமீப காலமாக அவர் என்ன எழுதினாலும் சர்ச்சை தான். மக்களவைத் தேர்தலுடன் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடைபெற வேண்டும். அப்போது தான் ஐந்தாண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி தனது செயல்திட்டங்களை சீராக செயல்படுத்த வேண்டும் என்கிறார். பிரணாப் முகர்ஜிக்கும் தனது தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறார். இப்படி பல்வேறு பிரச்சினைகளில் தனது கருத்தை வெளியிடுகிறார். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் அத்வானி?. பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் தனது பெயரும் இருக்கிறது என்று காட்டுகிறாரா? இன்றைய சூழ்நிலையில் நரேந்திர மோடியை தே.ஜ. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் ஏற்க தயாராக இல்லை. நிதீஷ் குமாரோ இப்போதே பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் அத்வானியை விட கூட்டணியில் பலம் பொருந்திய பா.ஜ.க. தலைவர்கள் இப்போதைக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் இதை பா.ஜ.க. எப்படிப் பார்க்கிறது? தேசம் அத்வானியை எப்படி நோக்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.

No comments:

Post a Comment