Wednesday, December 5, 2012

புனிதப் புரட்டு - பால.கௌதமன்

முதல் இந்தியர் புனிதர் ஆகிறார் ! மண்ணின் மைந்தர் புனிதராகிறார் ! கன்னியாகுமரி மாவட்டத்தில் அமர்க்களப் பிரச்சாரம்! தேவசகாயம் பிள்ளை என்பவரை “புனிதர்” ஆக்குவதற்கான முதல் படியாக, அவரை “உயிர்த்தியாகி”” என்று போப்பாண்டவர் 2012-ம் வருடம் ஜூன் 28 அன்று அறிவித்தார். முன்னணிப் பத்திரிகைகள் இந்தச் செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டதுடன் ஏதோ இந்த அறிவிப்பால் இந்திய பூமியே புனிதப்பட்டு விட்டதாக எழுதத் தொடங்கிவிட்டன. இந்தப் புனிதப் பட்டமளிப்பு விழாவின் நோக்கம் என்ன? இந்த வரலாறு உண்மைதானா? யார் “உயிர்த்தியாகி”” ஆகிறார்? பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் ஐரோப்பாவில் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் போப்பாண்டவருக்காக, மதமாற்றத்தில் ஈடுபட்டு நாட்டைப் பிடிக்கும் படையில் சேர்ந்து பின்னர் மரணமடைந்த ஓர் போர் வீரன் தான் இந்த உயிர்த்தியாகி என்கிறார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதிரி டெர்டுலியன். "உயிர்த்தியாகத்தை மனமுவந்து புரியும் தியாகிகளின் தியாகமே, மற்ற மதத்தவர் கிறிஸ்துவராக மதம் மாறத் தூண்டுதலாக அமைகிறது." என்று சொல்லும் அவர், “உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் ரத்தம்தான், சர்ச்சின் விதையாகும் என்கிறார் [Source: http://en.wikipedia.org/wiki/Christian_martyrs ) இந்தப் பட்டமளிப்பின் நோக்கம் மதமாற்றமே! இதை மீண்டும் உறுதிப் படுத்துகிறார் போப் இரண்டாம் ஜான் பால். உறுதிப் படுத்துவதுடன் நின்று விடவில்லை, இந்த உயிர்த்தியாகிகளே வாட்டிகனின் நாடு பிடிக்கும் போர் வீரர்கள் என்று பெருமைப் படுத்தவும் செய்கிறார். முதல் ஆயிரம் ஆண்டுகளின் சர்ச்சானது, உயிர்த்தியாகம் புரிந்த தியாகிகளின் உதிரத்தால் உருவானது” என்றும், உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் பாரம்பரியத்தை மறந்து விடக் கூடாது என்றும் சொல்லும் போப் ஜான் பால் II, இந்தப் பெயர் அறியாத, யாரெனத் தெரியாத படை வீரர்களுக்கான அங்கீகாரத்தை, இறைப் பணியாகவே ஏற்று நடத்த ஊக்குவிக்கிறார். (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retrieved on 30.11.2012 ) இதில் கவனிக்க வேண்டிய வாசகம் என்னவென்றால் "முகம் தெரியாத படைவீரர்கள்" ("unknown soldiers" ) என்பதுதான். இந்த ”வீரர்கள்” இருப்பது எந்தப் படை? இது யாருக்காகப் போரிடும் படை? எந்த நாட்டைப் பிடிக்கிறது? எந்தப் பண்பாட்டை இது அழிக்கிறது? இதன் நோக்கம்தான் என்ன? மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கும் ஒருவனை உயர்த்துவது சமயம். இந்த ஆன்ம நெறித் தத்துவத்தை ஏற்றால் அது சமயம். ஆனால், சமயம் என்ற போர்வையில் நாடு பிடிக்கும் இந்தக் கூட்டத்தை சமயத்துடன் ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? மேலும், முன்பின் அறியாத நாடுகளுக்குச் சென்று, அந்த மண்ணின் மைந்தர்களை ஏமாற்றி, மிரட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயலும்போது இந்தப் “படை வீரர்கள்”” தன்மானமுள்ள மண்ணின் மைந்தர்களால் கொல்லப்படுவதுண்டு. அவ்வாறு கொல்லப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களைத்தான் கிறிஸ்தவ நிறுவனங்கள் “உயிர்த்தியாகிகள்”” என்று முன் நிறுத்துகின்றன. இதே போப் ஜான் பால் II, முதலாம் ஆயிரம் ஆண்டில் ஐரோப்பாவை மாற்றிவிட்டோம். இரண்டாவது ஆயிரமாண்டில் அமெரிக்காவை மாற்றினோம். நடக்கும் ஆயிரமாண்டில் ஆசியாவை மதம் மாற்றுவோம் என்று கொக்கரித்தது நினைவுகூரத் தக்கது. இந்த ஆன்ம அறுவடைக்காக கத்தோலிக்க சர்ச்சுக்கு டெர்டுலியன் பாதிரியார் சொன்னதுபோல், உயிர்த்தியாகிகள் தேவைப்படுகின்றனர். அதற்காக, கேரளா, தமிழகம், வட இலங்கை போன்ற பகுதிகளில் உயிர்த்தியாகிகள் உள்ளனரா என்று தோண்டியெடுக்கும் பணியில் சர்ச் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதனை கோட்டார் மறைமாவட்டத்தினால் நிர்வகிக்கப்படும் வலைதளத்தில் கிறிஸ்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். "இந்த உயிர்த்தியாகம் புரிந்தவர்களின் நினைவுகளை மறவாதிருக்க, அவர்களின் சாகஸத்துக்கான சான்றுகளையும், தியாகம் குறித்த தரவுகளையும் பதிவுகளாக்குவதே உகந்த வழி என்று அவர் (போப் ஜான் பால் II ) கருதுகிறார். ” (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) இந்தத் தோண்டுதலில் சிக்கியவர் தான் வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை. கிறிஸ்துவத் திருச்சபைகளுக்குச் சொந்தமான வலைதளத்தில் தேவசகாயம் பிள்ளையின் “வரலாறு”” பின்வருமாறு சொல்லப்படுகிறது: தேவசகாயம் பிள்ளை 1712-ம் ஆண்டு உயர் ஜாதியான நாயர் சமுதாயத்தில் நீலகண்டப் பிள்ளை என்ற பெயரில் பிறந்தார். பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் பணியாற்றினார். அப்போது மார்த்தாண்டவர்ம ராஜாவின் தளபதியான டச்சுக்காரர் டிலனாயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் விளைவாக அவர் கிறிஸ்தவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1745ம் ஆண்டு வடக்கன்குளம் சர்ச்சில் பௌட்டாரி என்ற பாதிரியாரால் கிறிஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். கிறிஸ்துவராக மதம் மாறியதும் தேவசகாயம் பிள்ளை என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர், ஜாதி வேறுபாடுகளைக் கடந்து, அனைத்து தாழ்த்தப்பட்ட ஜாதியினருடனும் நெருங்கிப் பழகி, அந்த மக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றினார். இதனைப் பொறுத்துக் கொள்ளாத பிராமணர், நாயர் போன்ற ஆதிக்க சாதியினர் மன்னரைத் தூண்டி விட்டு, தேவசகாயம் பிள்ளை மீது அடுக்கடுக்காகப் பல புகார்களைச் சுமத்தினர். இதன் விளைவாக தேவசகாயம் பிள்ளை 1749, பிப்ரவரி 23ம் தேதி கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை மூன்றாண்டு காலம் தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார். பிறகு, நாகர்கோவில் திருநெல்வேலி சாலையில் உள்ள ஆரல்வாய்மொழிக்கு அருகே காத்தாடி மலையில் மார்த்தாண்டவர்ம ராஜாவின் காவலர்களால் 1752ம் வருடம் ஜனவரி 14ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். (http://www.martyrdevasahayam.org & http://cbci.in/FullNews.aspx?ID=648 ) (Retrieved on 30.11.2012) இந்த வரலற்றை வெளிக்கொணர்வதின் பயன் என்ன? கோட்டார் மறைமாவட்ட வலைதளம் அதை பின் வருமாறு தெளிவு படுத்துகிறது. “கடந்த 259 ஆண்டு காலத்தில், இந்த இறை சேவகர் (தேவசகாயம் பிள்ளை) தமிழ்நாடு, தெற்கு கேரளம், வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில், வழிபாட்டில், ஆன்மீகத்தில், பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக, அவரை அந்தப் பகுதிகளின் ‘பெயரறியாத, முகம் தெரியாத படைவீரர்களோடு’ சேர்க்க முடியாது. ஆனால், சர்ச்சால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், சர்ச்சின் அதிகாரப்பூர்வமான ஏற்பு நிலை இல்லாத சூழலிலும், இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை, சர்ச்சுக்கோ, சமுதாயத்துக்கோ பலனளிக்கும் வகையில் செயல்படுத்த முடியாது.” (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) "இத்தகைய பொருள்பொதிந்த நிகழ்வை சர்ச்சுக்கோ சமுதாயத்துக்கோ பயனளிக்க” - அப்படி என்றால், தேவசகாயம் சர்ச்சுக்கான ஒரு வியாபாரப் பொருள். இதில் எந்த ஆன்மிக நோக்கமும் இல்லை என்பதை சர்ச்சே தெளிவு படுத்திவிட்டது. எந்தப் பகுதிகளில் இவர் பயன்படுத்தப்படப் போகிறார்? "தமிழ்நாடு,தெற்கு கேரளம்,வடக்கு இலங்கை ஆகிய பகுதி மக்களின் நினைவுகளில்,வழிபாட்டில்,ஆன்மீகத்தில்,பிரார்த்தனையில் நீக்கமற நிறைந்திருப்பதன் காரணமாக" என்கிறபகுதி விளங்கி விட்டது,ஆனால் எப்படி என்று தெரியுமா?இதன் மூலம் எந்த பண்பாட்டு அடையாளத்தை அழிக்கப்போகிறார்கள் என்று தெரியுமா? இதற்கான பதிலை நாகர்கோவிலில் டிசம்பர் 2 , 2012அன்று தேவசகாயம் பிளையை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று அறிவித்த விழாவில் கிறிஸ்தவர்களே வெளிப்படுத்தியுள்ளனர். தேவசகாயம் பிள்ளை வேதசாட்சி நிலை அடைந்த ஜனவரி14ஆம் நாளை,தேவசகாயம் பிள்ளை திருவிழாவாகக் கோண்டாட,கார்டினல் அமடொ அனுமதி அளித்துள்ளார்.இதில் கவனிக்க வேண்டிய நாள்,ஜனவரி14.பெரும்பாலும் அன்றுதான்,தமிழகம்,வட இலங்கை மற்றும் தெற்கு கேரளத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டு தோரும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.சபரிமலை மகர ஜோதியும் அன்று தான் தோன்றுகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவ பிஷப்புகளின் கூட்டமைப்பின் (CBCI) வலைதளம்,தேவசகாயம் பிள்ளை ஜனவரி14அல்லது15ல் கொல்லப்பட்டார் என்கிறது(http://cbci.in/FullNews.aspx?ID=648) (Retrieved on 30.11.2012).காரணம்,தை மாதப் பிறப்பு அவ்வப்போது ஜனவரி15ஆம் நாளும் வரும்.இதன் மூலம்,பொங்கல் பண்டிகைக்குள் ஊடுறுவி மதமாற்றம் செய்யும் திட்டம் தெளிவாகிறது. பல கிறிஸ்தவப் பண்டிகைகள்,இவ்வாறு பல நாட்டு உள்ளூர் திருவிழாக்களை பின்பற்றி ஏற்பட்டவை. ஆனால் அந்தத் திருவிழாக்களின் காரணிகளும்,பண்பாட்டு அடையாளங்களும் இந்த கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது என்பதற்கு வரலாறே ஒரு சாட்சி.இந்த வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால்,இந்த தேவசகாயம் பிள்ளை திருவிழா,பொங்கலின் பாரம்பரியத்தை அழிக்க வந்த சூழ்ச்சி என தெளிவாகிறது. மதமாற்றம் மட்டுமல்லாமல் இதில் புதைந்திருக்கும் அரசியல் நோக்கத்தையும் ஒளிவு மரைவில்லாமல் வெளிப்படையாக்குகிறது கோட்டார் மறை மாவட்ட இணையதளம். அதில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது: லூர்தில் ஜான் பால் II நிகழ்த்திய உரையின் போது, அவர் உலகெங்கும் பரவி வரும் புதிய வகை சமய ரீதியான கொடுமை குறித்துப் பேசினார். இது இந்தியாவில் இன்று உண்மையாக இருக்கிறது. ஹிந்து அடிப்படைவாதிகளால் இன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சூழல் நிலவுகிறது, இவர்களை சில அரசியல் அமைப்புகள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக முழுமையாக ஆதரிக்கிறார்கள். இந்திய சர்ச் ஏற்கெனவே “கொடுமையை எதிர்நோக்கும் காலத்தை” சந்திப்பதைப் போல இருக்கிறது.” (Source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) அரசியலுடன் நின்றுவிடாமல், கிறிஸ்துவம் புகும் நாடுகளின் மண்ணின் வாசனைக்கேற்ப பல அவதாரங்களை எடுத்து, உள்நாட்டு மக்களை மதம் மாற்றி, அவர்கள் பண்பாட்டில் இருந்து அவர்களைப் பிரித்து, சர்ச்சின் ஆதிக்கத்தின் கீழ் அவர்களை கொண்டு வரும் சூழ்ச்சியானது இந்த தேவசகாயம் பிள்ளை உயிர்த்தியாக பட்டமளிப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று கோட்டார் மறை மாவட்ட வலைதளம் தன் இயல்பை பின்வருமாறு வெளிக்காட்டுகிறது: இந்த உயிர்த்தியாகத்தை இன்று பொருள் உள்ளதாக ஆக்கும் வேறு ஒரு விஷயம் என்னவென்றால், Ad Gentes சர்ச்சின் நோக்கத்தில் பாமர மக்கள் ஆற்ற வேண்டிய பங்குதான்! பாமர மக்கள் சர்ச்சை சார்ந்தவர்கள்” மட்டுமல்லர், உண்மையிலேயே, அவர்கள்தான் சர்ச்சும்கூட”. எனவேதான் பாமர மக்களின் கலாசாரங்களை உள்வாங்கிக் கொள்வது பற்றிப் பேசுவது, இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால், உலகில், சர்ச்சின் இயல்பே மதத்தைப் பரப்புவது ! அதே போல சர்ச்சின் மத விரிவாக்கம் என்பது, சர்ச்சின் இயல்பான ஒன்றாகவே வெளிப்படுகிறது”. (source: http://www.martyrdevasahayam.org/RELEVANCE-OF-MARTYRDOM.php retreived on 30.11.2012) இப்படி மதமாற்ற நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்ட இந்தப் பட்டமளிப்புகள் எல்லாம் ஏதோ ஒரு உண்மையான வரலாற்றின் அடிப்படையில்தான் உருவானது என்று பெருவாரியான அறிஞர்கள் நினைக்கக் கூடும். அதிலும் மண்ணின் மைந்தர், பாமரன், பாட்டாளி என்ற சொற்களையும் சேர்த்துவிட்டால், அந்தந்த ஊர்காரர்கள் பரவசமடைந்து விடுவார்கள்; உண்மையை அறிய நாட்டம் கொள்ள மாட்டார்கள் என்பது சர்ச்சுக்கு நன்றாகவே தெரிந்த விஷயம். ஆனால், ஆராய்ந்து பார்க்கும்போது இந்த மண்ணின் மைந்தரின் கதை உண்மைக்குப் புறம்பானது என்பது நமக்குத் தெரியவருகிறது. புகழ்பெற்ற கேரள வரலாற்று ஆசிரியரான திரு. ஏ.ஸ்ரீதர மேனன் 20.1.2004 அன்று பயனிர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "மரண தண்டனையை விட்டுவிடுங்கள், திருவிதாங்கூர் வரலாற்றில் மதமாற்றத்தின் பெயரால் ஒரு சிறு தண்டனை வழங்கப்பட்டதாகக்கூட பதிவு செய்யப்படவில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனைக் கதையே." என்று ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக இருந்த திரு.எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள், நீலகண்டம்பிள்ளை என்ற பெயரிலோ தேவசகாயம்பிள்ளை என்ற பெயரிலோ மார்த்தாண்டவர்ம மகாராஜா காலத்தில் ஒரு ராணுவத் தளபதி இருந்ததில்லை என்று வாதிடுகிறார். திருவிதாங்கூர் வரலாற்றை எழுதிய திரு.நாகம் ஐயா, இந்தக் கதை நம்பும்படியாக இல்லை என்றும், மதம் மாறியவர்கள் அவர்கள் முன்னோர்களை குருமார்களாக சித்திரிக்கும் பழக்கம் நம் நாட்டில் வழக்கம்; அதனடிப்படையில்தான் இந்தக் கதை புனையப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். (Travancore Manual Vol II page 129-130, M.Nagam Aiya) இந்தக் கதையில் கிறிஸ்துவர்கள் திருவிதாங்கூர் மன்னரால் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை நிலை நிறுத்த கற்பனையாளர்கள் பெருமுயற்சி எடுத்துள்ளனர். ஆனால், வரலாற்றுப் பதிவுகள் என்ன சொல்கிறது? மதம் மாறியதற்காக தேவசகாயம்பிள்ளை மார்த்தாண்ட வர்ம ராஜாவால் கொல்லப்பட்டார் என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் மார்த்தாண்டவர்ம ராஜா, வரப்புழா சர்ச்சுக்கு வரியில்லா நிலம் கொடுத்து உதவினார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai) டச்சுக்காரர் திலனாயால் கிறிஸ்துவத்தின்பால் தேவசகாயம்பிள்ளை ஈர்க்கப்பட்டார் என்று கிறிஸ்துவர்கள் கதை சொல்லுகின்றனர் . அந்த டச்சுக்காரர் திலனாய்க்காக கார்த்திகைத் திருநாள் மகராஜா உதயகிரிக் கோட்டை சர்ச்சைக் கட்டினார் என்றும் அந்த சர்ச் பாதிரிக்கு 100 பணம் மாதச் சம்பளமாகக் கொடுத்தார் என்றும் திரு. டி.கே.வேலுப்பிள்ளை திருவிதாங்கூர் வரலாற்றில் குறிப்பிடுகிறார். (Travancore Manual, Vol-I page 16, T.K.Veluppillai) இந்த மன்னர்கள் மதத் துவேஷம் கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்து ஆலயங்களை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஐரோப்பிய கிறிஸ்துவர்களான மன்றோ அவர்களுக்குக் கொடுத்திருப்பார்களா? நீலகண்டப் பிள்ளை மதமாறியதாகச் சொல்லப்பட்ட காலகட்டத்தில் கத்தோலிக்கர்களும்,பிரட்ஸ்டண்ட்களும் ஐரோப்பாவிலும்,பிற பகுதிகளிலும் எப்படி மோதிக்கொண்டனர் என்பது வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும். இந்த டச்சுக்காரர்கள் கொச்சி கோட்டையை கைப்பற்றியவுடன், வாஸ்கோடகாமாவை அடக்கம் செய்திருந்த “புனித அண்டோனியோ கத்தோலிக்க சர்ச்சை” “புனித ஃபிரான்ஸிஸ் பிராடஸ்டண்ட் சர்ச்” என்று மாற்றினர்.இன்றும் அந்த சர்ச் பிராட்ஸ்டண்ட் பிரிவான தென் இந்தியத் திருச்சபையின்(CSI)கீழ் உள்ளது.டச்சுக்காரரான டிலனாய் ஒரு பிராடஸ்டண்ட் கிறிஸ்தவர்.இவரது உதயகிரி சர்ச்,பிராடஸ்டண்ட் சர்ச்சாகத் தான் நிர்வகிக்கப்பட்டு வந்தது.மேலும்,டச்சுக்காரக்கள் அனைவரும் மதமாற்றத்தை அங்கீகரிக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர்.இப்படியிருக்க,நீலகண்டப் பிள்ளையை டிலனாய் ஏன் ஞானஸ்நானத்திற்காக கத்தோலிக்க சபைக்கு அனுப்ப வேண்டும்?அதுவும் அரசரின் தளபதி!தளபதியால் மதமாற்றப்பட்டால் லாபம் உண்டு.அதிகாரமில்லாத சர்ச்சால் மாற்றப்பட்டால் உயர் ஜாதி நீலகண்டப் பிள்ளைக்கு என்ன லாபம்? எனவே இந்த “தேவசகாயம் பிள்ளை” கதையைக் கட்டியவர்களுக்குதிருவிதாங்கூர் அரசியல்-சமூக சூழலும் தெரியாது,ஐரோப்பிய சூழலும் தெரியாது என்பது தெளிவாகிறது. திருவிதாங்கூர் படையில் மார்த்தாண்ட வர்ம ராஜா காலத்தில் ஈழவர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இருந்தனர் என்று கர்னல் வில்க்ஸ் தெரிவித்ததை திரு. வேலுப்பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். (Travancore Manual, Vol-IV page 122, T.K.Veluppillai) இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்துக்களுக்குச் சாதகமாகத்தான் எழுதுவார்கள், அதனால் இதை ஏற்க முடியாது, என்று கிறிஸ்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் சொல்வதை மட்டும் வரலாறாக நாம் ஏற்க வேண்டுமாம்! இதுதானே கிறிஸ்துவர்களின் நியாயம். சரி... அவர்கள் நியாயத்துக்கே வருவோம். ஜூலை 2 , 1774ல் போப் கிளமண்ட் XIV திருவிதாங்கூர் ராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "திருவிதாங்கூரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் அங்கத்தினர் மீது மன்னர் செலுத்திவரும் பரிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். (Travancore Manual vol-I page 387, M.Nagam Aiya), போப் கிளமண்ட் XIV பொய் சொல்கிறாரா? போப் ஜான்பால் II பொய் சொல்கிறாரா? கோட்டார் மறைமாவட்டம் பொய் சொல்கிறதா? அல்லது தற்போதைய போப் பெனடிக்ட் பொய் சொல்கிறாரா? தேவசகாயம் பிள்ளையை கிறிஸ்துவத்தின் பால் ஈர்த்த டிலனாய்க்காக, அஞ்சங்கோ தளபதியை எதிர்த்து மார்த்தாண்ட வர்மா மகாராஜா போர் தொடுத்தார்... என்ன காரணம் தெரியுமா? அஞ்சங்கோ தளபதியின் மகள் மீது டிலனாய் ஆசைப்பட்டு விட்டாராம். (Travancore Manual Vol II page 130, M.Nagam Aiya) இப்படி உற்ற நண்பனாக இருந்த டிலனாயின் நண்பரை மதமாற்றக் குற்றத்துக்காக மார்த்தாண்ட வர்ம ராஜா கைது செய்து கொடுமைப் படுத்தி சுட்டுக் கொன்றாராம்.. இதை நாம் நம்ப வேண்டுமாம்! இன்னும் சொல்லப்போனால் அந்த கிறிஸ்துவக் கதையில் டிலனாயுடன் தேவசகாயம் பிள்ளை நெருங்கிப் பழகுவதை மகாராஜாவின் அமைச்சரான ராமய்யன் தளவாய் விரும்பவில்லை என்றும், தேவசகாயம் பிள்ளை மீது ராமய்யன் தளவாயின் கோபத்துக்கு இது ஒரு காரணம் என்றும், அதனால் தான் ராமய்யன் தளவாயின் பழிவாங்கும் வெறி அதிகமானது என்றும் கிறிஸ்துவர்கள் தெருக்கூத்து நாடகத்தில் பாடி வருகிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை பொதுவாக ராஜதுரோகக் குற்றம், கொலை, வழிப்பறி போன்ற குற்றங்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. (Travancore Manual, Vol-IV page 77, T.K.Veluppillai). இந்த அடிப்படையில் திரு.நாகம் ஐயா அவர்களின் திருவிதாங்கூர் சரித்திரத்தை நாம் கவனிக்க வேண்டும். நீலகண்டப் பிள்ளையின் மீது அரசு ஆவணங்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். இது, அவர் மதம் மாறிய சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். இந்த தண்டனைக்கும் மதம் மாற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (Travancore Manual Vol-II page 130, M.Nagam Aiya) இந்தக் குற்றச்சாட்டு மதமாற்றத்துடன் நின்றுவிட்டால் இத்துடன் நாமும் நின்றுவிடலாம். “கீழ் ஜாதியினருடன் அவர் பழகியதன் காரணமாகத்தான் மேல் ஜாதியினர் அவர் மீது வெறுப்புற்றனர், அதனால் இவர் கொல்லப்பட்டார்”” என்று ஒரு ஜாதி அரசியலும் இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளது. ஜாதி பேசி ஹிந்து சமுதாயத்தைப் பிரித்து மதம் மாற்றும் தொடர் சூழ்ச்சியை இந்தக் கதையிலும் சர்ச்சு லாகவமாகப் புகுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஏற்றார்போல் ஒரு போலியான ஆதாரம்கூட சர்ச்சால் காட்டப்படவில்லை. தீண்டாமை ஒழிப்பில் கத்தோலிக்க சர்ச்சின் சேவையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் போப் கிரிகோரிXV யின் புல்லா ரொமனே செடிஸ் அன்டிஸ்டிடிஸ் (Bulla Romanae Sedis Antistitis) என்ற ஜனவரி 31, 1623 தேதியிட்ட ஆணையில் இந்திய சர்ச்சுகளில் ஜாதீய சம்பிரதாயங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். (ref: http://indiainteracts.wordpress.com/tag/christian-caste-system/ ) இது நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதற்கு சுமார் 120 ஆண்டுகள் முன்புதான். இதுவரை இந்த ஆணை திரும்பப் பெறவோ மாற்றப்படவோ இல்லை. இதனால் இந்திய சர்சுகளில் இன்றும் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது. ஆட்டுக்காக ஓநாய் அழும் கதையைப் பார்த்தீர்களா? ஏன், இந்த தேவசகாயம் பிள்ளை மதம் மாறியதாக சொல்லப்பட்ட வடக்கன் குளத்திலேயே, வெள்ளாள கிறிஸ்துவர்களும் ஒடுக்கப்பட்ட கிறிஸ்துவர்களும் ஒரே சர்ச்சுக்குச் செல்லமாட்டோம் என்று சொல்லி தனித்தனியாக அமரவில்லையா? ஜாதீய வேறுபாடுகளை ஒழித்துவிட்டோம் என்று மார்தட்டும் கிறிஸ்தவம், தேவசகாயம் பிள்ளையின் சொந்த சர்ச்சிலேயே இந்த நிலைமையை எப்படி அனுமதித்தது? தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்! ஆவணமாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும், முன்னுதாரணமாக வேண்டும்! எப்போது? அது தியாகமாக இருந்தால்! அது உண்மையாக இருந்தால்! இங்கோ நடக்காத சம்பவம் ஒன்று, நடந்ததாகக் கதை கட்டப்பட்டு, அதற்கு சமுதாயச் சீர்திருத்தம் போன்ற சாயம் பூசப்பட்டு, அப்பாவிகளை நம்பவைத்து ஏமாற்ற ஒரு அக்மார்க் முத்திரையை வாடிகன் வழங்கியுள்ளது. (போப் வழங்கியுள்ளார்). ஒரு பொறுப்பான, பல மதங்கள் சுமூகமாக வாழுகின்ற நாட்டில் உள்நோக்கத்துடன் கட்டுக் கதைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கொடுப்பது போப்புக்கு அழகா? இந்தப் படைவீரர்களை “தியாகிகள்”” என்று கௌரவித்து ஒரு சமுதாயத்தின் பண்பாட்டையும் ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் அழிப்பது சமயமா? சாகசமா? இந்தக் கேள்விகள் எல்லாம் போப்பிடம் கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கிறிஸ்துவப் படை வீரர் போப்பின் ஆட்சியை நிலைநாட்ட இறந்து போனால் அவர் உயிர்த்தியாகி. அதே படைவீரர் ஆக்கிரமிக்கும் நாடுகளில் உள்ளவர்களின் உயிரை எடுத்தால் அவர் புனிதர். இது தானே கிறிஸ்தவம்? பாரதத்தில் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தி பலவிதமான சித்ரவதைகளை மதம் மாற மறுப்பவர்களுக்கு அளிக்கும் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷன் (House of inquisition) நிறுவப்படவேண்டும் என்று கடிதம் எழுதியவர் ’புனித’ ஃபிரான்ஸிஸ் சேவியர், அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான அப்பாவிகளின் உயிரை பலிவாங்கிய கோவா ஹவுஸ் ஆஃப் இன்க்விஸிஷனை (Goa house of Inquisition) நிறுவ மன்னர் ஜான்-III க்கு 1545ல் கடிதம் எழுதியவர் ஃபிரான்ஸிஸ் சேவியர். (http://en.wikipedia.org/wiki/Goa_Inquisition ) இன்று ஃபிரான்ஸிஸ் சேவியர் புனிதர்! இவர் பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் ஒரு தேவாலயம்! தமிழகத்தின் பிற பகுதியிலும் வட இலங்கையிலும் பல தேவாலயங்கள் ! இன்று இந்த தேவசகாயத்தைப் புனிதராக அறிவிக்க வேண்டும் என்று துடிப்பதும் இந்தக் கோட்டார் மறை மாவட்டமே. ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை! இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் கணிசமான அளவு இந்துக்கள், கிறிஸ்துவர்களாக மதம் மாறியுள்ளனர். இன்று தென் தமிழகத்தில், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல பிரசாரங்களும், நம் நாட்டிற்கு எதிராக சூழ்ச்சியும் நடைபெறுகின்றன. போப்புக்காக கொலை செய்தவர் கணிசமான இந்துக்களை தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மாற்றிவிட்டார். மீதமுள்ள இந்துக்களை மாற்ற போப்புக்காக கொலையுண்ட (?) கிறிஸ்துவ வீரரை தயாராக்குகிறது கிறிஸ்துவ சர்ச். இந்த கிறிஸ்துவ நோக்கத்துக்காக நம் நாட்டு மன்னர் மத வெறியனாக்கப்பட்டுள்ளார். நம் சமுதாயம் பிற்போக்குச் சமுதாயமாக ஜோடிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் ஈவு இரக்கமற்ற இரத்தக் காட்டேறிகளாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று மோசடி நடத்தப்பட்டுள்ளது. விளைவு- மண்ணின்மைந்தர் தியாகி, புனிதர் என்ற ஜால வார்த்தைகளால் மண்ணின் மைந்தன் ஏமாற்றப்படுகிறான். இந்த மாதிரியாகக் கட்டுக்கதைகளைப் புனைந்து வரலாற்று மோசடிகளில் ஈடுபடுவது சர்ச்சுக்கு கைவந்த கலை. தமிழ்நாட்டிலேயே இதற்கு சான்று உண்டு. மயிலைக் கடற்கரையில் வந்திறங்கிய புனித தாமஸ் கதைதான் அது. வரலாற்றில் இல்லாத “தாமஸ்”” என்கிற மனிதனை உருவாக்கி அவனை சென்னையில் தங்கவைத்து அவன் ஒரு பிராம்மணப் புரோகிதரால் கொல்லப்பட்டான் என்று கட்டுக்கதை புனைந்து, அவனுடைய எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இன்றைய சாந்தோம் தேவாலயத்தில் இருக்கிறது என்கிற புளுகுமூட்டைகளையும் அதில் சேர்த்து வைத்த கத்தோலிக்க சர்ச்சுக்கு தென் தமிழகத்தில் மற்றொரு கதை புனையவா தெரியாது? ”புனித தாமஸ்”” போன்ற புனைவுதான் “தேவசகாயம்”” வரலாறும். உண்மையில் சொல்லப்போனால் ஏசு என்று ஒருவர் இருந்ததற்கே இவர்களிடம் ஆதாரம் கிடையாது. அதனால் தான் தற்போதய போப் திரு பெனெடிக்ட், “ஏசுநாதர், நாம் நினைத்ததை விட சுமார் 200 முதல் 500 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருக்கலாம்” என்கிறார். அப்படியென்றால், ஏசு பிறப்பை சுமார் 2050 ஆண்டு என்ற அடிப்படையில் சர்ச்சால் நிரூபிக்கப்பட்ட சாகசங்கள் புளுகுமூட்டைகள்! ஆக, இவர்களுடைய மொத்த சரித்திரமே புனைவுதான். மூவேந்தரும் கடையேழு வள்ளல்களும் போற்றிப் பின்பற்றி வந்த மரபை அழித்தொழிக்கும் வாடிகன் படைவீரர்களுக்கு, நாடுபிடிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் பாராட்டும் விருதும் நம் தமிழகத்தில் நடைபெறுவது முறைதானா? இனவுணர்வைப் பற்றி வாய்கிழியப் பேசும் அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் இந்த இழி செயலுக்கு துணைபோவது சரிதானா? தமிழ் மீதும் பண்பாடு மீதும் பற்றுள்ளவர்கள் இந்தப் புனிதப் புரட்டை முறியடிக்க அணிதிரள வேண்டும்!

Sunday, November 25, 2012

மிருக வதைப் பூங்கா


'இந்தப் படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை' - இது விலங்குகளைப் பயன்படுத்தும் எல்லாப் படங்களிலும் இடம்பெற்றாக வேண்டிய சட்டபூர்வமான அறிவிப்பு. விலங்குகளை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களில் இந்தச் சான்றொப்பம் அவசியம் இடம்பெற வேண்டும். அரசுக்கு விலங்குகள் மீது இத்தனை கரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வண்டலூரில் நடப்பதைப் பார்த்தால் இது ஊருக்குத்தான் உபதேசம் என்று தோன்றுகிறது. வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று இறந்தது. திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் அது மரணம் அடைந்ததாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த யானை சரியாகச் சாப்பிடாததே மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என அந்தச் செய்தி தெரிவித்தது. பூங்காவில் மிருகங்களுக்கு உணவிடுவதற்காகக் கொள்முதல் செய்யப்படும் மாமிசத்தின் அளவு ஒரு நாளைக்கு 80 கிலோதான். அதைத்தான் அங்குள்ள எல்லா மிருகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். அங்கிருக்கும் முதலையின் உணவுத் தேவை மட்டுமே 80 கிலோ மாமிசம் என்பதை கவனிக்க வேண்டும். இதில் மற்ற மிருகங்களுக்குக் கொடுத்த பிறகு முதலை சாப்பிடும் உணவு 2 கிலோ மட்டுமே. எல்லா மிருகங்களுக்கும் இதே கதிதான். கடல் கழுகு என்ற மிருகம் கடல் நீரில் மட்டுமே வாழும். இங்கே அதற்கு நீரே காண்பிக்கப்படுவதில்லை என்பது கண்ணில் நீரை வரவழைக்கிறது. இதெல்லாம் போதாதென்று இன்னொரு கொடூரமும் நடக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை. செவ்வாயன்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். திங்கட்கிழமை மதியம் சாப்பிடும் மிருகங்களுக்கு அடுத்தது புதன் மதியம்தான் உணவு வைக்கப்படுகிறது. அதுவரை கொலைப் பட்டினி. இது மிருக வதை இல்லை என்றால் வேறு எது மிருக வதை? அதிர்ச்சி தரும் இந்தத் தகவல்கள் அரசல் புரசலாகப் பேசப்படுபவை அல்ல. பிரபலமான நாளிதழில் வந்தவை. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மன்னிக்க முடியாத அலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பாதுகாக்க முடியாவிட்டால் அந்த விலங்குகளைக் காட்டில் விட்டுவிடலாம். மாபெரும் அறிவியல் பூங்கா என்னும் பெருமையைக் காப்பதற்காக விலங்குகளைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டாம்.

Saturday, November 24, 2012

தாக்கரே மறைவு ஏற்படுத்திய சலனம்

சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த 17ஆம் தேதி மாலை காலமானார். 86 வயதான தாக்கரே, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வருடந்தோறும் தசரா திருவிழாவின் போது தொண்டர்களிடையே உரையாற்றுவது அவரது வழக்கம். கடந்த மாதம் அவரால் நேரில் வரமுடியாததால் ஒளிப்படத்தில் தோன்றி பேட்டியளித்தார். அப்போது தனக்கு பின்னால் தனது மகனும் சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும், பேரன் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு தொண்டர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரசியல் கார்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவக்கிய பால் தாக்கரே, 1966இல் சிவசேனைக் கட்சியை நிறுவினார். மேலும் ‘சாம்னா’ என்ற பத்திரிக்கையைத் துவக்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் நடந்த மாநாட்டிலேயே 5 லட்சம் மக்கள் திரண்டார்கள். 1980களில் இருந்து சிவசேனைக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. 1990களில் பா.ஜ.க.வுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்றாலும் பால் தாக்கரே தான் நிஜ முதல்வர் என்ற பேச்சு கிளம்பியது. தீவிரமான மகாராஷ்ட்ர வெறியராகவும், அதே நேரத்தில் சிறந்த நாட்டுப்பற்றுமிக்கவராகவும் தாக்கரே விளங்கினார். தீவிர இந்துத்துவவாதியாகவும் அவர் திகழ்ந்தார். எந்த சமயத்திலும் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ‘மும்பை மாநகரம் மராட்டியருக்கே’ என்ற கோஷத்துடன் மும்பையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் 1993இல் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்கு பால் தாக்கரேவின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுதான் காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது. அருண் சால்வா போன்ற பல தாதாக்கள் சிவசேனையில் இணைந்ததால் அது தாதாக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ‘மும்பை அனைவருக்கும் சொந்தம்’ என்று பேட்டியளித்தபோது சிவசேனையின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிட்டது. காஷ்மீர் பிரச்சினை தீரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு கூடாது என்று வலியுறுத்தினார். காதலர் தினம் போன்ற அயல்நாட்டு கொண்டாட்டங்களை இந்தியாவில் கொண்டாட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 25 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க.வின் கூட்டணியில் சிவசேனை நீடித்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பால் தாக்கரே தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த இந்திய ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்ற தே.ஜ.கூட்டணியின் முடிவை மீறி மராட்டியர் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டிலை சிவசேனை ஆதரித்தது. பால் தாக்கரே தனது அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக அறிவித்தவுடன் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2006இல் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்து மாகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நிறுவினார். அவரது கட்சியும் மும்பையில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. பால் தாக்கரேவின் மரணத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள். பால் தாக்கரே இறந்தபோது மும்பை மாநகரம் மயான அமைதியாக காட்சியளித்தது. அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பால் தாக்கரேவின் மரணம் காரணமாக மும்பை நகரம் ஸ்தம்பித்து நின்றதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ரேணு சிங், ஷகீன் தாஹா என்ற இரண்டு பெண்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைது சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலை மக்கள் ஏற்பார்களா?

வரும் 2014ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கு ஆயுத்தமாவதற்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. அதன் தலைவராக காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் வரும் தேர்தலில் காங்கிரசை கரையேற்றுமா அல்லது வீழ்த்தி விடுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவரும். கடந்த 2004ஆம் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமராக முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக முமொழிந்தார். அப்போது எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர மறுத்தார். ஆனால் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து பிரதமர் பதவியேற்க வலியுறுத்தி வருகிறார்கள். 2009இல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது ராகுல் காந்தியை பிரதமராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ராகுல் மறுத்துவிட்டார். கடந்த 3 வருடங்களாக ஆட்சியில் நடந்துள்ள ஏராளமான ஊழல்கள் வெளிவந்து காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அண்ணா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் ஊழலுக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுவந்த திருணமூல் காங்கிரஸ் கட்சி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. மேலும் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் குழு மேலாளராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரசை ராகுல் காந்தி வழிநடத்தினார். அவர் தேர்தல் பொறுப்பேற்ற மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துவிடவில்லை. குறிப்பாக அவர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும் உத்தர பிரதேசம், பீகார் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தியை தேர்தல் பிரிவு மேலாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தயக்கம் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. தற்போது நிலவும் சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிடுமானால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மக்கள் மறுத்துவிட்டார்கள் என்ற எண்ணம் வலுப்படும். இப்போதைய சூழலில் காங்கிரசுக்கு நேரு குடும்பத்தை விட்டால் வழியில்லை. அதனால் காங்கிரஸ் இம்முறை கவனமாக களமிறங்குகிறது. பிரதமர் பதவியில் ராகுல் அமருவாரா மாட்டாரா என்பதற்கு மக்களிடம் தான் பதில் இருக்கிறது.

Friday, November 23, 2012

நுகர்வோர் பாதுகாப்பில் அலட்சியம்

நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஒருபுறம் ஈடுபட்டாலும் இன்னொரு பக்கத்தில் அரசின் முயற்சிகளை நசுக்கும் விதத்தில் அரசு நிறுவனங்களே நுகர்வோரைக் காயப்படுத்துகின்றன. அதிலும் ஆசியாவில் மிகப் பெரிய நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழும் ரயில்வேயில் ஏராளமான அலட்சியங்கள் நடக்கின்றன. விஷயம் இதுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் என்பவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுக்காகச் சென்றிருந்தார். தன் பயணம் தொடர்பாக அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது டிக்கெட் கொடுப்பவருக்கும் அவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேச்சு முற்றிப் போய் வார்த்தை தடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் வசந்தகுமாரை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார்கள். வசந்தகுமார் ரயில்வே துறையில் பணியாற்றும் மேலதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார். பலன் இல்லை. குமார் விடவில்லை. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வரையில் புகார் தெரிவித்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. வசந்தகுமார் வழக்கறிஞர். உயர் தீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், இந்த புகாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறையைக் கடுமையாக எச்சரித்துள்ளார். நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு அரசுப் பணியாளர்களுக்குக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கட்டாயம் இருக்க வேண்டும். 'நுகர்வோரே முக்கியமானவர்' என்று கூறினார் மகாத்மா காந்தி. ஆனால் சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் கழித்தும் நுகர்வோர் நலன் பற்றிய பொறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்படாதது கவலைக்குரிய விஷயம். சேவைகளில் குறைவு ஏற்பட்டால் நுகர்வோருக்குக் கோபம் வருகிறது. ஆனால் மக்களில் பலர் அவமானம் ஏற்பட்டாலும் கூச்சத்தால் மௌனமாக இருக்கிறார்கள். நுகர்வோர் உரிமைக்காக யாராவது குரல் கொடுத்தால் அவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை அமைப்பின் மீது இருக்கும் அவநம்பிக்கையும் செயல்படுவதில் உள்ள சுணக்கமுமே இதற்குக் காரணம். ஆனால் முனைப்புடன் செயலாற்றி மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நமது அடிப்படை உரிமைகளில் சுணக்கம் ஏற்பட்டால் தைரியமாகக் குரல் எழுப்பும் சூழல் உருவாக வேண்டும். (சென்னை சலனங்கள் - 1)

குழந்தைகளை பிச்சை எடுக்க விடலாமா?

கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்தது. அந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவர் கூறிய தகவலைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். அந்த குழந்தை அக்டோபர் 29ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் பிறந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு விதவை. இந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்தது என்பதாலும், அந்தத் தாய் ஏழை என்பதாலும் அதை விற்றுவிட முயற்சித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அப்போது முனியம்மா என்பவரிடம் 1000 ரூபாய்க்கு விற்க முயற்சி செய்திருக்கிறார். முனியம்மா பேரம் பேசி நூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். கடந்த மாதம் நாளிதழ்களில் வெளிவந்த மற்றொரு செய்தியும் இதன் தொடர்பில் கவனிக்கத் தக்கது. ராயபுரம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு குழந்தை தொலைந்து போனது. விசாரணையில் குழந்தை பிறக்காத ஏக்கத்தால் ஒரு பெண் திருடியதாகத் தெரியவந்தது. இந்த குழந்தையின் தாய் குழந்தையைக் காணாமல் தவித்தப்போது மருத்துவமனையின் டாக்டரும், நர்சுகளும் அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளார்கள். குழந்தையை விற்பது, திருடுவது இரண்டும் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. வசதி அற்ற பிரிவினரில் பெரும்பாலான குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருகிறது. அலட்சியம், கண்காணிப்பின்மை, எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழல் ஆகியவையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற சம்பவங்களைத் தொடர விடாமல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்ட வேண்டும். அங்குள்ள பணியாகளின் பொறுப்புணர்வைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதைத் தடை செய்வது இதுபோன்ற குற்றங்களைக் களைய உதவும். குழந்தை தொழிலாளர் போன்று இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தையை வைத்து பிச்சையெடுப்பவர்கள் மீது சந்தாகம் எழுந்தால் அமைதியாகக் கடந்து செல்லாமல் குழந்தைகளுகு உதவுவதற்கான இலவச அழைப்பு எண் 1098ஐ அழைத்துத் தகவல் அளியுங்கள். ஒரு குழந்தையின் வருங்காலத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். (சென்னை சலனங்கள் - 2)

சவீதா விவகாரம் நடந்தது என்ன?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளிகள் வசித்து வருகிறார்கள். சில நாடுகளின் சட்டதிட்டங்கள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தப்ப முடிவதில்லை. சமீபத்திய உதாரணம் சவீதா. இப்போது சவீதாவின் கதையைப் படிப்போம். அயர்லாந்தில் வசித்த பெண் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர். அவர் சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அதனால் சவீதா முழுமையாக கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக மருத்துவர்களை அணுகினார். சவீதாவும் ஒரு மருத்துவரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் அமலில் உள்ளதால் கருக்கலைப்பு செய்ய ஐரிஷ் நாட்டு மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். கருவின் மூலமாக விஷம் பரவியதால் சவீதா செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டிலும் கருக்கலைப்பு எதிரான போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. கருக்கலைப்பு விதிகளை தளர்த்தக்கோரி அந்நாட்டு தலைநகரம் டப்ளினில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், லண்டனில் உள்ள அயர்லாந்து தூதரகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இந்த மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அயர்லாந்து அரசை தொடர்புக் கொண்டது. அதன் காரணமாக சவீதாவின் மரணம் குறித்து 7 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விசாரணை குழுவில் சவீதாவுக்கு சிகிச்சையளித்த கால்வே மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் இருப்பதால் நியாயமான விசாரணை நடக்காது என்று சவீதாவின் கணவர் பிரவீண் ஹலப்பனாவர் கூறினார். இதையடுத்து அந்த மூன்று பேரையும் குழுவில் இருந்து நீக்குமாறு அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு மறுப்புச் சட்டத்தை உடனடியாக திருத்த முடியாது என்றாலும் திருத்தம் கொண்டுவர பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் ஒரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வது பாவம் என்று கத்தோலிக்கர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் சட்டங்களில் எதிரொலிக்கிறது. இதனை அமல்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை. யதார்த்த உணர்வற்ற இந்த சட்டங்களால் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் நமது நாட்டிலோ, வெளிநாட்டவர்களுக்கு கருணை காட்டப்படுகிறது. மேலும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களையும் பரந்த மனப்பான்மையோடு அணுகுகிறோம். இந்த சூழ்நிலை நமது சட்டங்களில் எதிரொலிக்கிறது. எனவே பாரதம், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்

Tuesday, November 20, 2012

ஒபாமாவின் வெற்றி

கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வருவதற்கு இந்த முறை அவர் போராட வேண்டியிருந்தது. 2008ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாகப் போட்டியிட்டார். கருப்பர் இன மக்களின் ஆதரவுள்ள ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு கருப்பருக்கும், முஸ்லிம் தாய்க்கும் பிறந்த ஒபாமா, 1996இல் நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் போது அரசியலுக்குள் நுழைந்தார். அமெரிக்காவில் சிறுபான்மையின மக்களான கருப்பர்களின் பிரதிநிதியாக ஒபாமா கருதப்பட்டார். மேலும் 2007ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்கப் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்ததால் ஒபாமா பொருளாதார சீர்த்திருத்தத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவை கடனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கப் போவதாக அறிவித்தார். முக்கியமாக, அவரது ‘நம்மால் முடியும்’ (YES WE CAN!) என்ற வாசகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கருப்பின மக்களின் வாக்குகள், சீர்திருத்தத்தை எதிர்பார்த்தவர்களின் வாக்குகள் ஒபாமாவிற்கு குவிந்ததால் 2008இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவிற்கு ஆதரவானவர் என்ற தோற்றமும் ஒபாமாவுக்கு இருந்தது. ஆனால் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தியாவிற்கு பாதகமான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன என்பதையும் சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினார்கள். கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் ஒபாமாவின் சாதனை என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை. உலகத்தை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனைக் கொன்றதை வேண்டுமானால் அவரது ஆட்சியில் நடந்த மிகப்பெரிய சாதனை எனலாம். என்றாலும் ஒபாமா பல முயற்சிகளை முன்னெடுத்தார். பல பிரச்சினைகளில் அமெரிக்காவை முற்போக்குப் பார்வைக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். உதாரணமாக ஓரினச் சேர்க்கைப் பிரிவினரின் பாதுகாப்பை ஒபாமா உறுதி செய்தார். கருத்தடைச் சாதனங்களை சட்டபூர்வமானதாக மாற்றினார். செப்டம்பர் 11, 2011க்குப் பிறகு அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகின. ஆனால் ஒபாமா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்தன. அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருந்த நேரத்தில் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது செயல்பாடுகள் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் சில சலனங்கள் ஏற்பட்டன. சிட்டி வங்கியை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்தது ஒபாமாவின் மதிப்பை அதிகரிக்கச் செய்தது. அமெரிக்காவில் பள்ளிக் கல்வியைப் பாதியில் விட்டு வெளியேறுபவர்கள் அதிகம். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வைக்கும் விதத்தில் அமெரிக்கப் பள்ளிக் கல்வியில் மாறுதல் கொண்டுவர ஒபாமா திட்டமிட்டுள்ளார். உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க செயல்முறை அயலாக்க நடைமுறையைத் தடை செய்தது போன்ற சில நடவடிக்கைகளை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அவர் அயலாக்கத்தை தடை செய்தது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு அயலாக்கப் பணிகளைத் தந்துவந்த பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு நேரடியாக வந்து நிறுவனங்களை ஆரம்பித்தன. அதனால் ஒபாமாவின் இந்தத் திட்டம் செல்லுபடியாகவில்லை. ஒபாமாவின் சறுக்கல்கள் என்று சொல்லக்கூடிய அளவில் ஏராளமான சம்பவங்கள் நடந்தன. ஈரான் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை அப்படியே தொடர்கிறது. லிபியாவில் அமெரிக்கா தலையிட்டதை உலகமே கண்டிக்கிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற மக்களின் எண்ணிக்கை 8 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும் ஒபாமாவுக்கு ஒரு கவலையும் இருக்கிறது. குறிப்பாக சோஷலிசப் பொருளாதாரம் தோல்வியடைந்த பிறகு ‘முதலாளித்துவம்’ என்ற பெயரில் அமெரிக்காவின் பொருளாதாரமே உலகத்தை ஆட்டிப் படைத்தது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த பின்னர், பல நாடுகள் தங்களது போக்கைத் தாங்களாகவே தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளை அமெரிக்காவின் பிடியில் வைத்திருந்தால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் சரியாகும் என்பது அமெரிக்க ஆட்சியாளர்களின் நம்பிக்கை. அதில் ஒபாமாவும் விதிவிலக்கல்ல. இதன் காரணமாகவே இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டைக் குறித்து அவர் கருத்துக் கூறினார். ஒருவேளை உலக நாடுகளின் பொருளாதாரங்கள் அமெரிக்காவைப் பின்பற்றாவிட்டால் தனக்கு அமெரிக்க வரலாற்றில் அழியாத அவப்பெயர் கிடைக்கும் என்பதுதான் ஒபாமாவின் கவலை. நடந்து முடிந்த தேர்தலில் இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று ஒபாமா பிரச்சாரம் செய்தார். அதைக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னி கடுமையாக சாடினார். இந்த முறை இன்னொரு வேடிக்கையும் நடந்தது. ‘ஒபாமா கருப்பு இனத்தவர், அவருக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மிட் ரோம்னியும் அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியினரும் பிரச்சாரம் செய்தார்கள். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதன் காரணமாக சில கருப்பினத்தவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்கவும் செய்தார்கள். ஒபாமாவின் இரண்டாவது வெற்றியை பிரம்மாண்டமானது என்று குறிப்பிட முடியாது. அமெரிக்க மக்கள் போனால் போகட்டும் என்று அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். இந்த முறை அவரது வெற்றிக்கு இனமோ அல்லது நிறமோ காரணமாக அமையவில்லை. சமீபத்தில் நடந்த சாண்டி புயலின் போது ஒபாமாவின் வேகத்தைக் குடியரசுக் கட்சியினர்கூட பாராட்டினார்கள். அந்த நிவாரணப் பணிகூட ஒபாமாவின் வெற்றிக்கு காரணமாக விளங்கியது. இனியொரு முறை ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைக்காது. ஒபாமாவிடம் உலகமே ஏராளமான விஷயங்களை எதிர்ப்பார்க்கிறது. குறிப்பாக உலக அமைதியில் அமெரிக்காவின் பங்கு தவிர்க்க முடியாதது. ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளுக்கும் அமெரிக்காவின் நட்பு முக்கியமானது. ஐ.நா. சபையிலும் அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் அமெரிக்க மக்களும் தங்களுடைய தலைவர்கள் உலகப் பெரும் தலைவர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகத்தின் சமாதானம் பற்றியும் விவாதிக்கப்படும். அதிபர் பராக் ஹுசைனி ஒபாமாவின் கருத்துக்கள் உலக சமாதானத்தை நிலைநாட்டுபவையாகக் கருதப்படுகின்றன. அவர் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே தனது கருத்துக்களின் மூலம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை விஷயத்தில் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் உள்ளன. உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்த சேனல் 4இன் காணொளி வெளியான பிறகு ஈழம் தொடர்பான அமெரிக்காவின் செயல்களில் வேகம் தெரிந்தது. ஆனால் 2009இல் நடந்த இனப்போர் சமயத்தில் தமிழர்களின் கதறலை அமெரிக்கா காதில் வாங்க மறுத்ததையும் அந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு உதவிகள் செய்ததையும் மறக்க முடியாது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத் தமிழர் பிரச்சினைகளில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு இரட்டை நிலையாகவே தெரிகிறது. ஒபாமா இந்த பிரச்சினையில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும் சமீப காலமாக உலக நாடுகள் அமெரிக்காவின் பிடியிலிருந்து கழன்று வருவதையும் கவனிக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒபாமா குறை கூறியிருக்கிறார். ஆனால் பல உலக நாடுகளை அணு ஆயுதத்தைக் காட்டி அமெரிக்கா மிரட்டியதையும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதையும் உலகம் இன்றுவரை மறக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை ஒபாமா முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் உலக சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கை ஓரளவாவது உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் மகத்தானவராக ஒபாமா வரலாற்றில் இடம்பெறுவார். அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியின் சிக்கித் தவிக்கிறது. அதோடு உலகம் இன்று பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. உலகின் ஒற்றை வல்லரசாக விலங்கும் அமெரிக்காவின் அதிபராக இந்தச் சமயத்தில் இருப்பது பெரும் சவாலான விஷயம். இதை வெற்றிகரமாக சமாளித்து சரித்திர நாயகனாக ஒபாமா விளங்குவாரா? அல்லது கால வெள்ளத்தில் கரைந்து போவாரா? பதிலை அறிவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

Thursday, November 15, 2012

துப்பாக்கி – திரைப்பார்வை

சாதாரணமாக நான் நடிகர் விஜய் நடித்த படங்களை பார்ப்பதில்லை. அவருக்கு நடிக்கத் தெரியாது என்ற கருத்து பரவலாக இருப்பதே அதற்கு காரணம். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தையும் முதலில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் முதல் நாள் படம் பார்த்த ஒரு நண்பர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறினார். இந்த படத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியும் வந்தது. சரி, படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது போல என்று தோன்றியது. உடனே அந்த படத்தை விஜய்க்காக இல்லாவிட்டாலும், ஏ.ஆர். முருகதாசுக்காகவாவது ஒருதடவை பார்த்துவிடலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறிவதற்காக இணையத்தில் பதிவு செய்து டிக்கெட் வாங்கினேன். இரண்டாவது நாள் இரவுக் காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. புறப்படுவதற்கு முன்னால் ஒரு நண்பன் போனில் கூப்பிட்டான். ‘படத்தில் முஸ்லிம்களை வெறுப்பேற்றும் வகையில் ஏதாவது தெரிகிறதா என்று பார்’ என்றான். ஆனால் இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால், படத்தில் முஸ்லிம்களை அவமானப்படுத்தும் காட்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் படம் வடமேற்குப் பகுதியிலிருந்து கதை நகர்கிறது. அந்த எல்லைப்புறத்தில் ஊடுருவல்காரர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அப்படி காட்ட நேரிடுகிறது. வில்லனுக்கு உதவும் போலிஸ் அதிகாரியின் பெயர் முஸ்லிம் பெயராக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் முதலில் இன்பசேகர் என்ற ஒரு போலிஸ் அதிகாரி வில்லனுக்கு உதவி செய்ததை விஜய் கண்டுபிடிப்பதாக கதை போகிறது. இன்பசேகர் என்பது எந்த மதத்தவர்களின் பெயர் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். வெறும் விளம்பரத்துக்காகவே சில முஸ்லிம்கள் படத்தைக் கண்டிப்பதாகத் தோன்றுகிறது. படத்தின் கதை இதுதான். எல்லைப்புறத்தில் நாட்டுக்காக போராடும் ராணுவ வீரன் ஜகதீஷ் விடுமுறைக்காக மும்பையில் உள்ள வீட்டிற்கு வருகிறான். வந்தவுடனே அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. முதலில் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவளை விரும்புகிறான். ஒருநாள் பஸ்சில் ஒரு பிக் பாக்கெட்டை தேடும்போது ஒருவன் சந்தேகத்துக்கிடமாகத் தெரிகிறான். அவனைப் பிடிக்க ஓடும்போது அவர்கள் பயணம் செய்த பஸ் வெடித்து குழந்தைகள் பலியாகிறார்கள். அந்த பயங்கரவாதியை பிடித்து போலிசில் ஒப்படைக்கிறான். ஆனால் அவன் தப்பிக்க முயல்வதால் அவனை மீண்டும் பிடித்து தனது வீட்டில் அடைத்து வைக்கிறான். அவன் மூலம் மும்பை மாநகரத்தில் ஒரே நாளில் 12 இடங்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருப்பதை கண்டுபிடித்து ’சீக்ரெட் செல்’ என்று சொல்லப்படும் அந்த 12 பயங்கரவாதிகளையும் ஒரே சமயத்தில் சுட்டு வீழ்த்துகிறார்கள். தனது திட்டத்தை அழித்தவனை தேடிக் கொண்டு சீக்ரெட் செல் தலைவன் வடமேற்குப் பகுதியிலிருந்து வருகிறான். அவனை எப்படி ஜகதீஷ் (விஜய்) அழித்து நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். பல படங்களில் ராணுவ வீரர்களின் சாகசங்களை காண்பித்திருந்தாலும் இந்த படத்தில் அவர்கள் தங்களது குடும்பத்துடன் கழிக்கும் நாட்களைச் சுற்றி கதை நகர்கிறது. பயங்கராவாதிக்கு உதவும் செக்யூரிட்டி ஆபிஸரை சந்திக்கும் காட்சியில் விஜய், ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சொல்லும்போது திரையரங்கமே மௌனத்தில் ஆழ்கிறது. படத்தில் இறுதியில் ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தைப் பிரிந்து ரயிலேறும் போது நமது மனமும் நெகிழ்வதை தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் விஜய் நடிக்கும் படங்கள் ஓடும். விஜய் ரசிகர்களுக்கும் தீனி கிடைக்கும். முடிவு நடிகர் கையில் தான். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காலத்திற்கு ஏற்ற வகையில் நல்லதொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் “கூகுள்… கூகுள்…” பாடல் அருமை. காட்சியுடன் இணைந்து “போய் வரவா” பாடலும் நெகிழ வைக்கின்றன. பின்னணி இசை அமர்க்களம். படத்தில் சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. என்ன தான் நாயகன் ரகசிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் யாரும் அவரை கண்டுபிடிக்க முடியாமலா இருக்கும்?. எல்லா இடங்களிலும் ஹீரோயிசம் அதிகமாகத் தெரிகிறது. ஹீரோயிசம் தமிழில் தற்போது குறைந்துவருகிற நேரத்தில் இப்படி தேவையா?. மொத்தத்தில், துப்பாக்கி… தீபாவளி படங்களில் மசாலா கலந்த சரவெடி. - சந்திர. பிரவீண்குமார்.

Wednesday, October 24, 2012

எல்லோர் கைகளிலும் கறை அரசியல் அரங்கில் பெருகிவரும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் ஏற்பட்டுள்ள பலன் என்ன?

சில வாரங்களுக்கு முன்னால் ஊழலுக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவரான முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது ஊழல் புகார் ஒன்றை சுமத்தினார். அவரது மனைவி நடத்திவரும் அறக்கட்டளையின் மூலம் 74 லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இது சம்பந்தமாக செய்தி ஊடகங்கள் பரபரப்பாகச் செய்திகளை ஒளிபரப்பிவந்தன. நாள்தோறும் புதுப்புது விஷயங்கள் மக்களுக்குத் தரப்பட்டன. ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டினால் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. ‘இது வழக்கமான ஒன்றுதான்’ என்பது போல அவர்கள் அமைதியாக நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சல்மான் குர்ஷித்துக்காக பரிந்துபேசிய மற்றொரு மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா, “போயும் போயும் 71 லட்சத்துக்கா ஒரு மத்திய அமைச்சர் ஊழல் செய்வார்? ஏதாவது நம்பும்படியா சொல்லுங்க. 74 கோடி என்று சொன்னால் நம்பலாம்” என்று கிண்டல் செய்தபோது, மக்கள் வேதனைக்கு ஆளானார்கள். கடந்த பத்து வருடங்களாக ஊழல் அடைந்துவரும் பிரம்மாண்டமான பரிணாமத்தை ஒரு மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போது பிரச்சினை வேறு பக்கம் திரும்புகிறது. ஒரு அமைச்சர் எப்படி இவ்வாறு பொறுப்பில்லாமல் பேசலாம் என்று எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் மத்திய அரசை வறுத்தெடுக்க ஆரம்பித்தன. ஏறக்குறைய இதே நேரத்தில் காஷ்மீரில் நிலக்கரி ஊழல் பற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, “போபர்ஸ் ஊழல் பற்றிய குற்றச்சாட்டை மக்கள் எப்படி மறந்தார்களோ அதுபோல நிலக்கரி ஊழலையும் மறந்துவிடுவார்கள்” என்று கூறினார். இதுபோன்ற பேச்சுக்கள் அதிர்ச்சி அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் தொடர்ந்து நிகழ்ந்துவரும் சில சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இரண்டாவது தலைமுறை அலைக்கற்றை ஊழல் பற்றிய தகவல் கணக்குத் தணிக்கை அறிக்கையில் அம்பலமானது, ஊடகங்கள் இந்த விஷயத்தில் பல விஷயங்களை வெளியே கொண்டுவந்தன, உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிட்டுக் கறாரான உத்தரவுகளைப் பிறப்பித்தது, மத்திய அமைச்சர்களும் ஆளும்கட்சிப் பிரமுகர்களும் சிறை சென்றார்கள். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக அண்ணா ஹசாரே தலைமையில் சிலர் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்கள். மலைக்க வைக்கும் தொகைகளை ஊடகங்களில் பார்த்த பொதுமக்கள் அண்ணாவுக்குப் பெருமளவில் ஆதரவு அளித்தார்கள். இந்தக் குழுவினரின் போராட்டங்கள் பல வடிவங்கள் எடுத்தாலும் ஊழலுக்கு எதிரான குரலை இந்திய அரசியல் அரங்கில் மையம் கொள்ள இந்த அமைப்பு வித்திட்டது என்று சொல்லலாம். ஊழலுக்கு எதிரான அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அண்ணா அறிவித்தார். ஆனால் தயக்கத்தின் காரணமாக அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை கைவிடுவதாக ஹசாரே அறிவித்தார். ஆனால் ஹசாரே குழுவில் முக்கிய இடம் வகித்த அரவிந்த் கெஜ்ரிவால் மட்டும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக அவர் அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சூட்டைக் கிளப்புகின்றன. கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. அதன் காரணமாக பெரிய அளவிலான அதிர்வலைகள் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளன. சல்மான் குர்ஷித் மீது கெஜ்ரிவால் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை சில மாதங்களுக்கு முன்னால் உத்தர பிரதேச முதல்வர் அபிஷேக் யாதவ் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அபிஷேக் யாதவ் வாய்மூடி மௌனம் காத்ததால் அந்த பிரச்சினை அடங்கியது. இந்நிலையில் சல்மான் குர்ஷித்தின் தொகுதிக்கு செல்லப் போவதாக கெஜ்ரிவால் கூறினார். வரலாம், ஆனால் திரும்பிப் போக முடியாது என்று சொல்லி அனைவரையும் அதிரவைத்தார் குர்ஷித். இதற்கு முன் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் மீது கெஜ்ரிவால் வைத்திருந்த குற்றம் சாட்டின் மீதான பரபரப்பும் அடங்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை வெறும் 50 லட்சத்துக்கு சொத்து வைத்திருந்த ராபர்ட் வதேரா தற்போது 300 கோடிக்கு அதிபதியாகியது எப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினார். வதேராவிடமிருந்து எந்தவித அடமானமும்பெறாமல் அவருக்கு டி.எல்.எப். நிறுவனம் 65 கோடி ரூபாயை எப்படி கடனாகத் தந்தது என்று அவர் சந்தேகம் எழுப்பினார். உடனே கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் அமைச்சர்கள் பதில் அளிக்க ஆரம்பித்தார்கள். கெஜ்ரிவாலின் இந்த புகார், காங்கிரசுக்கு எதிரான சதி என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார். இந்த விவகாரம் குறித்து எந்த விசாரணையும் கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்தார். கெஜ்ரிவால் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று வதேரா கொதித்தெழுந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விமான நிலையங்களில் ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு பாதுகாப்பு தரப்படுவது ஏன் என்ற கேள்விக்கும் காங்கிரசிடமிருந்து இதுவரை பதில் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலின் அம்புகள் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது பாய்ந்தபோது அவரது பின்னணியில் பா.ஜ.க. உள்ளதோ என்று சில அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்பட்டார்கள். ஆனால் கெஜ்ரிவால் பா.ஜ.க.வையும் விடவில்லை. மகாராஷ்ட்ராவில் அணை ஒன்றை கட்டும் விஷயத்தில் 100 ஏக்கர் அத்துமீறலாக ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அதில் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் கட்காரி இந்த அறக்கட்டளையுடன் தனக்கு எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார். இது விஷயமாக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் அறிவித்திருக்கிறார். அடுத்த்தாக வந்த செய்தி மக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வளவு பேரைக் கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் யோக்கியரல்ல என்று மகாராஷ்ட்ரத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஒய்.பி.சிங் புகார் கூறினார். கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக, சரத் பவாரும் அவரது குடும்பத்தினரும் லவாசா என்ற இடத்தில் சட்டத்துக்கு விரோஹமான வகையில் நிலங்களை சொந்தமாக்கிக்கொண்டிருப்பதை கெஜ்ரிவால் கண்டுகொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இது தவிர பா.ஜ.க. ஆட்சியின் போது வாஜ்பாய், அத்வானியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டது குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக திக்விஜய் சிங் பரபரப்பு ஏற்படுத்தினார். இப்போது எல்லாத் தரப்பிலும் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளால் தாக்கி வருகிறார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டும்தான் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியும் என்ற நிலை இருந்தது. எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றம் சுமத்தும் போதெல்லாம் அதைச் சுமத்த எதிர்க்கட்சிகளுக்கு அருகதையில்லை என்று சொல்வதே ஆளுங்கட்சியின் வாதமாக இருந்தது. சாதாரண மக்கள் இவர்களது ஊழல்களைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளக் கூட முடியாத நிலை இருந்தது. ஆனால் அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்குப் பிறகு அந்த நிலை மாறியுள்ளது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை அதிகமாகும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். என்றாலும் ஊழல் செய்தால் வலுவான எதிர்ப்பு எழும் சூழல் உருவாகியுள்ளது முக்கியமான மாற்றம் என்பதை மறுக்க முடியாது. குற்றச்சாட்டு என்ற கலகத்தின் வழியாகவே நேர்மை என்ற நன்மை பிறக்கும் காலம் இது. நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

Monday, October 15, 2012

மாற்றான் திரை விமர்சனம்

தமிழில் சிறந்த படங்கள் அதிகமாக வருவதில்லை. ஒரு சில படங்களை நல்ல படங்கள் என்று சொன்னாலும் அவை நல்ல முறையில் வருவதில்லை. அந்த படங்களுக்கு மார்க்கெட் இருப்பதில்லை. வந்த வேகம் தெரியாமல் தியேட்டர்களை விட்டு வெளியேறி விடுகின்றன. நல்ல கதையமைப்பு, சிறந்த நடிப்பு, பெரிய நடிகர்கள் கொண்ட படங்கள் குறைவே. அந்த குறையைத் தீர்த்து வைக்கிறது அக்டோபர் 12ஆம் தேதி வெளியான ‘மாற்றான்’ திரைப்படம். மரபணு விஞ்ஞானியான ராமச்சந்திரனுக்கு விமலும், அகிலனும் (இரட்டை வேடம்) ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தனக்கு இயற்கையாகப் பிறக்கும் குழந்தைகளைக்கூட மரபணு முறையிலேயே பெற துடிக்கும் மரபணு வெறியர். மரபணு முறைகளை தெரிந்துகொண்டு சென்னையில் குழந்தைகளுக்கான பவுடரைத் தயாரிக்கும் வியாபாரம் செய்கிறார் ராமச்சந்திரன். அதை ரஷ்ய நாட்டுப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவரது தொழிற்சாலையைப் பற்றிய உண்மைகளை சேகரிக்கிறார். அந்தப் பெண் இறக்கும் நேரத்தில் தனது தந்தையின் அநியாயங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறான் விமல். அந்த பத்திரிகையாளர் சேகரித்த விபரங்கள் விமலின் கையில் சிக்குகின்றன. விபரங்களை பிடுங்கும்போது மகலும் பலியாகிறான். தன்னுடன் ஒட்டிப் பிறந்தவன் பலியான அதிர்ச்சியில் அகிலன் உறைந்துபோகிறான். தனது சகோதரனின் மரணத்திற்கு தனது தந்தைதான் காரணம் என்பதை கண்டறிகிறான். தந்தை தயாரிக்கும் மரபணு பால் பவுடரின் மூலம் முன்னாள் சோவியத் நாடான உக்ரைனில் இருப்பதை அறிகிறான். தனது காதலியுடன் ரஷ்யாவுக்கு செல்கிறான். மரபணு பால் பவுடரின் ரகசியத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து எப்படி நாட்டைக் அகிலன் காப்பாற்றுகிறான் என்பதுதான் மீதிக்கதை. நமது நாட்டில் மரபணு விவசாயம் பற்றிய விழிப்புணர்வு நகரத்து மக்களிடம் இல்லை. அதை ஏதோ கிராமத்து மக்களின் வெற்றுக் கூச்சல் என்று நினைக்கிறார்கள். அது தவறு என்பதை இந்தப் படம் கோடிட்டுக் காட்டுகிறது. மரபணு தொழிற்சாலை அமைந்தால் மாடுகளின் நிலை என்ன என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு, காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்று ஓவர் டோஸில் போய்கொண்டிருக்கும் மத்திய அரசு, அடுத்தது மரபணு விவசாயத்தையும் ’ஒரு கை’ பார்க்கும் தீராத வெறியில் இருக்கிறது. சரியான நேரத்தில் இந்த படம் வெளிவந்திருக்கிறது. இனிமேலாவது விழித்துக் கொள்ளட்டும். இந்த படத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. சென்ற தலைமுறை காலத்தில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான சக்தியாக ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா இருந்தது. தாங்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றியடைவதற்காக உலகிலுள்ள அயோக்கியத்தனங்கள் அனைத்திலும் ஈடுபட்டது. அந்த தகிடுதத்தங்களின் மூலம் கிடைத்த வெற்றிகளைக் காண்பித்துதான் நம்மூர் லெனின்களும் ஸ்டாலின்களும் ஓலமிடுகிறார்கள். 1990களில் சோவியத் யூனியன் சின்னாபின்னமான பிறகுதான் கம்யூனிஸ்டுகளின் அநியாயங்கள் சோவியத்தின் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. கம்யூனிஸ்ட்டுகளின் மர்ம முடிச்சுகள் இந்த படத்திலும் அவிழ்க்கப்பட்டுள்ளன. தனது முயற்சியில் கதாநாயகன் சூர்யா வெற்றியடையும்போது தங்களுடைய விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டுதான் போட்டிகளில் வெற்றியடைந்தார்கள் என்பதை சொன்னால் தங்கள் நாட்டின் மரியாதை உலக அரங்கில் சீர்குலையும் என்று உக்ரைன் நாட்டு உயரதிகாரி கெஞ்சும் காட்சியில் கம்யூனிசத்தின் நிலை அந்தோ பரிதாபம்!. தைரியமாக படம் எடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் அக்கிரமங்களை வெளிப்படுத்திய இயக்குநர் கே.வி. ஆனந்துக்கு வாழ்த்துக்கள். இயக்குநரை பல இடதுசாரிகள் வலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள். திருடனுக்கும் தேள் கொட்டினால் வியர்க்கத்தானே செய்யும்?. பாரதத்தின் கலைகளை சீனாவுக்குக் கொண்டுசென்ற போதிதர்மரைப் பற்றிய ‘ஏழாவது அறிவு’ படத்தைத் தொடர்ந்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படிப்பட்ட படங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிக்கிறாரா? அல்லது இயற்கையாகவே அவரை வாய்ப்புகள் தேடி வருகின்றனவா?. எப்படியிருந்தாலும் அவருக்குப் பாராட்டுக்கள். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ’கால் முளைத்த பூவே’ மட்டுமே சொல்லும்படியாக இருக்கிறது. கம்யூனிஸத் தொழிற்சங்கத் தலைவர்களின் உண்மை சொரூபம் என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள். படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சரியாக நடித்திருக்கிறார்கள். நாயகனை விவேகானந்தர், டெண்டுல்கர் ஆகியோரின் மரபணு மூலமாக பெற்றெடுப்பது, நாட்டின் உயரதிகாரிகள், விஞ்ஞானிகளாலேயே முடியாததை நாயகன் தனியாக இருந்து சாதிப்பது, நினைத்தவுடன் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் குஜராத்திற்குச் சென்று வில்லனைப் பிடிப்பது போன்ற அபந்தங்களையும் தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மக்களின் மனதில் மாற்றத்தை மாற்றான் வழியாகவும் கொண்டுவர முடியுமே?

Thursday, September 27, 2012

பிரதமரின் பயனற்ற உபதேசம்

ஒரு குடும்பத் தலைவர் தன்னுடைய குடும்பத்தின் உறுப்பினர்களிடம் கவலையோடு பேசுகிறார். நமது குடும்பத்தின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. சிக்கனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அந்த குடும்பத்தார் அதைக் கேட்டதும் இனிமேல் சிக்கனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதே குடும்பத் தலைவர் பட்டாடை உடுத்தி சீவி சிங்காரித்து, போதையில் தள்ளாடிக்கொண்டு அதே வார்த்தைகளைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருக்கும்? இப்போது அந்த குடும்பத் தலைவருடைய இடத்தில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்துப் பாருங்கள். எல்லாக் கணக்கும் சரியாக வரும். பொருளாதாரச் சீர்திருத்தச் செம்மல் டாக்டர் மன்மோகன் சிங் அண்மையில் தொலைக்காட்சியில் மக்களிடையே பேசினார். நாடு பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடியில் இருக்கிறது என்றார். கடினமான சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்றார். இந்தக் கஷ்ட காலத்தை வெற்றிகரமாகக் கடக்க மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இப்போது அந்தக் குடும்பத் தலைவரை நினைத்துப் பாருங்கள். பல லட்சம் கோடி ஊழல், நிர்வாகச் சீர்கேடு என்று பல விதமான குற்றச்சாட்டுக்களின் கறை படிந்த காங்கிரஸ் அரசின் பிரதமர் மக்களிடம் சிக்கனம், சீர்திருத்தம் என்றெல்லாம் போதனைகள் வழங்கியபோது மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? இந்த போதனைகளின் பின்னணியைப் பார்ப்போம். சென்ற 20ஆம் தேதி சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் மானிய விலையில் வருடத்திற்கு ஆறு மட்டுமே வழங்கப்படும் ஆகிய மூன்று அரசு அறிவிப்புகளை எதிர்த்து நாடு தழுவிய பந்த் நடந்தது. அன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், வியாபாரிகளும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். மக்களும் இந்த பந்த்தை வழக்கமான பந்த் என்று நினைக்கவில்லை. இந்த பந்த் தேவைதான் என்பதை மக்கள் உணர்ந்ததாகவே தோன்றியது. பல சில்லறை வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள், திரிபுரா, உ.பி., மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பந்த் வெற்றியடைந்தது. இதில் கேரளத்தில் காங்கிரஸ் அரசு இருப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கடைசி நேரத்தில் பந்த் நடத்த ஆதரவு தந்தது. அதுவரை பந்தை ஆதரிப்பதாகச் சொல்லிவந்த அ.தி.மு.க. அரசு பந்தை புறக்கணித்தது. அரசு அலுவலகங்களும், பேருந்துகளும் வழக்கம்போலச் செயல்பட்டன. ஆனாலும் சாதாரண மக்கள் பந்த்திற்கு ஆதரவளிக்கவே செய்தார்கள். அதன் பாதிப்பு தமிழகத்தில் தெரிந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கமும் வணிகர்களின் பேரமைப்பும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்ததால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அமல்படுத்த மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடந்த சில வருடங்களாக முயற்சி செய்துவருகிறது. கடந்த வருடமே இதற்கான அறிவிப்பை வெளியிட அப்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி ஆர்வம் காட்டினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் தீவிரமான கண்டனத்துடன் கூட்டணிக் கட்சியான திருணமூல் காங்கிரசின் எதிர்ப்பும் சேர்ந்துகொண்டதால் அப்போது அறிவிப்பை வெளியிட முடியவில்லை. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதன் காரணமாக இந்த நாட்டிலுள்ள 4.4 கோடி சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் விவசாயிகளும் சிறு தொழிலதிபர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு இதை மறுக்கிறது. அந்நிய முதலீட்டால் வேலைவாய்ப்பு பெருகும், ஆரோக்கியமான போட்டிகள் ஏற்படும். இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதால் விவசாயிகள் லாபம் பெறுவார்கள் என்று அரசு சொல்கிறது. இந்த வாதம் பொய்யானது என்று நேரடி அந்நிய முதலீட்டை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். ‘‘கிராமப்புற இந்தியா குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத உண்மை என்ன என்றால், இந்தியாவில் விளையும் உணவுப் பொருள்களில் 60 விழுக்காட்டிற்கும் மேல் வியாபார ரீதியாகச் சந்தைக்கு வருவதில்லை, அவை கிராமங்களுக்குள்ளேயே விநியோகிக்கப்பட்டு உண்ணப்படுகிறது என்பதுதான்’’ என்று தனது கட்டுரை ஒன்றில் எழுதுகிறார், நேரடி அந்நிய முதலீட்டை தொடர்ந்து எதிர்த்துவரும் பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி. ‘‘கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்கு இங்கு சிவப்புக் கம்பள வரவேற்புக்கான நடவடிக்கையை எடுத்த அதே நாளில், நியூயார்க் நகரில் வால்மார்ட் மூடப்பட்டது. கடந்த ஜூன் 30ஆம் தேதி, வால்மார்ட்டுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 ஆயிரம் மக்கள் மிகப் பெரும் பேரணியை நடத்தினார்கள்’’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ''அன்னிய நிறுவனங்கள் இந்திய விவசாயிகளிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களுடைய விளைபொருள்களை வாங்கிக்கொள்ள ஒப்பந்தம் செய்துகொள்வார்கள் என்கின்றனர் சிலர். இது நடக்கவே நடக்காது. ஏன் என்றால் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் நடுத்தர, விளிம்பு நிலையில் உள்ளவர்கள், மிகக் குறைந்த அளவுக்கே நிலம் வைத்திருப்பவர்கள். எனவே லட்சக்கணக்கான விவசாயிகளிடம் இந்த நிறுவனங்களால் ஒப்பந்தம் செய்துகொள்ளமுடியாது. அப்படியே அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டாலும், எந்தப் பயிரைச் சாகுபடி செய்வது என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் இனி விவசாயிகளுக்கு இருக்காது’’ என்று எழுதுகிறார் பத்திரிகையாளர் பி.எஸ்.எம். ராவ். இடதுசாரிக் கட்சிகளும் அரசின் முடிவை எதிர்க்கின்றன. பல மாநிலங்களில் இருக்கும் வியாபாரிகள் சங்கங்களும் எதிர்க்கின்றன. நாடாளுமன்றத்தின் அண்மைய கூட்டத் தொடரில் நிலக்கரி ஊழல் விவகாரத்தால் முற்றிலுமாக முடக்கப்பட்டது. எங்கும் நிலக்கரி ஊழல் பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால் இப்போது மத்திய அரசு வெளியிட்ட இந்த மூன்று அறிவிப்புகளால் விவாதம் திசைமாறிவிட்டது. ஒருவேளை இதைத்தான் காங்கிரஸ் எதிர்பார்த்ததோ என்னமோ. நேரடி அந்நிய முதலீடு போன்ற மிக முக்கியமான அறிவிப்பை எந்த வித விவாதமுமின்றி அவசரமாக வெளியிட்டுள்ளதைப் பார்க்கும்போது இந்த ஐயம் வலுப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஒரு அவசரக் காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எதிர்ப்புகளை மீறி வால்மார்ட் நிறுவனத்திற்கான பல கட்டுமானங்கள் பெருநகரங்களில் கட்டப்பட்டுவருகின்றன. கூடிய விரைவில் அவை செயல்படத் தொடங்கிவிடும். அதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரமே இந்த அறிவிப்பு என்று சொல்லப்படுகிறது. நிலக்கரி ஊழல் விவகாரத்தில் விவாதத்திற்குத் தயார் என்று கூறிய ஆட்சியாளர்கள், அந்நிய முதலீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்று பா.ஜ.க. மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி கூறியதை ஏற்கவில்லை. சென்னையை அடுத்த வானகரத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் கிடங்கு ஒன்று கட்டப்பட்டுவருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் அருகிலுள்ள பகுதிகளில் இருக்கும் வியாபாரிகளைத் தொடர்புகொண்டு வருகிறார்கள். தாங்கள் வால்மார்ட்டில் உறுப்பினராகச் சேர்கிறோம் என்பதை அறியாமலேயே அந்த வியாபாரிகள் சேர்ந்துவிடுகிறார்கள். இந்த நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காகத்தான் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் தோன்றினார். தற்போது எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் காலத்தின் தேவை என்றும் 1991ஆம் வருடத்தில் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கித் தவிக்கிறது என்றும் அந்த நேரத்தில் ஏற்பட்டதைப் போன்று கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அடகு வைக்கும் நிலைமையில் நாடு இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த ஒளிபரப்பில் பிரதமர் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மக்களுக்கு அறிவுரை கூறினார். ஆனால் கடந்த எட்டு வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் சரியான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று பொருளாதார நிபுணர் கூறியதைக் கேட்டு மக்கள் திகைத்தார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரியுமே. கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசின் தலைவர் இதை மக்களிடம் சொல்லும்போது மக்களுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் இத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. ‘ஊருக்கு உபதேசம்’ செய்யும் கலாச்சாரம் அரசியல்வாதிகளுக்குப் புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்பாக, ‘‘விமானச் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். பெரிய ஹோட்டல்களில் விழாக்களை நடத்தாதீர்கள். சிக்கனமாக இருங்கள்’’ என்று தன்னுடைய அமைச்சரவை சகாக்களுக்குப் பிரதமர் அறிவுறுத்தினார். அதை ஒரு அமைச்சரும் மதித்து நடக்கவில்லை. காங்கிரசின் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். நான்கு வருடங்களாகவே மத்திய அரசு, விலை உயர்வுக்கு சர்வதேச பொருளாதாரத்தை காரணம் சொல்கிறது. இன்னும் நிலைமையை சரிசெய்யவிடாமல் தடுப்பது யார்? பொருளாதாரத்தைச் சீரமைக்க விடாமல் பிரதமரை தடுக்கும் சக்தி எது? இடையில் பத்து வருடங்களைத் தவிர்த்து கடந்த 65 வருடங்களாக காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்து ஆட்சியில் இருந்துவருகிறது. ஆனால் சாமானிய மனிதர்கள் இன்னும் துன்பத்தில் இருந்து மீளவில்லை. பெட்ரோல், டீசல் விலையேற்றம் அன்றாட வாழ்வின் அங்கமாக மாறிவிட்டது. தற்போது டீசல் விலை ஐந்து ரூபாய் அதிகரித்துள்ளது. மத்திய அரசும் வழக்கம்போல கச்சா பொருட்களின் சர்வதேச விலை உயர்வைக் காரணமாகச் சொல்கிறது. ஆனால் அண்டைய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் மர்மம் மட்டும் விலகவே இல்லை. ‘பெட்ரோல் விலையை நான்கு ரூபாய் அதிகரிக்க வேண்டுமென்றால் ஐந்து ரூபாய்க்கு அதிகரித்து ஒரு ரூபாய் குறைக்கிறது’ என்று ஊடகங்கள் கிண்டல் செய்கின்றன. சமையல் கியாஸ் விவகாரத்தில் பொறுப்பை மாநில அரசுகளிடம் காங்கிரஸ் திருப்பிவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் மானிய விலையில் வருடத்திற்கு 9 கியாஸ் சிலிண்டர்களையும் கூடுதல் 3 சிலிண்டருக்கான மானியத்தை காங்கிரசின் மாநில அரசுகள் ஏற்பது என்றும் அறிவித்தது. மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகள்தான் கியாஸ் விலைக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரான செயல் என்பதில் சந்தேகமில்லை. இந்த விவகாரம் மத்தியில் ஆளும் கூட்டணியிலும் எதிரொலித்தது. இதுவரை அரசை மிரட்டிவந்த மமதா பானர்ஜி, தற்போது உறுதியாக நின்று ஆட்சியைவிட்டு வெளியேறி விட்டார். வெளியே வந்த மறுநாள் எதிர்க்கட்சிகள் நடத்திய பந்த்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் தனியாகப் போராட்டத்தை அறிவித்துள்ளார். பந்த் நடத்த முன்னின்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பந்துக்கு மறுநாள் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து தொடர்ந்து ஆதரவு தருவோம் என்று நிருபர்களிடம் கூறினார். பந்த் நடத்த ஆதரவு தந்த தி.மு.க., ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்துவருகிறது. ஒற்றுமையாக செயல்படாத எதிர்க்கட்சிகளால் காங்கிரஸ் வட்டாரம் உற்சாகமாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த ஆபத்து விலகிவிட்டது. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் அரசு அரசியல் ரீதியாக இந்த நெருக்கடியைக் கடந்துவிட்டது. ஆனால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள கசப்புணர்வின் தாக்கத்திலிருந்து அது அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும் என்றார் இளங்கோ அடிகள். இன்று பிழைத்துக்கொண்ட அரசு காலத்தின் நீதிமன்றத்தில் அறம் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

Tuesday, September 25, 2012

நேரடி அந்நிய முதலீடு உள்ளூர் வர்த்தகம் சீர்குலையுமா?

இந்திய சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று பத்து நாட்களுக்கு முன்பு மத்திய அரசு முடிவெடுத்தது. நிலக்கரி ஊழல் பிரச்சினையில் பா.ஜ.க.வின் கேள்விக்கணைகளில் சிக்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கு இந்த அனுமதியால் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கிடைத்துள்ளது. உலகமயமாக்கலின் காரணமாக இந்தியா பல்வேறு நேரடி அந்நிய முதலீடுகளை கடந்த 20 வருடங்களாக அனுமதித்து வருகிறது. எந்தத் துறையில் நேரடி அந்நிய அனுமதித்தாலும் மத்திய அரசு எதிர்ப்பைச் சந்திப்பது வாடிக்கைதான். ஆனால் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அரசு அனுமதிக்க முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்ப்பாளர்களின் போராட்டம் இன்னும் தீவிரமாகவே இருக்கிறது. இந்தியாவில் 4.4 கோடி பேருக்கான வேலைவாய்ப்பை இந்திய சில்லறை வர்த்தகம் தருவதால்தான் இந்த கூடுதல் எதிர்ப்பு. இந்தியாவை பொறுத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக சில்லறை வர்த்தகம்தான் அதிகளவில் மக்களின் பிழைப்புக்கு வழி செய்கிறது. ‘‘இந்த நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏராளமான மக்களின் வாழ்க்கை பாதிப்படையும்’’ என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். வால்மார்ட் போன்ற பெரிய வர்த்தகத் தலைகள், சில்லறை வர்த்தகத்தில் நுழைவதால் சிறிய முதலீட்டாளர்கள் காணாமல் போவார்கள். தொடக்கத்தில் விலை குறைவாக பொருட்களைத் தந்து மற்ற போட்டியாளர்கள் ஒழிப்பார்கள். அதன் பிறகு விலையைத் தாறுமாறாக உயர்த்துவார்கள். அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனம் இத்தைகைய உபாயத்தைத்தான் கையாண்டார்கள் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அந்நிய முதலீட்டின் ஆதரவாளர்களோ இந்த வாதத்தை ஏற்க மறுக்கிறார்கள். ‘‘இந்த முதலீடு காரணமாக சில்லறை வர்த்தகத்தில் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இதனால் பொருளாதாரம் வளர்ச்சியடையும். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள்’’ என்கிறார்கள். இந்த முடிவை பா.ஜ.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள். அவர்களோடு காங்கிரசின் கூட்டணிக் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜியும் எதிர்க்கிறார். இந்த முடிவை அரசு கைவிடாவிட்டால் கூட்டணியை விட்டு விலக நேரிடும் என்று அவர் எச்சரித்து வருகிறார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங், இந்த எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதை அனுமதிப்பதால் ஏற்படும் சங்கடங்களை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கவலைபடவில்லை. இந்த முடிவால், பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இந்த முடிவை எந்தெந்த மாநிலங்களில் அமல்படுத்துவது என்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் உ.பி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார், பஞ்சாப், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தற்போதைக்கு நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாது என்பது தெரிகிறது. இந்த முடிவுடன் உள்நாட்டு விமானத் துறையில் 49 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவையும் மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துவரும் அரசியல் கட்சிகள், விமான போக்குவரத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து பெரிய அளவிலான எதிர்ப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நிலக்கரி ஊழல் பிரச்சினைகளை திசை திருப்புவதற்குதான் முக்கியமான இந்த முடிவை அவசர கோலத்தில் மத்திய அரசு எடுத்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தனது வலைப்பூவில், ‘‘இந்த முடிவால் நிலக்கரி ஊழலை விட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் அது நடக்காது’’ என்று எழுதியுள்ளார்.

முலாயம் சிங்கின் பிரதமர் ஆசை நனவாகுமா மூன்றாவது அணி?

இந்திய மக்களவைத் தேர்தல் குறித்த பேச்சுக்கள் கிளம்பும் போதெல்லாம் மூன்றாவது அணி குறித்த முயற்சிகளும் நடப்பது வாடிக்கை. ஊழல் விவகாரங்களில் காங்கிரஸ் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ‘பா.ஜ.க.வோ பிரதமர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்வியில் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை, மாநில கட்சிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைந்து நான்காவது அணியாகப் போட்டியிட்டது. இந்த கட்சிகள் 5.14 சதவீத வாக்குகளைப் பெற்று 27 இடங்களை கைப்பற்றியது. நான்கு இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க., பா.ம.க, ம.தி.மு.க, பிஜு ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அடங்கிய மூன்றாவது அணி 21.15 சதவீத வாக்குகளைப் பெற்று 79 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலுக்குப் பிறகு மூன்றாவது, நான்காவது அணிகள் கலைந்துவிட்டன. இப்போதைய சூழ்நிலையை மாநில கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடுகின்றன. அதே நேரத்தில் இந்த கட்சி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமர் பதவியின் மீது ஆசை இருக்கிறது. இந்த முயற்சி வெற்றியடையுமா என்ற கேள்விக்கு பதிலை பெற நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ‘வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க. கூட்டணியும் வெற்றி பெறாது. இவற்றில் ஏதேனும் ஒரு கட்சியின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியமைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியதாக கடந்த ஆகஸ்ட் மாதம் புரளியொன்று கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு மைல்கல் இஸ்ரோவின் 100ஆவது திட்டம்

ஹரிகோட்டாவிலிருந்து போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (பி.எஸ்.எல்.வி.) மூலம் தனது 100ஆவது செயற்கைக்கோளை கடந்த 9ஆம் தேதி வெற்றிகரமாக ஏவியது. இந்தியா தனக்கான சொந்த விண்வெளித் திட்டத்தை நிறுவுவதற்கான முதல் அடியை எடுத்துவைத்து அரை நூற்றாண்டு ஆகிறது. இந்தியாவின் முதல் பரிசோதனை முறையிலான செயற்கைக்கோளான ஆர்யபட்டா 1875ஆம் ஆண்டு சோவியத் யூனியனிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்தே, எஸ்.எல்.வி. - 3 ராக்கெட்டைப் பயன்படுத்தி, ஒரு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது. அறுபதுகளில் இரு அடுக்குகள் கொண்ட ஃபிரான்ஸ் நாட்டின் ராக்கெட் ஒன்றை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் ஏவுகளங்களைத் தயாரிக்கும் திட்டத்திற்குத் தேவையான திட ஏவு திறன்கள் இந்தியாவில் உருவாவதற்கு இதுவே தொடக்கமாக அமைந்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகு இஸ்ரோ பெற்ற இன்னொரு ஒப்பந்தம் விண்ணில் ஏவுவதற்கான ஃபிரான்ஸ் நாட்டின் திரவ ஏவு திறன் தொழில்நுட்பம் இந்தியாவுக்குக் கிடைக்க உதவியது. இதுவே பி.எஸ்.எல்.வி.யின் இரண்டாம் கட்டத்திற்கு வித்திட்டது. அடுத்தடுத்து 21 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள பி.எஸ்.எல்.வி. மிக வலுவான கருவியாக உருப்பெற்றுள்ளது. 50க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலங்களை அது விண்ணில் செலுத்தியிருக்கிறது. இவற்றில் பாதி வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்காகச் செய்யப்பட்டது. பி.எஸ்.எல்.வி. செயல்படத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் தொலை உணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தைம் சுமந்து சென்றது. இந்தியா சந்திர மண்டலத்துக்கு முதன் முதலாக அனுப்பிய அனுப்பப்பட்ட சந்திராயன் -1 என்னும் விண்கலத்தையும் அது விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பவிருக்கும் முதல் விண்கலத்தையும் இதுவே அனுப்பிவைக்கும். பி.எஸ்.எல்.வி. இருப்பதால் தொலை உணர்வு செயற்கைக்கோள்களைச் செலுத்த வெளிநாடுகளை நாடத் தேவையில்லை. தற்போது செலுத்திய பி.எஸ்.எல்.வி - சி2 விண்கலத்தில், இரண்டு வெளிநாட்டு செயற்கைகோளையும் சுமந்து சென்றது. இந்திய விண்வெளித் துறை ஏற்கனவே மூன்று தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மூன்று டன்களுக்கு மேல் எடை கொண்ட இவை ஐரோப்பாவின் ஏரியன் - 5இன் மூலம் செலுத்தப்பட்டன. நான்காவது செயற்கைக்கோளான ஜி.எஸ்.ஏ.டி. - 10 ஏரியன் 5 மூலம் இன்னும் இரு வாரங்களில் செலுத்தப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 4, 2012

கோல்கேட்!

ஊழலுக்கு மேல் ஊழலாகச் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் அரசுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு தலைவலி. கடந்த 2004ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களால் மத்திய அரசுக்கு 1.86 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி.) அறிக்கை தெரிவித்துள்ளது. முதலில் இருந்த விருப்ப ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்து ஏல அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சரவையால் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையைக் கண்டுகொள்ளாததே இந்த முறைகேட்டிற்கு காரணம் என்று சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. முறைகேடு நடந்த காலத்தில் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது. அதை வலியுறுத்தி ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவருகிறது. சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், இந்த விவாகரத்தில் பா.ஜ.க. ஆளும் ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் கேட்டுக்கொண்டபடிதான் ஒதுக்கீடு நடந்ததாகவும் இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்றும் பதவி விலக அவசியமில்லை என்றும் கூறினார். ஆனால் பா.ஜ.க. இதை ஏற்க மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் பதவி விலகும்வரை நாடாளுமன்றப் புறக்கணிப்பைக் கைவிடப்போவதில்லை என்று அது தெரிவித்தது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கரி ஊழலில் தனது முதல்வர்களும் சம்மந்தப்பட்டதாக கூறப்படுவதை அது மறுத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு என்பது மத்திய அரசு சம்மந்தப்பட்ட விஷயம் என்றும், இதில் மாநில அரசுகளின் பங்கு எதுவுமில்லை என்று அது கூறியது. பிரதமர் பதவி விலகத் தேவையில்லை என்று காங்கிரஸ் சொல்கிறது. 142 நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்திவருகிறது. ஆனால் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருவதால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகே நிலக்கரிச் சுரங்கங்களின் ஒதுக்கீடுகளை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் அறிவித்தார். ஆனால் நிலக்கரி ஒதுக்கீடுகள் தற்போதைக்கு ரத்து செய்யப்படாது எனவும், இதுகுறித்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் பா.ஜ.க.வின் கேள்விகளுக்குப் பிரதமர் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. இந்த விவகாரத்தால் பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் நீண்ட கால கூட்டணிக் கட்சிகளான அகாலி தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமாக பிரதமரின் விளக்கத்திற்குப் பிறகு நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தன. ஆனால் பா.ஜ.க. அந்த யோசனையை முற்றிலுமாக நிராகரித்தது. காங்கிரஸ் கூட்டணி அரசில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா உட்பட அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி, ஊழல் வழக்குகளை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் நிலக்கரிக்கு பொறுப்பு வகித்த பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும். மேலும் பிரதமரே ஊழலில் சம்மந்தப்பட்டிருப்பதால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் மற்ற எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை ஒதுக்க காங்கிரசும் பா.ஜ.க.வும் கூட்டு சதி செய்வதாக இடதுசாரி கட்சிகளும், சமாஜ்வாதி கட்சியும் குற்றம் சாட்டியுள்ளன.

Friday, August 24, 2012

வதந்தியால் நிரம்பிய ரயில்கள்

சென்ற மாதம் நாடு முழுவதும் பரபரப்பு தெரிந்தது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கும்பல் கும்பலாக ரயில் நிலையங்களை நோக்கிப் படையெடுத்தார்கள். காரணம் வட கிழக்கைச் சேர்ந்த மக்கள் மீது தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற வதந்தி பரவியதே இதற்குக் காரணம். மத்திய உள்துறையும், பல மாநில அரசுகளும் மற்ற பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வதந்தியால் பீதியடைந்த மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கின. ஏன் இந்த வதந்தி கிளம்பியது? திடீரென்று பெரும் திரளாக மக்கள் ஏன் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டுவிட்டுச் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும்? அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் கலவரம் வெடித்தது. உள்ளூர் போடோ மக்களுக்கும், வெளியிலிருந்து அங்கு குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்தக் கலவரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள். வங்காள தேசத்தைச் சேர்ந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அஸ்ஸாமில் ஊடுருவியதால்தான் இந்தக் கலவரம் நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. கலவரத்தின் எதிரொலியாக மும்பையில் நடந்த கண்டனப் பேரணியில் கலவரம் வெடித்தது. அதில் மும்பை போலீஸாருக்கும் அந்தப் பேரணியில் பங்கேற்ற முஸ்லிம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்தக் கலவரத்திலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடக்க இருப்பதாக வதந்தி பரவியது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாழும் வடகிழக்கு மக்களைப் பழிவாங்க முஸ்லிம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் ரம்ஜானுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம் என்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்தி எத்தனை பேருக்குப் போய் சேர்ந்தது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் இது குறித்த பேச்சு காட்டுத் தீயாகப் பரவிப் பீதியைக் கிளப்பியது. வடகிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் அவர்கள் வெளி மாநிலங்களில் இருக்கும் தங்கள் உறவினர்களைத் தொடர்புகொண்டு வீடு திரும்பும்படி வற்புறுத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. முதலில் கர்நாடக மாநிலத்தில் இந்த வதந்தி கிளம்பியது. ஏராளமான வடகிழக்கு மக்கள் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களை நோக்கி விரைந்தார்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் 'இந்த வதந்திகளை நம்ப வேண்டாம்' என்றுக் கூறி வடகிழக்கு மக்களைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். அதற்குள் இந்த வதந்தி நாடு முழுவதும் பரவியது. சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் வசிக்கும் வடகிழக்குப் பகுதி மக்கள் தங்கள் சொந்த மண்ணை நோக்கி ரயிலேறினார்கள். சென்னையில் இருக்கும் வடகிழக்கு மக்களின் பாதுகாப்புக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவாதம் கூறினார். ஆனாலும் ரயில்களில் ஏறும் மக்களின் பீதி குறையவில்லை. கடந்த மே மாதம் முதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்ட ரீதியில் இந்த வதந்தியைப் பரப்பிவருவதாக மத்திய அரசு கூறியது. சில மாதங்களாகவே இந்த வதந்தி பரவுகிறது என்றால் மத்திய உளவுத்துறை அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக வலைதளங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம் எதிர்க்கப்பட்டதே காரணம் என்கிறது மத்திய அரசு. அந்த வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்கூட மத்திய அரசால் ஃபேஸ்புக்கிலோ, டுவிட்டரிலோ ஒரு முகவரியை ஏற்படுத்தி இந்தப் பிரச்சாரத்தின் முனையை முறித்திருக்க முடியாதா? அரசின் அதிகாரபூர்வமான முகவரி என்றால் ஏராளமானவர்கள் அதில் சேர்ந்திருப்பார்களே? அப்துல் கலாம், அமிதாப் பச்சன், அமீர் கான், டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் மூலமாக கமெண்ட்டுகள் தரவும் ஏற்பாடு செய்திருக்கலாமே? செல்போன் மூலம் தினந்தோறும் ஏராளமான தகவல்கள் பறிமாறப்படுகின்றன. அந்த வசதிகளை மத்திய அரசின் துறைகளும் பயன்படுத்துகின்றன. அந்த வசதியை இப்போது ஏன் அரசு பயன்படுத்தவில்லை? வடகிழக்கு மாநில அலைபேசி எண்களை குறிவைத்தே இந்தக் குறுஞ்செய்திகள் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் அரசு வழக்கம் போல அதை மறுத்தது. ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியது. உடனே உள்துறை அமைச்சகம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. பாகிஸ்தான் மௌனம் சாதிக்கிறது. இந்த வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான்தான் என்று சொல்வதன் மூலம் மத்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு நாட்டின் மீது பகைமை உணர்வு கொண்ட அண்டை நாடுகள் பிரச்சினைகளை உருவாக்க எப்போதுமே தயாராக இருக்கும் என்பது சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். அஸ்ஸாமில் கலவரம் நடந்த பிறகாவது மத்திய அரசு பாகிஸ்தானின் சதி குறித்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நம் நாட்டைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்து மக்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பது எப்போதுமே நடக்கக்கூடியதுதான். உதாரணமாக, சென்னையில் ஏராளமான வட இந்தியர்களைப் பார்க்க முடியும். அவர்களில் சிலர் பரம்பரை பரம்பரையாக இங்கே வசித்துவருகிறார்கள். அவர்களுக்குத் தங்கள் தாய்மொழியில் பேச மட்டுமே தெரியும். மற்ற தொடர்புகள் எல்லாம் தமிழில்தான். இப்போதும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழக நகரங்களில் வட இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் யாருடைய வருமானத்தையும் பிடுங்கி வாழ்வதில்லை. மாறாக இவர்கள் இல்லாவிட்டால் பல்வேறு சாதாரண வேலைகள் இங்கு நடைபெறாது என்பதுதான் யதார்த்தம். இதுபோன்றே ஏராளமான தமிழர்கள் டில்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகள் இத்தகைய சுமுகமான இடப் பெயர்வுகளையும் அவர்களுடைய அமைதியான வாழ்வையும் குலைக்கின்றன. சில சமயங்களில் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றங்கள் குறித்து உள்ளூர் மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் இதுவரை பெரியளவில் குழப்பம் எதுவும் ஏற்பட்டதில்லை. சமீபத்தில் சென்னையில் வங்கி கொள்ளையர்கள் என்ற சந்தேகத்தில் சில பீகார் இளைஞர்கள் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து வட மாநிலத்தவர் மீது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அப்போது எந்த வட மாநிலத்தவரும் சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. ஆனால் இந்த வதந்தி பலரைத் தங்களது ஊர்களை நோக்கி ஓட வைத்திருக்கிறது. வதந்தியின் வலிமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம். எனவே வதந்திகளை மிக முக்கியமான அபாயமாகக் கருதி அவற்றைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதே சராசரி குடிமகனின் எதிர்பார்ப்பு.

Monday, August 13, 2012

கியூரியாசிடி தந்த நம்பிக்கை

கடந்த ஆகஸ்டு 5ம் தேதி உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான கண்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன் தவம் இருந்தன. அந்த கண்கள் ஒலிம்பிக் போட்டிகளையோ, உலக பொருளாதார வீழ்ச்சி பற்றிய செய்திகளையோ, ஏதேனும் அரசியல் சம்மந்தமான பரபரப்புகளையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கவில்லை. செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் அனுப்பிய ‘கியூரியாசிடி’ விண்கலம் பத்திரமாகத் தரையிறங்குமா என்ற பதைபதைப்புடன் டி.வி.களுக்கு முன் அமர்ந்திருந்தன அந்த கண்கள். இந்திய நேரப்படி மதியம் சரியாக 12.10 மணிக்கு அந்த விண்கலம் தரையிறங்கிய செய்தியைக் கேட்டப்பிறகே அன்றைய மதிய சாப்பாடு பலருடைய வயிற்றில் நுழைந்தது. இதற்கு முன் நாஸா செவ்வாய் கிரகத்துக்கு பலமுறை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருந்தது. ஆனால் அவை எவற்றிலும் இல்லாத சிறப்பு இந்த விண்கலத்தில் உண்டு. இதுவரையில் இல்லாத முறையில் இந்த விண்கலம் தரையிறங்குவதற்கு இதுவரை இல்லாத புதுமுறை செயல்படுத்தப்பட்டது. 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த விண்கலம் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு சக்கர வண்டி தரையிறங்க மொத்தாம் ஏழு நிமிடம் ஆகும். அந்த ஏழு நிமிடங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பரபரப்புமிக்க அந்த ஏழு நிமிடங்களை ‘ஏழு நிமிட பயங்கரம்’ என்று அழைத்தார்கள். மேலும் இந்த விண்கலத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அமெரிக்காவில் இருக்கும் நாஸாவின் தரைக் கட்டுப்பாட்டு கேந்திரத்திலிருந்து அதை சரி செய்ய முடியாது. காரணம் பூமியிலிருந்து விண்கலத்திற்கும், விண்கலத்திலிருந்து பூமிக்கும் சிக்னல் தர 14 நிமிடங்கள் தேவைப்படும். செவ்வாய் கிரகம் பூமியைப் போலவே 24 மணிநேரம் சுற்றிக்கூடியது. அதில் 12 மணிநேரம் பூமியைப் பார்த்தும், 12 மணிநேரம் மறுபுறத்திலும் இருக்கும். செவ்வாயின் மறுபுறத்தில் அது இருக்கும்போது தரும் சிக்னல் பூமியை வந்தடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியவுடன் செவ்வாய் கிரகத்தில் படமெடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தது. இதுபோன்று கியூரியாசிடி விண்கலம் மேலும் கீழுமாக செவ்வாய் கிரகத்தில் நடமாடி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யும். அந்த ஆராய்ச்சிகள் தரும் முடிவுகளைப் பொருத்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதா, இல்லையா என்று அமெரிக்கா முடிவு செய்யும். இந்த ஆராய்ச்சிகளில் இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. நாஸாவில் இடம்பெற்றுள்ள 30 சதவீத விஞ்ஞானிகள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இன்று நாஸாவின் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர்கள் அங்கம் வகித்து வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை தருவதுதானே.

அத்வானி: வலைப்பூவில் மலரும் நம்பிக்கை?

லால் கிருஷ்ண அத்வானி, 86 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் முன்னாள் துணை பிரதமர். கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர்; வாஜ்பாய் அளவுக்கு இல்லையென்றாலும் சிறந்த பேச்சாளர்; பா.ஜ.க.வின் 60 ஆண்டுகால அரசியல் பயணத்தின் சாட்சியாக இருப்பவர்; பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு. இப்போது இவரிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ, பா.ஜ.க.வின் தலைவர் பொறுப்போ இல்லை. மேலும் இவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யாரும் கட்சியில் முக்கிய பதவிகளில் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக இவருக்கு அடுத்தக்கட்டத் தலைவர்களான நரேந்திர மோடி, அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்களின் பெயர்கள் அடிபடத் துவங்கியுள்ளன. சமீப காலமாக அத்வானியின் வலைப்பூக்களில் அவர் என்ன எழுதினாலும் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. இவை ‘பிரதமர் பதவிக்கான போட்டியில் தனது பெயரையும் சேர்க்க விரும்புகிறாரோ இந்த பிதாமகர்’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாமல் இல்லை. தனது வலைப்பூ எழுத்துக்களில் தனக்கென ஒரு பார்வையை முன்வைக்கிறார் அத்வானி. ஆகஸ்டு முதல் வாரத்தில் அவர் எழுதிய கட்டுரையொன்று தேசிய அளவில் புயலை உண்டாக்கியது. ‘2014 தேர்தலில் ஆளும் காங்கிரசுக்கோ, பா.ஜ.க.வுக்கோ பெரும்பான்மை கிடைக்காது. ஆனால் இவர்கள் யாராவது ஒருவரின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சியை கைப்பற்றும்’ என்று அவர் சொன்னதாக தேசிய ஊடகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. காங்கிரஸ் கட்சி, அவரது கருத்து பா.ஜ.க.வின் நிலவும் குழப்பங்களை கூறுவதாக கேலி செய்தது. அத்வானி சார்ந்திருக்கும் பா.ஜ.க.வோ எதுவும் பேசாமல் மௌனம் சாதித்தது. உண்மையில் அந்த கட்டுரையில், அந்த கருத்தை ஒரு விருந்தில் இரண்டு மத்திய அமைச்சர்கள் தன்னிடம் கூறியதாகவும் தனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லையென்றும் பா.ஜ.க. தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் பதிவு செய்திருந்தார். மேலும் காங்கிரசின் நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி சி.பி.ஐ. தான் என்றும் அவர் கேலி செய்திருந்தார். இந்த கட்டுரை மட்டுமல்ல. சமீப காலமாக அவர் என்ன எழுதினாலும் சர்ச்சை தான். மக்களவைத் தேர்தலுடன் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடைபெற வேண்டும். அப்போது தான் ஐந்தாண்டுகள் மத்தியில் ஆட்சியிலிருக்கும் ஒரு கட்சி தனது செயல்திட்டங்களை சீராக செயல்படுத்த வேண்டும் என்கிறார். பிரணாப் முகர்ஜிக்கும் தனது தனிப்பட்ட கருத்துக்களை கூறுகிறார். இப்படி பல்வேறு பிரச்சினைகளில் தனது கருத்தை வெளியிடுகிறார். இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் அத்வானி?. பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் தனது பெயரும் இருக்கிறது என்று காட்டுகிறாரா? இன்றைய சூழ்நிலையில் நரேந்திர மோடியை தே.ஜ. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் ஏற்க தயாராக இல்லை. நிதீஷ் குமாரோ இப்போதே பா.ஜ.க. தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்கிறார். தற்போதுள்ள சூழ்நிலையில் அத்வானியை விட கூட்டணியில் பலம் பொருந்திய பா.ஜ.க. தலைவர்கள் இப்போதைக்கு இல்லை என்பது உண்மையே. ஆனால் இதை பா.ஜ.க. எப்படிப் பார்க்கிறது? தேசம் அத்வானியை எப்படி நோக்கும் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்.

டெசோ மாநாடு சாதித்தது என்ன?

பல்வேறு ஆதரவுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே டெசோ மாநாடு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. ‘இந்த மாநாடு என்ன சாதித்தது?’ என்ற கேள்விக்கு விடைகாணும் முன் இந்த மாநாடு நடப்பதற்கு முன்னால் நடந்த சில பரபரப்புகளை நாடகங்களைப் பார்ப்போம். முதலில் இந்த மாநாட்டை விழுப்புரத்தில் ஆகஸ்டு 5ம் தேதி நடத்த இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். அரசியலில் இழந்த மரியாதையை பெறுவதற்காக தான் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துவதாக தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் கருதினார்கள். மத்தியில் ஆளும் கூட்டணியில் தி.மு.க.வும் இருப்பதால் காங்கிரஸ் அரசும் தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் தனி ஈழம் பற்றிய கோரிக்கையை எழுப்புவதில்லை, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் நவாழ்வை முன்வைப்பதே மாநாட்டின் நோக்கம் என்று அறிவித்தார். மேலும் விழுப்புரத்தில் இருந்து மாநாட்டை சென்னைக்கு மாற்றினார் கருணாநிதி. தேதியையும் ஆகஸ்டு 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார். சென்னையில் டெசோ மாநாட்டுக்காக ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை தேர்வு செய்தார்கள். மேலும் இந்த மாநாடு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்படுவதால் கட்சித் தலைவர்களின் படங்களையோ, கொடியையோ மாநாட்டில் பயன்படுத்தக் கூடாது என்று கருணாநிதி தி.மு.க. தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். டெசோ மாநாடு தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கடைசி கட்ட பரபரப்புக் காட்சிகள் டெசோ மாநாட்டிற்கு வலுசேர்த்தன என்றுதான் சொல்ல வேண்டும். டெசோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைத் தமிழர்களை கண்காணிப்போம் என்று இலங்கை அரசு மிரட்டியதால் டெசோ மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் தனது பங்குக்கு தி.மு.க.வை எச்சரித்தது. மாநாட்டில் ‘ஈழம்’ என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று உத்தரவிட்டது. இதற்கு பதிலளித்த கருணாநிதி, ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கான இந்தா மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை உச்சரித்துதான் ஆக வேண்டும் என்று கூறினார். மாநாட்டில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை வெள்ளிக்கிழமை நள்ளிரவு அறிவித்தது. சனிக்கிழமை மாநாட்டிற்கு அனுமதி கோரியும், காவல்துறை ஆணையாளரின் தடையுத்தரவை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட 8000 பேருக்கு மேல் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், டெசோ மாநாட்டிற்கு அனுமதி கேட்டவரும் தடையை நீக்கக் கோரும் வழக்கை தொடுத்தவரும் வேறுவேறு நபர்கள் என்பதை சுட்டிக்காட்டி வழக்கை நிராகரித்தார்கள். இதற்கிடையில் ஈழம் என்ற வார்த்தைக்கு தந்த தடையை காங்கிரஸ் விலக்கிக்கொண்டது. மாநாடு நடந்த 12ம் தேதி காலை, பரபரப்பு நாடகங்கள் உச்சகட்டம் அடைந்தன. தி.மு.க.வின் வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு நீதிபதிகள் மீண்டும் விசாரித்தார்கள். மாநாட்டில் 8000 பேருக்கும் மேல் கலந்து கொள்ளக்கூடாது, ஒலிபெருக்கி, பேனர் ஆகிய விஷயங்களில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து மாநாட்டிற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள். காலையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பேசிய கருணாநிதி, 2009ம் ஆண்டில் தான் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் போது இந்திய வெளியுறவுத் துறையும், இலங்கையும் போர் நின்றுவிட்டதாக தனக்கு உறுதியளித்ததால்தான் தனது உண்ணாவிரதத்தை கைவிட நேர்ந்ததாக தெரிவித்தார். ஆனால் அப்போது பொய்யானத் தகவலை கூறி இலங்கை அரசு, இந்தியாவை ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மாலையில் நடந்த மாநாட்டில் பேசிய கருணாநிதி, தற்போதைய தேவை இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முதலுதவிதான் என்றும், தான் காணும் கனவான தமிழீழம் கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் கூறினார். ஈழத் தமிழர்களுக்கு உதவ தமிழகம் என்றும் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநாட்டில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பேராசிரியர் சுபவீரபாண்டியன் ஆகியோரும் பேசினார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், அவர்களுக்கு அரசியல் உரிமைகள் தரவேண்டும், டெசோ மாநாட்டை தடுக்க நினைத்த அ.தி.மு.க. அரசை கண்டிப்பது, போர் குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்பன போன்ற 14 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தடைகள் அனைத்தையும் மீறி டெசோ மாநாடு வெற்றி பெற்றதாகவும், 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதிகள் ஆயவரங்கில் பங்கேற்றதாகவும் கருணாநிதி தெரிவித்தார். தமிழர்களுக்கு உலகில் எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் தமிழர் பிரதிநிதிகள் ஒன்றுசேர்வார்கள் என்பதை டெசோ மாநாடு நிருபித்திருக்கிறது. ஆனால் இந்த மாநாடு ஏற்படுத்திய விளைவு என்ன என்பது இனிமேல்தான் தெரியவரும்.

Saturday, August 11, 2012

நம்பிக்கை இளைஞர் விவேகானந்தர்

செப்டம்பர் 11... என்று சொன்னால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2001ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதற்கு சரியாக 108 வருடங்களுக்கு முன்பு 1893ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, சிகாகோவில் நமது இந்தியத் திருநாட்டின் பெருமையை நிலைநாட்டினார் ஒரு இளைஞர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? சுவாமி விவேகானந்தர் என்பது அந்த இளைஞரின் பெயர். சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும், வேகமும் நிரம்பிய இளைஞராக அவர் இருந்தார். ராமகிருஷ்ண பரஹம்சரை சந்தித்ததால் தனது வாழ்க்கையை ஆன்மீகத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்தவர். துறவியாக முழுவதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்ததால் மக்கள் நமது பெருமைகளை மறந்து இருந்தார்கள். அடிமைகளாக வாழ்வதில் சுகம் அடைந்திருந்தார்கள். இந்த இந்த நிலையைக் கண்டு விவேகானந்தர் மனம் வருந்தினார். நமது பெருமைகளை நாம் கூறி புரிய வைப்பதைவிட மேலைநாட்டவர்கள் சொன்னால் நமது மக்களுக்கு நம் பெருமைகள் புரியும் என்பதை உணர்ந்துக் கொண்டார். அதன் காரணமாக அமெரிக்கா செல்ல தீர்மானித்தார். 1893ல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் சர்வமத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைப் பற்றி கேள்விப்பட்ட விவேகானந்தர் அந்த மாநாட்டிற்கு செல்ல தீர்மானித்தார். அதற்கான ஆயுத்தங்களை செய்யத் தொடங்கினார். குமரிமுனைக்கு சென்ற அவர், அங்குள்ள பாறை ஒன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். தியானத்தின் போது கடவுள் பற்றி சிந்தனை செய்யவில்லை. மாறாக இந்தியாவின் அன்றைய வறுமை நிலைமையையும் கல்வி முன்னேற்றத்தையுமே சிந்தித்தார். இந்திய மக்களுக்கு உடனடி தேவை மதமல்ல, தொழிற்கல்வியே என்று உணர்ந்தார். விவேகானந்தர் வெளிநாட்டிற்கு செல்வதற்கு ஏராளமான சிற்றரசர்களும், செல்வந்தர்களும் முன்வந்தார்கள். ஆனால் விவேகானந்தர் தான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு காரணம் ஏழைகளுக்காக என்பதால் சாதாரண மக்களின் பங்களிப்பும் தனது பயணத்தில் இடம்பெற வேண்டுமென்று விரும்பினார். ஏற்கனவே அமெரிக்கா செல்வதற்கு பல செல்வந்தர்கள் வலியுறுத்தியப் பிறகும் விவேகானந்தர் தன்னுடைய சம்மதத்தை சென்னையில் இருந்த இளைஞர்களிடம்தான் வெளிப்படுத்தினார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆன்மீகத்தை போதிப்பதன் மூலம் இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி தரமுடியும் என்று நம்பினார். சென்னை இளைஞர்கள் விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பணம் திரட்டினார்கள். பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரை அவர் சர்வமத மாநாடுகளுக்கு செல்ல நிதியளித்தார்கள். அவர்கள் செய்து கொடுத்த ஏற்பாட்டின்படி, மே 31ம் தேதி பம்பாயிலிருந்து அமெரிக்கா நோக்கி கப்பலில் புறப்பட்டார். கப்பலில்கூட விவேகானந்தர் தேசபக்தியை விடவில்லை. கப்பல் ஜப்பான் வழியாக அமெரிக்கா சென்றது. ஜப்பானில் இருந்த தொழிற்சாலைகள் அவரை கவர்ந்தன. தன்னுடன் பயணம் செய்த தொழிலதிபரிடம் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்த தொழிலதிபர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் தொழிற்புரட்சிக்கு பெரிதும் உதவிய ஜாம்ஷெட்ஜி டாட்டா. அமெரிக்காவிற்கு ஜூலை மாதமே போய் சேர்ந்துவிட்டார் விவேகானந்தர். அங்குள்ள சூழ்நிலைகளுக்கு அவர் பழக்கிகொள்ளும் முன்பே அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த சர்வமத மாநாடு செப்டம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்டது. எந்த மனிதரும் தெரியாத ஊரில் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தார். சர்வமத மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியுமா என்றுகூட சந்தேகப்பட்டார். கையில் இருந்த பணமும் கரைய ஆரம்பித்தது. அவரை சந்தித்த அமெரிக்கர்கள் இந்தியாவை பற்றி தாங்கள் கேள்விப்பட்ட அவதூறுகளை பற்றி கேட்டார்கள். ஆனாலும் விவேகானந்தர் மனம் தளரவில்லை. ஒரு சிலர் அவருடைய உருவத்தை வைத்து அவரை தவறாக எடை போட்டார்கள். அவருடைய தலைப்பாகையை இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட உண்டு. ஒரு இடத்தில் அவரது உருவத்தைக் கண்டு சிறு கூட்டம் ஒன்று படுகோபத்துடன் அவரை துரத்திய சம்பவம்கூட நடந்தது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் அங்கு குடியேறிய இந்தியர்களின் எதிர்ப்புகளையும் சமாளித்தார். ஆனால் தொடர்ந்து நம்பிக்கையுடன் செயல்பட்டதால் நல்ல நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள். மாநாடு தொடங்கும்வரை சிகாகோவில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இருந்த போஸ்டன் என்ற நகரத்தில் இருந்து தன்னுடைய செலவை குறைத்தார். அங்கு கேதரின் என்ற பெண் விவேகானந்தருக்கு நண்பரானார். அவர் மூலமாக பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நம்பிக்கையை பெற்றார் விவேகானந்தர். ஹென்றி ரைட் தனது நண்பரான சர்வமத மாநாட்டின் தலைவர் டாக்டர் பரோசுக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தி கடிதம் தந்தார். அத்துடன் விவேகானந்தரின் செலவுகளை சமாளிப்பதற்காக அங்கு இந்தியாவைப் பற்றிய சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்தார் ஜான் ரைட். இத்தனை தடைகளையும் மீறி சர்வமத மாநாட்டிற்கு போய் சேர்ந்தார் விவேகானந்தர். அங்கு ‘சகோதரர்களே! சகோதரிகளே!’’ என்று அழைத்து உரையை ஆரம்பித்ததுதான் காரணம். ஒட்டுமொத்த அரங்கமே எழுந்துநின்று கைதட்டியது. அந்த மாநாட்டின் போது அவருடைய வயது முப்பதுதான். அவருடைய பேச்சுகளைக் கேட்ட அமெரிக்கர்கள் நண்பர்களானார்கள். பல இடங்களில் அவரை பேச கூப்பிட்டார்கள். தனது உரைகளின் மூலம் அமெரிக்கர்களுக்கு இந்தியாவின் ஆன்மிகத்தையும், அப்போதிருந்த உண்மைநிலை பற்றியும் புரிய வைத்தார். அதனால் பல வெளிநாட்டு சீடர்கள் அவருக்கு கிடைத்தார். ஐரீஸ் நாட்டில் பிறந்து, இந்தியப் பெண்ணாக வாழ்ந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கிய சகோதரி நிவேதிதையும் அவர்களில் ஒருவர். இந்தியா வந்த விவேகானந்தரை இந்தியர்கள் அனைவரும் வரவேற்றார்கள். அவரது கருத்துக்களை பிடிக்காதவர்கள் கூட அவரை ஏற்றுக் கொண்டார்கள். அவரது செயல்திட்டங்களுக்கு ஊக்கம் தந்தார்கள். ‘‘நூறு இளைஞர்களை எனக்கு தந்தால் வலிமையான இந்தியாவை உருவாக்கி காட்டுவேன்’’ என்றவர் விவேகானந்தர். அவரது வாழ்க்கை ஆன்மீகவாதிகளுக்கு மட்டுமல்ல. செயல்படத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் உற்சாகம் தருகிறது.

Thursday, August 9, 2012

சீக்கியர் படுகொலையும் இந்தியர் எதிர்பார்ப்பும்

அமெரிக்காவில் உள்ள விஸ்காஸினில் இருக்கும் ஓக் க்ரீக் குருத்வாராவில் கடந்த 5ம் தேதி வேட் மைக்கேல் பேஜ் என்ற முன்னாள் ராணுவ வீரன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 சீக்கியர்கள் பலியானார்கள். 25க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் காயமடைந்தார்கள். உடனே பேஜை நோக்கி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய தாக்குதலில் பேஜ் சுட்டு கொல்லப்பட்டான். இந்த சம்பவத்திற்கு இந்தியாவிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடமும் பெரும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதலை கண்டித்து புதுடில்லியில் பல்லாயிரக்கணக்கான சிக்கியர்கள் அமைதி ஊர்வலம் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாகவே சீக்கியர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்ட மைக்கேல் பேஜும் வெள்ளை இனவெறியாளனே என்று ஒரு மனித உரிமை அமைப்பு கூறுகிறது. இந்தியர்களை குறிவைத்து நடக்கும் இந்த தாக்குதல்களை இந்திய அரசு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்தியாவின் கவலையை அமெரிக்க தூதர் நிருபமா ராவ் மூலமாக அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் குறித்து பல்வேறு சீக்கிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு அங்குள்ள சீக்கியர்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இது போன்ற சம்பவங்களுக்கு வெறும் இனவெறி மட்டுமே காரணமல்ல. மக்களுக்கு சுலபமாக துப்பாக்கி கிடைக்க வகை செய்யும் அமெரிக்க சட்டங்களும் காரணம் என்பதை கவனிக்க வேண்டும். அதிலும் குருத்வாரா தாக்குதல் நடந்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் துப்பாக்கி வழங்கும் சட்டம் எளிதாக உள்ளது. துப்பாக்கியை மக்கள் எளிதாக கையில் எடுப்பதால் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. போரில் பலியாகும் அமெரிக்க வீரர்களை விட துப்பாக்கி சூடுகளில் சிக்கி பலியாகும் அப்பாவி மக்களுடைய எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஓக் கிரீக் குருத்வாரா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க அரசு அமெரிக்க தேசியக் கொடிகளை அரை கம்பத்தில் ஏற்றி மூன்று நாள் துக்கம் அனுசரிப்பதாக ஒபாமா அறிவித்தது இந்திய - அமெரிக்க உறவுக்கு நல்ல அறிகுறி. ஆனால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு அங்குள்ள உள்நாட்டு துப்பாக்கி சட்டமே காரணம் என்பதை கவனத்தில் கொள்ளாதவர்களாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கவாழ் இந்தியர்களின் எதிர்ப்பார்ப்பு. அமெரிக்க அரசு அந்த நோக்கத்தை எப்போது பூர்த்தி செய்யும்?.

மனிதா... நீ மகத்தானவன்! - புத்தக மதிப்புரை

புத்தக மதிப்புரை புத்தகத்தின் பெயர் : மனிதா... நீ மகத்தானவன்! விலை : ரூ. 120.00 நூலாசிரியர் : யா.சு.கண்ணன் வெளியீடு : ஆர் மீடியா பதிப்பகம், 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை & 61. மொபைல்: 9884886240. இன்றைய உலகில் சுயமுன்னேற்ற நூல்கள் தமிழிலும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. ஆன்மீக இலக்கியங்களைக் கூட சுயமுன்னேற்ற அடிப்படையில் தந்தால் தான் இளைஞர்கள் விரும்பி படிக்கிறார்கள். ஆனால் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நூல்கள் தமிழில் குறைவே. இந்த புத்தகத்தை எழுதியதன் மூலம் அந்த குறையைத் தீர்க்க யா.சு.கண்ணன் முயன்றிருக்கிறார். வேறு அடிப்படைகளில் அல்லாமல் யதார்த்த அடிப்படையில் புத்தகத்தை எழுதியிருப்பது வாசகர்களின் ஈடுபாட்டை நிச்சயம் அதிகரிக்கும். அயல்நாட்டு சிந்தனையில் போகாமல் நமது பாரம்பரியத்தின் வழியில் நின்று புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. பணம் வாழ்க்கைக்கு அவசியம் என்றாலும் வெறும் பணம் மட்டும் மற்றவர்களின் மதிப்புக்கு போதுமானதல்ல. பணத்துடன் நல்ல குணாதசியங்கள் தேவை. அந்த குணங்கள் எவை என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார். மேலும், பல்வேறு தோல்விகளுக்கு காரணங்களையும் அவை தொடராமல் இருப்பதற்கு தேவையான பண்புகளையும் நாம் சிந்திப்பதில்லை. தோல்விகளை அறிந்துகொள்வதோடு அவற்றை போக்குவதற்கான காரணங்களையும் நாம் தெரிந்துகொள்வதே வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த சிந்தனையை இந்த புத்தகத்தில் யா.சு.கண்ணன் விடைத்திருக்கிறார். சாதாரண மனிதனும் இந்த புத்தகத்தை படித்தால் தன்னம்பிக்கை பெறுவது நிச்சயம். புத்தகத்திலிருந்து.... ‘லட்சியத்தை தெளிவாகத் தீர்மானியங்கள்; இலக்குகளை நிர்ணயுங்கள்; அவற்றை அடைய திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையுடன் முன் வந்து செயல்படுங்கள். பிறருடைய ஒத்துழைப்பையும் பெற்று முறைப்படுத்தப்பட்ட முயற்சியை மேற்கொள்ளுங்கள். ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாம் ஒரு தெளிவான திசையில் போய் கொண்டிருப்பது புலனாகும்’’. & பக்கம்.51

எண்ணமும் கோபமும் - நீதிக்கதை

ஒரு ஊரை அரசன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் தினசரி தேரிலேறி நகர்வலம் வருவான். அவன் நகர்வலம் வரும்போது மக்கள் அனைவரும் அவனுக்கு வணக்கம் செல்லுவார்கள். அவனும் மகிழ்ச்சியுடன் திரும்ப அவர்களுக்கு வணக்கம் தெரிவிப்பான். அந்த மக்களில் ஒரு விறகு கடைக்காரனும் இருந்தான். அவன் கடையை அரசன் கடந்துப் போகும் போதெல்லாம் அவன் வணக்கம் சொல்லுவான். அரசனும் மனதில் மிகுந்த வெறுப்பாக பதில் வணக்கம் தெரிவிப்பான். அந்த விறகு கடைக்காரனை பார்க்கும் போதெல்லாம் கோபம் வரும். ஆனால் அரசனுக்கு அதன் காரணம் தெரியவில்லை. தன்னுடைய அமைச்சரைக் கூப்பிட்டு, ‘‘அவனைப் பார்த்தால் மட்டும் எனக்கு வெறுப்பு வருகிறதே? என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். அமைச்சரோ இரண்டு நாள் கழித்து தான் பதில் சொல்ல முடியும் என்றுக் கூறிவிட்டார். இரண்டு நாள் கழித்து அரசன் வழக்கம் போல அந்த விறகு கடைக்காரனை கடந்து சென்றான். அவனுக்கு பதில் வணக்கம் சொல்லும் போது மகிழ்ச்சி பொங்கியது. அரண்மனைக்குத் திரும்பியவுடன் அமைச்சரை கூப்பிட்டு இந்த மனமாற்றத்திற்கு காரணம் கேட்டான். அமைச்சர் இப்போது பதில் கூறினார்: ‘‘அரசே! அந்த விறகு கடைகாரன் தன்னுடைய கடையில் நிறைய சந்தனக் கட்டைகளை இறக்கியிருந்தான். ஆனால் ஒன்று கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் இந்த சந்தனக் கட்டைகள் வியாபாரம் ஆக வேண்டுமென்றால் அரசன் சாக வேண்டும்; அப்போது மட்டும்தான் சந்தனக் கட்டைகள் விற்பனையாகும் என்று நினைத்துக் கொண்டான். அதே வெறுப்புடன் உங்களுக்கு மேலோட்டமான சிரிப்புடன் வணக்கம் கூறுவான். அதனால் உங்களுக்கு அவன் மேல் கோபம் வந்தது’’ என்றார். அரசனுக்கு ஒரே ஆச்சரியம். ‘‘அது சரி. இப்போது அவனை பார்த்தபோது மகிழ்ச்சி வந்ததே? அதற்கு என்ன காரணம்?’’ என்றுக் கேட்டான். ‘‘நான் செய்த வேலைதான் காரணம் அரசே. நமது அரண்மனை வேலையாட்களுடன் அவனுடைய கடைக்கு போனேன். நம்முடைய அரண்மனையில் ராஜா பெரிய யாகம் ஒன்றை நடத்தவிருக்கிறார். அதற்கு நிறைய சந்தனக் கட்டைகள் தேவை என்று சொல்லி அவனிடமிருந்த சந்தனக் கட்டைகள் அனைத்தையும் வாங்கி விட்டேன். மேலும் தேவைப்பட்டால் உனக்குத் தெரிவிக்கிறேன் என்றுக் கூறிவிட்டேன். இன்று அவன் உங்களைப் பார்க்கும் போது அரசன் நீண்ட நாள் வாழ வேண்டும். அப்போது தான் நிறைய யாகங்களை நடத்துவார். தனக்கும் வியாபாரம் நடக்கும் என்று நினைத்துக் கொண்டே உங்களுக்கு வணக்கம் கூறினான். அவன் மனதில் தங்களைப் பற்றிய நல்ல எண்ணம் ஓடியதால் உங்களுக்கும் அவன் வணக்கம் சொல்லும்போது மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று பெரிய விளக்கம் தந்தார் அமைச்சர். அரசன் அமைச்சரின் மதியூகத்தைக் கண்டு வியந்து அவருக்கு பரிசும் தந்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா? மாணவர்களான நமக்கும் இது பொருந்தும். நல்ல எண்ணங்களுடன் நண்பர்களைத் தேடினால் நமக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கெட்ட எண்ணத்துடன் பழகினால் கெட்ட நண்பர்களும், எதிரிகளும் தான் நமக்கு கிடைப்பார்கள்.