Monday, August 13, 2012

டெசோ மாநாடு சாதித்தது என்ன?

பல்வேறு ஆதரவுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே டெசோ மாநாடு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. ‘இந்த மாநாடு என்ன சாதித்தது?’ என்ற கேள்விக்கு விடைகாணும் முன் இந்த மாநாடு நடப்பதற்கு முன்னால் நடந்த சில பரபரப்புகளை நாடகங்களைப் பார்ப்போம். முதலில் இந்த மாநாட்டை விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ம் தேதி நடத்த இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அரசியலில் இழந்த மரியாதையை பெறுவதற்காக தான் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துவதாக தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் கருதினார்கள். மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க.வும் இருப்பதால் காங்கிரஸ் அரசும் தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் தனி ஈழம் பற்றிய கோரிக்கையை எழுப்புவதில்லை, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் நவாழ்வை முன்வைப்பதே மாநாட்டின் நோக்கம் என்று அறிவித்தார். மேலும் விழுப்புரத்தில் இருந்து மாநாட்டை சென்னைக்கு மாற்றினார் கருணாநிதி. தேதியையும் ஆகஸ்டு 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சென்னையில் டெசோ மாநாட்டுக்காக ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை தேர்வு செய்தார்கள். மேலும் இந்த மாநாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படுவதால் கட்சித் தலைவர்களின் படங்களையோ, கொடியையோ மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று கருணாநிதி தி.மு.க. தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். டெசோ மாநாடு தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கடைசி கட்ட பரபரப்புக் காட்சிகள் டெசோ மாநாட்டிற்கு வலுசேர்த்தன என்றுதான் சொல்ல வேண்டும். டெசோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைத் தமிழர்களை கண்காணிப்போம் என்று இலங்கை அரசு மிரட்டியதால் டெசோ மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் தனது பங்குக்கு தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த கருணாநிதி, ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கான இந்தா மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை உச்சரித்துதான் ஆக வேண்டும் என்று கூறினார். மாநாட்டில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை வெள்ளிக்கிழமை நள்ளிரவு அறிவித்தது. சனிக்கிழமை மாநாட்டிற்கு அனுமதி கோரியும், காவல்துறை ஆணையாளரின் தடையுத்தரவை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட 8000 பேருக்கு மேல் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், டெசோ மாநாட்டிற்கு அனுமதி கேட்டவரும் தடையை நீக்கக் கோரும் வழக்கை தொடுத்தவரும் வேறுவேறு நபர்கள் என்பதை சுட்டிக்காட்டி வழக்கை நிராகரித்தார்கள். இதற்கிடையில் ஈழம் என்ற வார்த்தைக்கு தந்த தடையை காங்கிரஸ் விலக்கிக்கொண்டது. மாநாடு நடந்த 12ம் தேதி காலை, பரபரப்பு நாடகங்கள் உச்சகட்டம் அடைந்தன. தி.மு.க.வின் வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு நீதிபதிகள் மீண்டும் விசாரித்தார்கள். மாநாட்டில் 8000 பேருக்கும் மேல் கலந்து கொள்ளக்கூடாது, ஒலிபெருக்கி, பேனர் ஆகிய விஷயங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து மாநாட்டிற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள். காலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பேசிய கருணாநிதி, 2009ம் ஆண்டில் தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது இந்திய வெளியுறவுத் துறையும், இலங்கையும் போர் நின்றுவிட்டதாக தனக்கு உறுதியளித்ததால்தான் தனது உண்ணாவிரதத்தை கைவிட நேர்ந்ததாக தெரிவித்தார். ஆனால் அப்போது பொய்யானத் தகவலை கூறி இலங்கை அரசு, இந்தியாவை ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மாலையில் நடந்த மாநாட்டில் பேசிய கருணாநிதி, தற்போதைய தேவை இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலுதவிதான் என்றும், தான் காணும் கனவான தமிழீழம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் கூறினார். ஈழத் தமிழர்களுக்கு உதவ தமிழகம் என்றும் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநாட்டில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோரும் பேசினார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் தரவேண்டும், டெசோ மாநாட்டை தடுக்க நினைத்த அ.தி.மு.க. அரசை கண்டிப்பது, போர் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்பன போன்ற 14 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தடைகள் அனைத்தையும் மீறி டெசோ மாநாடு வெற்றி பெற்றதாகவும், 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் ஆயவரங்கில் பங்கேற்றதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தமிழர்களுக்கு உலகில் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் தமிழர் பிரதிநிதிகள் ஒன்றுசேர்வார்கள் என்பதை டெசோ மாநாடு நிருபித்திருக்கிறது. ஆனால் இந்த மாநாடு ஏற்படுத்திய விளைவு என்ன என்பது இனிமேல்தான் தெரியவரும்.

No comments:

Post a Comment