Tuesday, February 19, 2013

ஹெலிகாப்டர் பேர ஊழல் காங்கிரஸின் அச்சை முறிக்குமா இந்த மயிலிறகு?

துரித கதியில் ஒரு பின்னோட்டம்: 1987ஆம் ஆண்டு. அன்றைய காங்கிரஸ் அரசை ஆண்டுகொண்டிருந்த ராஜிவ் காந்தி மீது எதிர்க்கட்சிகள் ஃபோபர்ஸ் ஊழலைச் சுமத்தின. இந்திய ராணுவத்திற்கு ஃபோபர்ஸ் போர் விமானம் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோட்சி சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. அப்போதுதான் ராஜிவ் காந்தியின் அரசில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேறிய வி.பி.சிங் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஃபோபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார். 1989இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு மூன்று முறை காங்கிரஸ் பிரதமர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் கடந்த 25 ஆண்டுகளில் பெரும்பான்மை என்பது கைக்குச் சிக்காத புகையாக மறிவிட்டது. உண்மையில் தற்போது இருக்கும் கூட்டணி ஆட்சி முறைக்கு விதை போட்டதே அந்த தேர்தல்தான் என்றும் சொல்லலாம். சரியாக இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ஊழல் சரித்திரம் மீண்டும் இத்தாலி நாட்டுடன் இணைந்திருக்கிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் அனைத்திலும் ஊழல் செய்த அரசியல் கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் கிண்டலை காங்கிரஸ் சந்தித்தாலும் கட்சியின் செல்வாக்கு இன்னும் முழுமையாகக் குறைந்துவிடவில்லை. ஆனால் இத்தாலியுடன் அதன் ஊழல் கறைகள் சம்மந்தப்படும் போதெல்லாம் இந்திய மக்கள் காங்கிரசை சந்தேக கண்ணோடுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. சமீப காலமாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், நிர்வாக சீர்குலைவுகள் ஆகியவற்றால் பழுதுப்பட்டிருக்கும் காங்கிரசின் பெயர், கடந்த வாரம் வெளியான ஹெலிகாப்டர் ஊழல் காரணமாக அதல பாதாளத்துக்குச் செல்லும் என்ற யூகம் கிளம்பியிருக்கிறது. 2010ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு ‘ஏ டபள்யூ 101’ என்னும் 12 போர் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இதற்காக ரூ.3600 கோடி செலவிடப்பட்டது. அதற்காக சிலருக்கு பேரத்தின் அடிப்படையில் ரூ.362 கோடி கமிஷனாக தரப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டின் அரசு பங்கு வகிக்கும் ‘ஃபின்மெக்கானிக்கா’ என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அகஸ்தா வெஸ்ட்லாண்ட்’ என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் இந்த ஆர்டரைப் பெற்று ஹெலிகாப்டர்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. வணிக பேரங்களில் லஞ்சம் தருவது என்பது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாதது என்றாலும் இந்திய நாட்டு சட்டத்தின்படி இது குற்றம் என்பதால் இந்த தகவலை வெளியிடுவதாக இத்தாலி நாட்டுப் பிரதமர் அறிவித்தார். முன்னூறு கோடியெல்லாம் ஒரு ஊழலா என்று கேட்கும் அளவு இந்தியப் பொது வாழ்க்கை ‘முன்னேறி’விட்டது. சில ஆண்டுகளாகப் பல லட்சம் கோடிகளில் நடைபெறும் இமாலய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருப்பதால் சில கோடி ரூபாய்களில் நடக்கும் ஊழல்களைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் இருக்க இந்திய மக்கள் பழகியிருக்கிறார்கள். ஆனாலும் ‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்’ (அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் மயிலிறகும் வண்டியின் அச்சை முறிக்கும்) என்று வள்ளுவர் சொல்வதுபோல இந்தச் சிறிய ஊழலும் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியாக அமையலாம். முதலாவதாக, ஹெலிகாப்டர் வாங்கியது ராணுவ விஷயத்திற்காக என்பதால் நாட்டின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் கேள்வி எழுந்துள்ளது. இந்த ஊழலை ஃபோபர்ஸ் ஊழலோடு எதிர்க்கட்சிகள் ஒப்பிடுகின்றன. காங்கிரஸ் இந்த ஒப்பீட்டை மறுக்கிறது. இந்த முறைகேட்டில் காங்கிரஸ் ஆட்சி, முந்தைய பா.ஜ.க. ஆட்சி இரண்டுமே சம்மந்தப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடந்த பிறகுதான் சொல்ல முடியும் என்று மத்திய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, அந்தோணி ஆகியோர் கூறுகிறார்கள். தற்போதைய சூழல் காங்கிரசுக்குப் போதாத காலமாக இருக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று குஜராத்தின் முதல்வராக அமர்ந்துள்ளார். வளர்ச்சி அரசியலும், இந்துத்துவ அடையாளமும் பரவலான மக்கள் ஆதரவும் அவரை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக நீடித்துவரும் காங்கிரஸ் ஆட்சி சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நல உதவிகளையும், ஊக்கத் தொகையையும் வழங்கி வருகிறது. மேலும் சிறுபான்மையினத்தவருக்குத் தனி இட ஒதுக்கீடும் தர முயற்சித்துவருகிறது. இதனால் காங்கிரஸ் அரசை சிறுபான்மையினருக்கு ஆதரவானது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டினாலும் அதைக் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது மோடியின் வெற்றி மத்திய அரசை கவலை அடையச் செய்வதால் காங்கிரஸின் செயல்திட்டங்கள் மாறுவதாகத் தோன்றுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தைக் கடுமையான அணுகுமுறையின் துணையோடு ஒடுக்குவதை கொள்கை ரீதியாகவே ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பயங்கரவாத நடவடிக்கைகளை அணுகும் முறை வித்தியாசமானது. பயங்கரவாதத்தை வேறறுப்போம் என்று அவர்களும் சொன்னாலும் பா.ஜ.க. அளவுக்கு அந்த விஷயத்தில் தீவிரப் போக்கு உள்ள கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. ஆனால் சமீப காலத்தில் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதும் தூக்கிலிடப்பட்ட விதமும் பா.ஜ.க.வின் செயல்திட்டத்தை கையில் எடுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், ஒரு முக்கிய வித்தியாசத்தை கவனிக்க வேண்டும். கசாப் தூக்கிலிடப்பட்டப் போது மரண தண்டனைக்கு எதிராக பொதுவான குரல் மட்டுமே எழுந்தது. அவரது குற்றத்தின் தன்மை பற்றி யாருமே கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அப்சல் குருவின் தூக்கில் அவரது குற்றம் பற்றியும் கேள்வி எழுகிறது. அவனைத் தூக்கில் போட்டதால் காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் தேர்தல் நெருங்கும்போது தண்டனையை அமல்படுத்துவது இந்துத்துவ வாக்குகளைக் கவரும் முயற்சியே என்று பல ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் காங்கிரசின் இந்த திட்டம் வெற்றிபெறாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர்களில் ஒருவரான சரவணன். “மோடியின் வெற்றிக்கு இந்துத்துவப் பின்னணி மட்டுமே காரணம் அல்ல. அவர் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துகிறார். ஆனால் அடித்தட்டு மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்விலும், நிர்வாக குளறுபடிகளிலும் கவனம் செலுத்தாமல் இதுபோன்ற திட்டங்களை தீட்டுவது நகைப்புக்குரியது. சிறுபான்மையினருக்கான அதிக சலுகைகள், அதை முன்னிட்டு இந்துக்களின் இட ஒதுக்கீட்டைக் குறைப்பது போன்ற செயல்களால் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று சாதாரண மக்களுக்கும் தெரிந்துள்ளது” என்று கருதுகிறார் சரவணன். இந்த தூக்கு தண்டனைகளால் காங்கிரசுக்கு வழக்கமாகக் கிடைத்துவரும் இடதுசாரி சிந்தனையுள்ளவர்களின் வாக்கு வங்கியும் பிளவுபடும் என்கிறார் இவர். 1980களில் ராமர் கோயில் பிரச்சினை தொடங்கியபோது அதை சாதகமாக்கிக்கொள்ள திட்டமிட்ட ராஜிவ் காந்தி, ராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தைத் திறக்க உத்தரவிட்டார். ஆனால் அது காங்கிரசுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த விவகாரம் பா.ஜ.க.வின் செல்வாக்கை வளர்க்க உதவியது என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை சம்மந்தமாக நீதிபதி வர்மா கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷன் பலாத்காரத்தைத் தடுக்க சில பரிந்துரைகளை செய்தது. ஆனால் அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு அவசர சட்டமொன்றைப் பிறப்பித்தது. மற்ற கட்சிகளையும், நிறுவனங்களையும் கலந்தாலோசிக்காமல் அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தால் அரசின் மீது அதிருப்தி கிளம்பியுள்ளது. இந்த பிரச்சினை, காங்கிரஸ் அரசின் போதாத காலத்தைக் குறிக்கிறது என்று மூத்த அரசியல் விமர்சரான சோ தனது துக்ளக் பத்திரிகையில் வர்ணிக்கிறார். இந்த இக்கட்டான நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வெடித்துள்ளது காங்கிரசை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் ரகளையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடத் தயார் என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தாலி தலைநகரமான ரோம் நகரத்தை நோக்கி சி.பி.ஐ. விரைந்துள்ளது. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்க வாய்ப்பில்லை. இந்த விவகாரம் மிக முக்கியமானது என்பதால் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோருகிறது. இந்த ஊழலில் பா.ஜ.க.வுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுவதை அந்த கட்சி மறுத்துள்ளது. ஏன் விதிமுறையை மாற்றாமல் ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட்டன என்று அது கேட்கிறது. இந்த ஊழலில் முன்னாள் விமானப்படைத் தளபதி தியாகியின் குடும்பத்தினர் பெயர் அடிப்படுகிறது. ஆனால் இவர்களுக்குப் பின்னணியில் பெரும்தலைகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. தற்போது ஃபோபர்ஸ் வழக்கு நீர்த்துப்போய்விட்டாலும் அதன் காரணமாக காங்கிரஸ் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டதை மறுக்க முடியாது. பெரும்பான்மை பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி, ஃபோபர்ஸ் புகார் காரணமாக பல ஆண்டுகள் சிறுபான்மை ஸ்தானத்துக்குச் சென்றுவிட்டது. இந்த ஹெலிகாப்டர் ஊழலும் அதேபோன்ற விளைவை ஏற்படுத்தினால் மீண்டு வருவதற்கு காங்கிரசுக்கு மேலும் கூடுதலான காலம் தேவைப்படலாம். தற்போதைய சூழலில் காங்கிரசின் எதிர்காலம் இந்த ஊழல் புகாரில் அடங்கியுள்ளது என்றும் சொல்லலாம். சிறிய அளவிலான ஊழல் என்றாலும் ராணுவம் சம்மந்தப்பட்டது என்பதால் இது சீக்கிரமாக அடங்கிவிடாது. தவிர, தொடர் பிரச்சினைகளின் சுமையால் அழுத்தப்பட்டுள்ள காங்கிரஸுக்கு இந்தச் சிறிய சுமையும் முதுகை ஒடிக்கப் போதுமானதாக இருக்கலாம். கழுதையின் முதுகை ஒடித்த ஒற்றை வைக்கோல் (A straw that broke camel's back) என்ற ஆங்கிலப் பழமொழியும் வள்ளுவர் கூறும் மயிலிறகும் இப்போது காங்கிரஸுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

No comments:

Post a Comment