Thursday, February 25, 2010

விவசாயிகளின் நிலை

வணக்கம். 25-2-2010 தேதியிட்ட "புதிய தலைமுறை" இதழில் வாசகர் கா.கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம் படித்தேன். விவசாயிகளின் நிலைமை குறித்து வேதனை என்னையும் தொற்றியது. சந்தையில் தக்காளி விலை 4 ரூபாய் விற்றாலும் 40 ருபாய் விற்றாலும் விவசாயி கையில் கிடைப்பதென்னவோ ஒரே தொகை தான், அதுவும் அடிமாட்டு தொகையாக இருக்கும். "அவர்களும் மனிதர்கள் தானே?" என்று யாருக்கும் தோன்றுவதில்லை. ஆனால் காய்கறியோ, அரிசியோ, கரும்போ எது விலை உயர்ந்தாலும் விவசாயிக்கு தான் முதல் சாபம் தருகிறோம். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3000 ரூபாய் விவசாயிக்கு தர சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதுபற்றி "விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு கரும்பு டன் ஒன்றுக்கு 3000 ரூபாய் கேட்பது முட்டாள்தனம் தான்" என்று என் நண்பர் கூட வாதிட்டார். ஆனால் உண்மை நிலவரம் என்ன? கிலோ சர்க்கரை 12 ரூ.கு விற்றாலும் 42 விற்றாலும் விவசாயி பாதிக்கப்படவே செய்கிறான். கிலோ 12 ரூ. என்றே வைத்துக் கொள்வோம். 1 டன் சர்க்கரை விலை (12 X 1000) = ரூ.12000 /-. அதில் கால் வாசி பங்கு 3000 ரூ தந்தால் என்ன? - விவசாயிக்கு செலவு இல்லையா? உழைப்பு இல்லையா? கரும்பு விவசாயி என்றாலும் அரிசியை விலை கொடுத்து தானே வாங்க வேண்டும்? நகரங்களில் சாதாரண வேலைக்கு கூட அதிக லாபம் போட்டு கேட்கிறோம். ஆனால் உற்பத்தி செய்கிற விவசாயிக்கு செலவான தொகை கூட தர மறுக்கப்படுகிறது. என்ன அநியாயம் இது? கரும்பு விவசாயிக்கு மட்டுமல்ல, எல்லா விவசாயிகளுக்கும் இதே தேக்க நிலைதான்.
நம் நாட்டில் இன்னும் 65% மக்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த துறைகளை நம்பியே வாழ்கிறார்கள். அவர்களை புறக்கணித்து விட்டு 2020 - ல் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்? மாற்று திட்டம் தான் என்ன?.