Sunday, November 25, 2012

மிருக வதைப் பூங்கா


'இந்தப் படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை' - இது விலங்குகளைப் பயன்படுத்தும் எல்லாப் படங்களிலும் இடம்பெற்றாக வேண்டிய சட்டபூர்வமான அறிவிப்பு. விலங்குகளை ஏதேனும் ஒரு வகையில் துன்புறுத்தியதாகத் தெரிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விலங்குகள் பயன்படுத்தப்படும் படங்களில் இந்தச் சான்றொப்பம் அவசியம் இடம்பெற வேண்டும். அரசுக்கு விலங்குகள் மீது இத்தனை கரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் வண்டலூரில் நடப்பதைப் பார்த்தால் இது ஊருக்குத்தான் உபதேசம் என்று தோன்றுகிறது. வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன்னால் யானை ஒன்று இறந்தது. திடீரென்று ஏற்பட்ட உடல் நலக் குறைவினால் அது மரணம் அடைந்ததாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்தது. ஆனால் அந்த யானை சரியாகச் சாப்பிடாததே மரணத்திற்குக் காரணமாக அமைந்தது என அந்தச் செய்தி தெரிவித்தது. பூங்காவில் மிருகங்களுக்கு உணவிடுவதற்காகக் கொள்முதல் செய்யப்படும் மாமிசத்தின் அளவு ஒரு நாளைக்கு 80 கிலோதான். அதைத்தான் அங்குள்ள எல்லா மிருகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். அங்கிருக்கும் முதலையின் உணவுத் தேவை மட்டுமே 80 கிலோ மாமிசம் என்பதை கவனிக்க வேண்டும். இதில் மற்ற மிருகங்களுக்குக் கொடுத்த பிறகு முதலை சாப்பிடும் உணவு 2 கிலோ மட்டுமே. எல்லா மிருகங்களுக்கும் இதே கதிதான். கடல் கழுகு என்ற மிருகம் கடல் நீரில் மட்டுமே வாழும். இங்கே அதற்கு நீரே காண்பிக்கப்படுவதில்லை என்பது கண்ணில் நீரை வரவழைக்கிறது. இதெல்லாம் போதாதென்று இன்னொரு கொடூரமும் நடக்கிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை. செவ்வாயன்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். திங்கட்கிழமை மதியம் சாப்பிடும் மிருகங்களுக்கு அடுத்தது புதன் மதியம்தான் உணவு வைக்கப்படுகிறது. அதுவரை கொலைப் பட்டினி. இது மிருக வதை இல்லை என்றால் வேறு எது மிருக வதை? அதிர்ச்சி தரும் இந்தத் தகவல்கள் அரசல் புரசலாகப் பேசப்படுபவை அல்ல. பிரபலமான நாளிதழில் வந்தவை. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மன்னிக்க முடியாத அலட்சியம் என்பதில் சந்தேகமில்லை. சரியாகப் பாதுகாக்க முடியாவிட்டால் அந்த விலங்குகளைக் காட்டில் விட்டுவிடலாம். மாபெரும் அறிவியல் பூங்கா என்னும் பெருமையைக் காப்பதற்காக விலங்குகளைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டாம்.

Saturday, November 24, 2012

தாக்கரே மறைவு ஏற்படுத்திய சலனம்

சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கடந்த 17ஆம் தேதி மாலை காலமானார். 86 வயதான தாக்கரே, கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். வருடந்தோறும் தசரா திருவிழாவின் போது தொண்டர்களிடையே உரையாற்றுவது அவரது வழக்கம். கடந்த மாதம் அவரால் நேரில் வரமுடியாததால் ஒளிப்படத்தில் தோன்றி பேட்டியளித்தார். அப்போது தனக்கு பின்னால் தனது மகனும் சிவசேனையின் தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கும், பேரன் ஆதித்ய தாக்கரேவுக்கும் தொடர்ந்து ஆதரவு தருமாறு தொண்டர்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரசியல் கார்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவக்கிய பால் தாக்கரே, 1966இல் சிவசேனைக் கட்சியை நிறுவினார். மேலும் ‘சாம்னா’ என்ற பத்திரிக்கையைத் துவக்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். கட்சி ஆரம்பித்த சில மாதங்களில் நடந்த மாநாட்டிலேயே 5 லட்சம் மக்கள் திரண்டார்கள். 1980களில் இருந்து சிவசேனைக் கட்சி தேர்தல் களத்தில் குதித்தது. 1990களில் பா.ஜ.க.வுடன் இணைந்து சிவசேனை ஆட்சியமைத்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வராகப் பதவியேற்றாலும் பால் தாக்கரே தான் நிஜ முதல்வர் என்ற பேச்சு கிளம்பியது. தீவிரமான மகாராஷ்ட்ர வெறியராகவும், அதே நேரத்தில் சிறந்த நாட்டுப்பற்றுமிக்கவராகவும் தாக்கரே விளங்கினார். தீவிர இந்துத்துவவாதியாகவும் அவர் திகழ்ந்தார். எந்த சமயத்திலும் தனது கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. ‘மும்பை மாநகரம் மராட்டியருக்கே’ என்ற கோஷத்துடன் மும்பையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் 1993இல் மும்பையில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்துக்கு பால் தாக்கரேவின் உணர்ச்சியைத் தூண்டும் பேச்சுதான் காரணம் என்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம்சாட்டியது. அருண் சால்வா போன்ற பல தாதாக்கள் சிவசேனையில் இணைந்ததால் அது தாதாக்களின் கட்சி என்று வர்ணிக்கப்பட்டது. ஒரு நேரத்தில் ‘மும்பை அனைவருக்கும் சொந்தம்’ என்று பேட்டியளித்தபோது சிவசேனையின் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிட்டது. காஷ்மீர் பிரச்சினை தீரும்வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவு கூடாது என்று வலியுறுத்தினார். காதலர் தினம் போன்ற அயல்நாட்டு கொண்டாட்டங்களை இந்தியாவில் கொண்டாட கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 25 வருடங்களுக்கு மேலாக பா.ஜ.க.வின் கூட்டணியில் சிவசேனை நீடித்து வருகிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பால் தாக்கரே தொடர்ந்து சங்கடங்களை ஏற்படுத்தி வந்தார். 2007ஆம் ஆண்டு நடந்த இந்திய ஜனாதிபதி தேர்தலில் பைரோன்சிங் ஷெகாவத்தை ஆதரிப்பது என்ற தே.ஜ.கூட்டணியின் முடிவை மீறி மராட்டியர் என்பதால் காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டிலை சிவசேனை ஆதரித்தது. பால் தாக்கரே தனது அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக அறிவித்தவுடன் கட்சியில் பிளவு ஏற்பட்டது. 2006இல் பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சியை உடைத்து மாகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா என்ற கட்சியை நிறுவினார். அவரது கட்சியும் மும்பையில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்து வருகிறது. பால் தாக்கரேவின் மரணத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள். பால் தாக்கரே இறந்தபோது மும்பை மாநகரம் மயான அமைதியாக காட்சியளித்தது. அவர் இறக்கும் சில நாட்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பால் தாக்கரேவின் மரணம் காரணமாக மும்பை நகரம் ஸ்தம்பித்து நின்றதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ரேணு சிங், ஷகீன் தாஹா என்ற இரண்டு பெண்கள் மத உணர்வைப் புண்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு மும்பை போலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். இந்த கைது சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலை மக்கள் ஏற்பார்களா?

வரும் 2014ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. அதற்கு ஆயுத்தமாவதற்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. அதன் தலைவராக காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனம் வரும் தேர்தலில் காங்கிரசை கரையேற்றுமா அல்லது வீழ்த்தி விடுமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவரும். கடந்த 2004ஆம் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமராக முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கிய சோனியா காந்தி மன்மோகன் சிங்கை பிரதமராக முமொழிந்தார். அப்போது எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர மறுத்தார். ஆனால் காங்கிரசை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அவரை விடுவதாக இல்லை. தொடர்ந்து பிரதமர் பதவியேற்க வலியுறுத்தி வருகிறார்கள். 2009இல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றபோது ராகுல் காந்தியை பிரதமராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ராகுல் மறுத்துவிட்டார். கடந்த 3 வருடங்களாக ஆட்சியில் நடந்துள்ள ஏராளமான ஊழல்கள் வெளிவந்து காங்கிரஸ் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அண்ணா ஹசாரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மத்திய அரசின் ஊழலுக்கு எதிராக போராடி வருவதால் நாடு முழுவதும் காங்கிரசுக்கு எதிரான நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுவந்த திருணமூல் காங்கிரஸ் கட்சி சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. மேலும் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்நிலையில் காங்கிரசின் தேர்தல் குழு மேலாளராக ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரசை ராகுல் காந்தி வழிநடத்தினார். அவர் தேர்தல் பொறுப்பேற்ற மாநிலங்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துவிடவில்லை. குறிப்பாக அவர் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதும் உத்தர பிரதேசம், பீகார் ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராகுல் காந்தியை தேர்தல் பிரிவு மேலாளராக அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு தயக்கம் காட்டுவதை ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. தற்போது நிலவும் சூழ்நிலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிடுமானால் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்க மக்கள் மறுத்துவிட்டார்கள் என்ற எண்ணம் வலுப்படும். இப்போதைய சூழலில் காங்கிரசுக்கு நேரு குடும்பத்தை விட்டால் வழியில்லை. அதனால் காங்கிரஸ் இம்முறை கவனமாக களமிறங்குகிறது. பிரதமர் பதவியில் ராகுல் அமருவாரா மாட்டாரா என்பதற்கு மக்களிடம் தான் பதில் இருக்கிறது.

Friday, November 23, 2012

நுகர்வோர் பாதுகாப்பில் அலட்சியம்

நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஒருபுறம் ஈடுபட்டாலும் இன்னொரு பக்கத்தில் அரசின் முயற்சிகளை நசுக்கும் விதத்தில் அரசு நிறுவனங்களே நுகர்வோரைக் காயப்படுத்துகின்றன. அதிலும் ஆசியாவில் மிகப் பெரிய நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழும் ரயில்வேயில் ஏராளமான அலட்சியங்கள் நடக்கின்றன. விஷயம் இதுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தகுமார் என்பவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுக்காகச் சென்றிருந்தார். தன் பயணம் தொடர்பாக அவர் விசாரித்துக்கொண்டிருந்தபோது டிக்கெட் கொடுப்பவருக்கும் அவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பேச்சு முற்றிப் போய் வார்த்தை தடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் பணியாளர்கள் வசந்தகுமாரை அடிக்கக் கை ஓங்கியிருக்கிறார்கள். வசந்தகுமார் ரயில்வே துறையில் பணியாற்றும் மேலதிகாரிகளிடம் புகார் செய்திருக்கிறார். பலன் இல்லை. குமார் விடவில்லை. தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வரையில் புகார் தெரிவித்தார். அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. வசந்தகுமார் வழக்கறிஞர். உயர் தீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், இந்த புகாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் ரயில்வே துறையைக் கடுமையாக எச்சரித்துள்ளார். நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு அரசுப் பணியாளர்களுக்குக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். வாடிக்கையாளர்களிடம் நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் கட்டாயம் இருக்க வேண்டும். 'நுகர்வோரே முக்கியமானவர்' என்று கூறினார் மகாத்மா காந்தி. ஆனால் சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் கழித்தும் நுகர்வோர் நலன் பற்றிய பொறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்படாதது கவலைக்குரிய விஷயம். சேவைகளில் குறைவு ஏற்பட்டால் நுகர்வோருக்குக் கோபம் வருகிறது. ஆனால் மக்களில் பலர் அவமானம் ஏற்பட்டாலும் கூச்சத்தால் மௌனமாக இருக்கிறார்கள். நுகர்வோர் உரிமைக்காக யாராவது குரல் கொடுத்தால் அவர்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு கிடைப்பதில்லை அமைப்பின் மீது இருக்கும் அவநம்பிக்கையும் செயல்படுவதில் உள்ள சுணக்கமுமே இதற்குக் காரணம். ஆனால் முனைப்புடன் செயலாற்றி மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே நமது அடிப்படை உரிமைகளில் சுணக்கம் ஏற்பட்டால் தைரியமாகக் குரல் எழுப்பும் சூழல் உருவாக வேண்டும். (சென்னை சலனங்கள் - 1)

குழந்தைகளை பிச்சை எடுக்க விடலாமா?

கடந்த 17ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அங்கிருந்த காவலர்களுக்கு அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்தது. அந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அவர் கூறிய தகவலைக் கேட்டுக் காவல்துறையினர் அதிர்ந்து போனார்கள். அந்த குழந்தை அக்டோபர் 29ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் பிறந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு விதவை. இந்தக் குழந்தை முறை தவறிப் பிறந்தது என்பதாலும், அந்தத் தாய் ஏழை என்பதாலும் அதை விற்றுவிட முயற்சித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. அப்போது முனியம்மா என்பவரிடம் 1000 ரூபாய்க்கு விற்க முயற்சி செய்திருக்கிறார். முனியம்மா பேரம் பேசி நூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். கடந்த மாதம் நாளிதழ்களில் வெளிவந்த மற்றொரு செய்தியும் இதன் தொடர்பில் கவனிக்கத் தக்கது. ராயபுரம் அரசு பொது மருத்துவமனையில் ஒரு குழந்தை தொலைந்து போனது. விசாரணையில் குழந்தை பிறக்காத ஏக்கத்தால் ஒரு பெண் திருடியதாகத் தெரியவந்தது. இந்த குழந்தையின் தாய் குழந்தையைக் காணாமல் தவித்தப்போது மருத்துவமனையின் டாக்டரும், நர்சுகளும் அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளார்கள். குழந்தையை விற்பது, திருடுவது இரண்டும் அரசு மருத்துவமனைகளில் நடந்திருக்கின்றன. வசதி அற்ற பிரிவினரில் பெரும்பாலான குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில்தான் பிறக்கின்றன. இந்த மருத்துவமனைகளில் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருகிறது. அலட்சியம், கண்காணிப்பின்மை, எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழல் ஆகியவையே இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இதுபோன்ற சம்பவங்களைத் தொடர விடாமல் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பாதுகாப்பைக் கூட்ட வேண்டும். அங்குள்ள பணியாகளின் பொறுப்புணர்வைக் கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பதைத் தடை செய்வது இதுபோன்ற குற்றங்களைக் களைய உதவும். குழந்தை தொழிலாளர் போன்று இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைதான். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது. குழந்தையை வைத்து பிச்சையெடுப்பவர்கள் மீது சந்தாகம் எழுந்தால் அமைதியாகக் கடந்து செல்லாமல் குழந்தைகளுகு உதவுவதற்கான இலவச அழைப்பு எண் 1098ஐ அழைத்துத் தகவல் அளியுங்கள். ஒரு குழந்தையின் வருங்காலத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். (சென்னை சலனங்கள் - 2)

சவீதா விவகாரம் நடந்தது என்ன?

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளிகள் வசித்து வருகிறார்கள். சில நாடுகளின் சட்டதிட்டங்கள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் தப்ப முடிவதில்லை. சமீபத்திய உதாரணம் சவீதா. இப்போது சவீதாவின் கதையைப் படிப்போம். அயர்லாந்தில் வசித்த பெண் மருத்துவர் சவீதா ஹலப்பனாவர். அவர் சில மாதங்களுக்கு முன்னால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது. அதனால் சவீதா முழுமையாக கருக்கலைப்பு செய்துகொள்வதற்காக மருத்துவர்களை அணுகினார். சவீதாவும் ஒரு மருத்துவரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த நாட்டில் கருக்கலைப்புத் தடைச் சட்டம் அமலில் உள்ளதால் கருக்கலைப்பு செய்ய ஐரிஷ் நாட்டு மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். கருவின் மூலமாக விஷம் பரவியதால் சவீதா செப்டிசீமியா என்ற மோசமான பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாட்டிலும் கருக்கலைப்பு எதிரான போராட்டங்கள் தலைதூக்கியுள்ளன. கருக்கலைப்பு விதிகளை தளர்த்தக்கோரி அந்நாட்டு தலைநகரம் டப்ளினில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், லண்டனில் உள்ள அயர்லாந்து தூதரகத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் இந்த மரணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அயர்லாந்து அரசை தொடர்புக் கொண்டது. அதன் காரணமாக சவீதாவின் மரணம் குறித்து 7 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த விசாரணை குழுவில் சவீதாவுக்கு சிகிச்சையளித்த கால்வே மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 பேர் இருப்பதால் நியாயமான விசாரணை நடக்காது என்று சவீதாவின் கணவர் பிரவீண் ஹலப்பனாவர் கூறினார். இதையடுத்து அந்த மூன்று பேரையும் குழுவில் இருந்து நீக்குமாறு அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி உத்தரவிட்டுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு மறுப்புச் சட்டத்தை உடனடியாக திருத்த முடியாது என்றாலும் திருத்தம் கொண்டுவர பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் ஒரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். கருக்கலைப்பு செய்வது பாவம் என்று கத்தோலிக்கர்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணம் அவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளின் சட்டங்களில் எதிரொலிக்கிறது. இதனை அமல்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை. யதார்த்த உணர்வற்ற இந்த சட்டங்களால் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் நமது நாட்டிலோ, வெளிநாட்டவர்களுக்கு கருணை காட்டப்படுகிறது. மேலும் வெளிநாட்டு மதங்களைச் சேர்ந்தவர்களையும் பரந்த மனப்பான்மையோடு அணுகுகிறோம். இந்த சூழ்நிலை நமது சட்டங்களில் எதிரொலிக்கிறது. எனவே பாரதம், உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமிதம் கொள்வோம்

Tuesday, November 20, 2012

ஒபாமாவின் வெற்றி

கடந்த நவம்பர் 7ஆம் தேதி நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இரண்டாவது முறை ஜனாதிபதியாக வருவதற்கு இந்த முறை அவர் போராட வேண்டியிருந்தது. 2008ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா முதன்முறையாகப் போட்டியிட்டார். கருப்பர் இன மக்களின் ஆதரவுள்ள ஜனநாயகக் கட்சியின் சார்பில் அவர் நிறுத்தப்பட்டார். ஒரு கருப்பருக்கும், முஸ்லிம் தாய்க்கும் பிறந்த ஒபாமா, 1996இல் நடந்த அமெரிக்க செனட் தேர்தலில் போது அரசியலுக்குள் நுழைந்தார். அமெரிக்காவில் சிறுபான்மையின மக்களான கருப்பர்களின் பிரதிநிதியாக ஒபாமா கருதப்பட்டார். மேலும் 2007ஆம் ஆண்டு தொடங்கி அமெரிக்கப் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடந்ததால் ஒபாமா பொருளாதார சீர்த்திருத்தத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அமெரிக்காவை கடனில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கப் போவதாக அறிவித்தார். முக்கியமாக, அவரது ‘நம்மால் முடியும்’ (YES WE CAN!) என்ற வாசகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கருப்பின மக்களின் வாக்குகள், சீர்திருத்தத்தை எதிர்பார்த்தவர்களின் வாக்குகள் ஒபாமாவிற்கு குவிந்ததால் 2008இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவிற்கு ஆதரவானவர் என்ற தோற்றமும் ஒபாமாவுக்கு இருந்தது. ஆனால் அவர் சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தியாவிற்கு பாதகமான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டன என்பதையும் சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டினார்கள். கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் ஒபாமாவின் சாதனை என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை. உலகத்தை அச்சுறுத்தி வந்த பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனைக் கொன்றதை வேண்டுமானால் அவரது ஆட்சியில் நடந்த மிகப்பெரிய சாதனை எனலாம். என்றாலும் ஒபாமா பல முயற்சிகளை முன்னெடுத்தார். பல பிரச்சினைகளில் அமெரிக்காவை முற்போக்குப் பார்வைக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். உதாரணமாக ஓரினச் சேர்க்கைப் பிரிவினரின் பாதுகாப்பை ஒபாமா உறுதி செய்தார். கருத்தடைச் சாதனங்களை சட்டபூர்வமானதாக மாற்றினார். செப்டம்பர் 11, 2011க்குப் பிறகு அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகின. ஆனால் ஒபாமா ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்தன. அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருந்த நேரத்தில் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அவரது செயல்பாடுகள் பெரியளவில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும் சில சலனங்கள் ஏற்பட்டன. சிட்டி வங்கியை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்தது ஒபாமாவின் மதிப்பை அதிகரிக்கச் செய்தது. அமெரிக்காவில் பள்ளிக் கல்வியைப் பாதியில் விட்டு வெளியேறுபவர்கள் அதிகம். அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வைக்கும் விதத்தில் அமெரிக்கப் பள்ளிக் கல்வியில் மாறுதல் கொண்டுவர ஒபாமா திட்டமிட்டுள்ளார். உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க செயல்முறை அயலாக்க நடைமுறையைத் தடை செய்தது போன்ற சில நடவடிக்கைகளை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அவர் அயலாக்கத்தை தடை செய்தது இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இந்தியாவுக்கு அயலாக்கப் பணிகளைத் தந்துவந்த பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவுக்கு நேரடியாக வந்து நிறுவனங்களை ஆரம்பித்தன. அதனால் ஒபாமாவின் இந்தத் திட்டம் செல்லுபடியாகவில்லை. ஒபாமாவின் சறுக்கல்கள் என்று சொல்லக்கூடிய அளவில் ஏராளமான சம்பவங்கள் நடந்தன. ஈரான் விவகாரத்தில் வெளியுறவுக் கொள்கை அப்படியே தொடர்கிறது. லிபியாவில் அமெரிக்கா தலையிட்டதை உலகமே கண்டிக்கிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற மக்களின் எண்ணிக்கை 8 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தின. மேலும் ஒபாமாவுக்கு ஒரு கவலையும் இருக்கிறது. குறிப்பாக சோஷலிசப் பொருளாதாரம் தோல்வியடைந்த பிறகு ‘முதலாளித்துவம்’ என்ற பெயரில் அமெரிக்காவின் பொருளாதாரமே உலகத்தை ஆட்டிப் படைத்தது. ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த பின்னர், பல நாடுகள் தங்களது போக்கைத் தாங்களாகவே தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. உலக நாடுகளை அமெரிக்காவின் பிடியில் வைத்திருந்தால்தான் அந்நாட்டின் பொருளாதாரம் சரியாகும் என்பது அமெரிக்க ஆட்சியாளர்களின் நம்பிக்கை. அதில் ஒபாமாவும் விதிவிலக்கல்ல. இதன் காரணமாகவே இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டைக் குறித்து அவர் கருத்துக் கூறினார். ஒருவேளை உலக நாடுகளின் பொருளாதாரங்கள் அமெரிக்காவைப் பின்பற்றாவிட்டால் தனக்கு அமெரிக்க வரலாற்றில் அழியாத அவப்பெயர் கிடைக்கும் என்பதுதான் ஒபாமாவின் கவலை. நடந்து முடிந்த தேர்தலில் இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று ஒபாமா பிரச்சாரம் செய்தார். அதைக் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னி கடுமையாக சாடினார். இந்த முறை இன்னொரு வேடிக்கையும் நடந்தது. ‘ஒபாமா கருப்பு இனத்தவர், அவருக்கு ஓட்டு போடாதீர்கள்’ என்று மிட் ரோம்னியும் அவர் சார்ந்துள்ள குடியரசு கட்சியினரும் பிரச்சாரம் செய்தார்கள். மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் கருப்பின மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதன் காரணமாக சில கருப்பினத்தவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்கவும் செய்தார்கள். ஒபாமாவின் இரண்டாவது வெற்றியை பிரம்மாண்டமானது என்று குறிப்பிட முடியாது. அமெரிக்க மக்கள் போனால் போகட்டும் என்று அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். இந்த முறை அவரது வெற்றிக்கு இனமோ அல்லது நிறமோ காரணமாக அமையவில்லை. சமீபத்தில் நடந்த சாண்டி புயலின் போது ஒபாமாவின் வேகத்தைக் குடியரசுக் கட்சியினர்கூட பாராட்டினார்கள். அந்த நிவாரணப் பணிகூட ஒபாமாவின் வெற்றிக்கு காரணமாக விளங்கியது. இனியொரு முறை ஒபாமாவுக்கு ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைக்காது. ஒபாமாவிடம் உலகமே ஏராளமான விஷயங்களை எதிர்ப்பார்க்கிறது. குறிப்பாக உலக அமைதியில் அமெரிக்காவின் பங்கு தவிர்க்க முடியாதது. ஏறக்குறைய அனைத்து உலக நாடுகளுக்கும் அமெரிக்காவின் நட்பு முக்கியமானது. ஐ.நா. சபையிலும் அமெரிக்காவின் செயல்பாடுகளைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் அமெரிக்க மக்களும் தங்களுடைய தலைவர்கள் உலகப் பெரும் தலைவர்களாக இருப்பதை விரும்புகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகத்தின் சமாதானம் பற்றியும் விவாதிக்கப்படும். அதிபர் பராக் ஹுசைனி ஒபாமாவின் கருத்துக்கள் உலக சமாதானத்தை நிலைநாட்டுபவையாகக் கருதப்படுகின்றன. அவர் தனது செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே தனது கருத்துக்களின் மூலம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இலங்கை விஷயத்தில் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கைகள் பாராட்டத்தக்க அளவில் உள்ளன. உலகம் முழுவதையும் உலுக்கியெடுத்த சேனல் 4இன் காணொளி வெளியான பிறகு ஈழம் தொடர்பான அமெரிக்காவின் செயல்களில் வேகம் தெரிந்தது. ஆனால் 2009இல் நடந்த இனப்போர் சமயத்தில் தமிழர்களின் கதறலை அமெரிக்கா காதில் வாங்க மறுத்ததையும் அந்த நேரத்தில் இலங்கை அரசுக்கு உதவிகள் செய்ததையும் மறக்க முடியாது. இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத் தமிழர் பிரச்சினைகளில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு இரட்டை நிலையாகவே தெரிகிறது. ஒபாமா இந்த பிரச்சினையில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். மேலும் சமீப காலமாக உலக நாடுகள் அமெரிக்காவின் பிடியிலிருந்து கழன்று வருவதையும் கவனிக்க வேண்டும். ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஒபாமா குறை கூறியிருக்கிறார். ஆனால் பல உலக நாடுகளை அணு ஆயுதத்தைக் காட்டி அமெரிக்கா மிரட்டியதையும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதையும் உலகம் இன்றுவரை மறக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை ஒபாமா முழுவதும் சரிசெய்ய முடியாவிட்டாலும் உலக சமாதானத்தில் அமெரிக்காவின் பங்கை ஓரளவாவது உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் மகத்தானவராக ஒபாமா வரலாற்றில் இடம்பெறுவார். அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியின் சிக்கித் தவிக்கிறது. அதோடு உலகம் இன்று பல கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. உலகின் ஒற்றை வல்லரசாக விலங்கும் அமெரிக்காவின் அதிபராக இந்தச் சமயத்தில் இருப்பது பெரும் சவாலான விஷயம். இதை வெற்றிகரமாக சமாளித்து சரித்திர நாயகனாக ஒபாமா விளங்குவாரா? அல்லது கால வெள்ளத்தில் கரைந்து போவாரா? பதிலை அறிவதற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

Thursday, November 15, 2012

துப்பாக்கி – திரைப்பார்வை

சாதாரணமாக நான் நடிகர் விஜய் நடித்த படங்களை பார்ப்பதில்லை. அவருக்கு நடிக்கத் தெரியாது என்ற கருத்து பரவலாக இருப்பதே அதற்கு காரணம். இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ திரைப்படத்தையும் முதலில் பார்க்க விரும்பவில்லை. ஆனால் முதல் நாள் படம் பார்த்த ஒரு நண்பர் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறினார். இந்த படத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியும் வந்தது. சரி, படத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது போல என்று தோன்றியது. உடனே அந்த படத்தை விஜய்க்காக இல்லாவிட்டாலும், ஏ.ஆர். முருகதாசுக்காகவாவது ஒருதடவை பார்த்துவிடலாம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டேன். அந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறிவதற்காக இணையத்தில் பதிவு செய்து டிக்கெட் வாங்கினேன். இரண்டாவது நாள் இரவுக் காட்சிக்கு தான் டிக்கெட் கிடைத்தது. புறப்படுவதற்கு முன்னால் ஒரு நண்பன் போனில் கூப்பிட்டான். ‘படத்தில் முஸ்லிம்களை வெறுப்பேற்றும் வகையில் ஏதாவது தெரிகிறதா என்று பார்’ என்றான். ஆனால் இதன் மூலம் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால், படத்தில் முஸ்லிம்களை அவமானப்படுத்தும் காட்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் படம் வடமேற்குப் பகுதியிலிருந்து கதை நகர்கிறது. அந்த எல்லைப்புறத்தில் ஊடுருவல்காரர்கள் முஸ்லிம்களாக இருப்பதால் அப்படி காட்ட நேரிடுகிறது. வில்லனுக்கு உதவும் போலிஸ் அதிகாரியின் பெயர் முஸ்லிம் பெயராக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் முதலில் இன்பசேகர் என்ற ஒரு போலிஸ் அதிகாரி வில்லனுக்கு உதவி செய்ததை விஜய் கண்டுபிடிப்பதாக கதை போகிறது. இன்பசேகர் என்பது எந்த மதத்தவர்களின் பெயர் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும். வெறும் விளம்பரத்துக்காகவே சில முஸ்லிம்கள் படத்தைக் கண்டிப்பதாகத் தோன்றுகிறது. படத்தின் கதை இதுதான். எல்லைப்புறத்தில் நாட்டுக்காக போராடும் ராணுவ வீரன் ஜகதீஷ் விடுமுறைக்காக மும்பையில் உள்ள வீட்டிற்கு வருகிறான். வந்தவுடனே அவனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. முதலில் அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு அவளை விரும்புகிறான். ஒருநாள் பஸ்சில் ஒரு பிக் பாக்கெட்டை தேடும்போது ஒருவன் சந்தேகத்துக்கிடமாகத் தெரிகிறான். அவனைப் பிடிக்க ஓடும்போது அவர்கள் பயணம் செய்த பஸ் வெடித்து குழந்தைகள் பலியாகிறார்கள். அந்த பயங்கரவாதியை பிடித்து போலிசில் ஒப்படைக்கிறான். ஆனால் அவன் தப்பிக்க முயல்வதால் அவனை மீண்டும் பிடித்து தனது வீட்டில் அடைத்து வைக்கிறான். அவன் மூலம் மும்பை மாநகரத்தில் ஒரே நாளில் 12 இடங்களில் குண்டுவைக்க திட்டமிட்டிருப்பதை கண்டுபிடித்து ’சீக்ரெட் செல்’ என்று சொல்லப்படும் அந்த 12 பயங்கரவாதிகளையும் ஒரே சமயத்தில் சுட்டு வீழ்த்துகிறார்கள். தனது திட்டத்தை அழித்தவனை தேடிக் கொண்டு சீக்ரெட் செல் தலைவன் வடமேற்குப் பகுதியிலிருந்து வருகிறான். அவனை எப்படி ஜகதீஷ் (விஜய்) அழித்து நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ். பல படங்களில் ராணுவ வீரர்களின் சாகசங்களை காண்பித்திருந்தாலும் இந்த படத்தில் அவர்கள் தங்களது குடும்பத்துடன் கழிக்கும் நாட்களைச் சுற்றி கதை நகர்கிறது. பயங்கராவாதிக்கு உதவும் செக்யூரிட்டி ஆபிஸரை சந்திக்கும் காட்சியில் விஜய், ராணுவ வீரர்களின் தியாகத்தைச் சொல்லும்போது திரையரங்கமே மௌனத்தில் ஆழ்கிறது. படத்தில் இறுதியில் ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தைப் பிரிந்து ரயிலேறும் போது நமது மனமும் நெகிழ்வதை தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் விஜய் நடிக்கும் படங்கள் ஓடும். விஜய் ரசிகர்களுக்கும் தீனி கிடைக்கும். முடிவு நடிகர் கையில் தான். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காலத்திற்கு ஏற்ற வகையில் நல்லதொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் “கூகுள்… கூகுள்…” பாடல் அருமை. காட்சியுடன் இணைந்து “போய் வரவா” பாடலும் நெகிழ வைக்கின்றன. பின்னணி இசை அமர்க்களம். படத்தில் சந்தேகங்களும் இல்லாமல் இல்லை. என்ன தான் நாயகன் ரகசிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் யாரும் அவரை கண்டுபிடிக்க முடியாமலா இருக்கும்?. எல்லா இடங்களிலும் ஹீரோயிசம் அதிகமாகத் தெரிகிறது. ஹீரோயிசம் தமிழில் தற்போது குறைந்துவருகிற நேரத்தில் இப்படி தேவையா?. மொத்தத்தில், துப்பாக்கி… தீபாவளி படங்களில் மசாலா கலந்த சரவெடி. - சந்திர. பிரவீண்குமார்.