Thursday, August 9, 2012

எண்ணமும் கோபமும் - நீதிக்கதை

ஒரு ஊரை அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தினசரி தேரிலேறி நகர்வலம் வருவான். அவன் நகர்வலம் வரும்போது மக்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செல்லுவார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் திரும்ப அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பான். அந்த மக்களில் ஒரு விறகு கடைக்காரனும் இருந்தான். அவன் கடையை அரசன் கடந்துப் போகும் போதெல்லாம் அவன் வணக்கம் சொல்லுவான். அரசனும் மனதில் மிகுந்த வெறுப்பாக பதில் வணக்கம் தெரிவிப்பான். அந்த விறகு கடைக்காரனை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும். ஆனால் அரசனுக்கு அதன் காரணம் தெரியவில்லை. தன்னுடைய அமைச்சரைக் கூப்பிட்டு, ‘‘அவனைப் பார்த்தால் மட்டும் எனக்கு வெறுப்பு வருகிறதே? என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். அமைச்சரோ இரண்டு நாள் கழித்து தான் பதில் சொல்ல முடியும் என்றுக் கூறிவிட்டார். இரண்டு நாள் கழித்து அரசன் வழக்கம் போல அந்த விறகு கடைக்காரனை கடந்து சென்றான். அவனுக்கு பதில் வணக்கம் சொல்லும் போது மகிழ்ச்சி பொங்கியது. அரண்மனைக்குத் திரும்பியவுடன் அமைச்சரை கூப்பிட்டு இந்த மனமாற்றத்திற்கு காரணம் கேட்டான். அமைச்சர் இப்போது பதில் கூறினார்: ‘‘அரசே! அந்த விறகு கடைகாரன் தன்னுடைய கடையில் நிறைய சந்தனக் கட்டைகளை இறக்கியிருந்தான். ஆனால் ஒன்று கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் இந்த சந்தனக் கட்டைகள் வியாபாரம் ஆக வேண்டுமென்றால் அரசன் சாக வேண்டும்; அப்போது மட்டும்தான் சந்தனக் கட்டைகள் விற்பனையாகும் என்று நினைத்துக் கொண்டான். அதே வெறுப்புடன் உங்களுக்கு மேலோட்டமான சிரிப்புடன் வணக்கம் கூறுவான். அதனால் உங்களுக்கு அவன் மேல் கோபம் வந்தது’’ என்றார். அரசனுக்கு ஒரே ஆச்சரியம். ‘‘அது சரி. இப்போது அவனை பார்த்தபோது மகிழ்ச்சி வந்ததே? அதற்கு என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். ‘‘நான் செய்த வேலைதான் காரணம் அரசே. நமது அரண்மனை வேலையாட்களுடன் அவனுடைய கடைக்கு போனேன். நம்முடைய அரண்மனையில் ராஜா பெரிய யாகம் ஒன்றை நடத்தவிருக்கிறார். அதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என்று சொல்லி அவனிடமிருந்த சந்தனக் கட்டைகள் அனைத்தையும் வாங்கி விட்டேன். மேலும் தேவைப்பட்டால் உனக்குத் தெரிவிக்கிறேன் என்றுக் கூறிவிட்டேன். இன்று அவன் உங்களைப் பார்க்கும் போது அரசன் நீண்ட நாள் வாழ வேண்டும். அப்போது தான் நிறைய யாகங்களை நடத்துவார். தனக்கும் வியாபாரம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டே உங்களுக்கு வணக்கம் கூறினான். அவன் மனதில் தங்களைப் பற்றிய நல்ல எண்ணம் ஓடியதால் உங்களுக்கும் அவன் வணக்கம் சொல்லும்போது மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று பெரிய விளக்கம் தந்தார் அமைச்சர். அரசன் அமைச்சரின் மதியூகத்தைக் கண்டு வியந்து அவருக்கு பரிசும் தந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? மாணவர்களான நமக்கும் இது பொருந்தும். நல்ல எண்ணங்களுடன் நண்பர்களைத் தேடினால் நமக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கெட்ட எண்ணத்துடன் பழகினால் கெட்ட நண்பர்களும், எதிரிகளும் தான் நமக்கு கிடைப்பார்கள்.

No comments:

Post a Comment