Tuesday, February 19, 2013

காவிரிப் பிரச்சினை ஜீவ நதியும் ஜீவ மரணப் போராட்டமும்

தென்னகத்தின் மிகப் பழமையான மாநிலங்களும் அண்டைய மாநிலங்களுமான தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் தீராத பிரச்சினை காவிரி நதிநீர்ப் பங்கீடு. இதில் ஏற்பாடும் சிக்கல்களால் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகள் காவிரி பற்றி வீர வசனங்கள் பேசி ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் காவிரி பிரச்சினை மட்டும் முடிந்தபாடில்லை. இந்த ஆண்டு கர்நாடகத்திலும் வறட்சி அதிகமாகிவிட்டதாக அம்மாநில அரசு சொல்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால் கர்நாடகம் வறட்சியில் சிக்கிவிடும் என்கிறார்கள். வழக்கம்போல தேசியக் கட்சிகள் இரண்டு மாநிலங்களிலும் மாறுப்பட்ட நிலைகளை எடுத்துவருகின்றன. அரசியல் பரமபத விளையாட்டில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் காவிரிப் பிரச்சினை தற்போது ஆவேசமான கட்டத்தை எட்டியுள்ளது. என்னதான் நடக்கிறது காவிரி பிரச்சினையில்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டின் வரலாறு 90 ஆண்டுகள் பழமையானது. 1924ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்துக்கும், மைசூர் அரசாங்கத்துக்கும் காவிரி நதி நீர்ப் பங்கீடு சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது குடகு மாவட்டம் சென்னை மாகாணத்துடன் இணைந்திருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, தமிழகத்தில் இருக்கும் 18 ஏக்கர் பாசன நிலமும், கர்நாடகத்தில் 3 ஏக்கர் பாசன நிலமும் காவிரி நீர் பயன்பாட்டில் வந்தன. கர்நாடக அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 95 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்று முடிவானது. இந்த ஒப்பந்தம் 1974இல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் 1972இல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி காவிரி ஒப்பந்ததத்தை நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்க்கைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு அரசியல் நிர்ப்பந்தங்கள் எழுந்தன. அன்று இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக் கருணாநிதியை மிரட்டியதால் தமிழகம் பணிய நேரிட்டது என்று கருணாநிதியை விமர்சிப்பவர்கள் சொல்கிறார்கள். எது எப்படியோ, 50 ஆண்டுகள் கழிந்தவுடன் ஒப்பந்தமும் காலாவதியானது. காவிரியின் உற்பாத்தி ஸ்தானம் கார்நாடகத்தில் இருப்பதால் அதன் நீரைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தம் காலாவதியானது கர்நாடகத்திற்குச் சாதகமாக அமைந்தது. குறுகிய காலத்தில் கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய மூன்று அணைகளைக் கர்நாடக்க மாநிலம் கட்டியது. அதனால் காவிரி நீர் பழமையான கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக்கூட வரவில்லை. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகம் காரணம் சொல்லத் துவங்கியது. அன்று ஆரம்பித்த காவிரிப் பிரச்சினை இன்றுவரை தொடர்கிறது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் உரிய பலனைப் பெற்றுத் தராததால் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. பிரச்சினை குறித்த வாதங்களையும் யதார்த்த நிலவரங்களையும் அலசி ஆராய்ந்த மான்றம், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 205 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்ன்று தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இந்தத் தீர்ப்புகளைக் கர்நாடகம் தொடர்ந்து உதாசீனப்படுத்திவருகிறது. உபரியாஅக மழை பெய்யும் ஆண்டுகளைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் பிரச்சினை எழுகிறது. முற்றுகிறது. பேச்சுவார்த்தைகள் பலனின்றி முறிகின்றன. சில ஆண்டுகளாக மழையும் பொய்த்துவருகிறது. இதற்கிடையில் 1974 தொடங்கி இன்றுவரை கர்நாடகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாசன நிலங்களை அதிகரித்துவருகிறது. 3 லட்சம் ஏக்கர் பாசன நிலத்திலிருந்து 18 லட்சம் ஏக்கராகப் பாசன நிலமாக கர்நாடகம் அதிகரித்துள்ளதே பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் தமிழக டெல்டா விவசாயிகள். சில ஆண்டுகளாகவே டெல்டா பகுதிகளில் மழை சரியாக பொய்வதில்லை. கர்நாடகம் பல அணைகளைக் கட்டி காவிரி நீரை தங்களுக்குள்ளேயே முடக்கிவிடுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதில்லை. இந்த ஆண்டு பிரச்சினை இன்னும் மோசமாகியது. கர்நாடகத்திலேயே வறட்சி நிலவுவதால் கொஞ்சம்கூட தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அடம் பிடித்தார். அதையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவர் மன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அணுகினார். தமிழக டெல்டா விவசாயிகளுக்குத் தேவைப்படும் நீர் அளவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய நிபுணர் குழுவை நடுவர் மன்றம் நியமித்தது. அந்தக் குழு பிப்ரவரி 5ஆம் தேதி தமிழக பாசன நிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடகம் தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி தண்ணீரை பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. அதற்கு முன்பு அதே அளவுள்ள நீரை மேட்டூர் அணையிலிருந்து தமிழக அரசு திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது. இந்த உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்று தமிழக விவசாயிகள் கருதுகிறார்கள். காவிரி டெல்டா பகுதியில் மொத்தம் 9 லட்சம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதில் சரியான நீர் வளம் இல்லாமல் ஏற்கனவே 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் பயிர்கள் கருகிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது 6 ஏக்கர் நிலத்தில் நீர் வேண்டிப் பயிர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது உடனடியாக அறுவடை செய்யப்படவிருக்கும் 3.25 லட்சம் ஏக்கரை மட்டுமே மத்திய குழுவினர் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார்கள். மேலும் பல லட்சம் ஏக்கர் பயிர்களை மத்திய குழு ஒரே நாளில் கணக்கெடுப்பது சாத்தியமானதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இந்தக் குறைந்த அளவைக்கூடக் கர்நாடகம் தர மறுப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காவிரி டெல்டா விவசாயிகளின் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. பயிர் விளைச்சலின்றி பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகளுக்குக் குறைந்தது 25,000 ரூபாயாவது நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் டெல்டா பகுதியில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சமர்ப்பிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று ஜெயலலிதா பிப்ரவரி 3ஆம் தேதி அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் மாநிலக் குழுவினர் ஆய்வு செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டமன்றத்தில் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்தார். டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் முன்னுரிமை அளிப்பது, போதிய பயிர் காப்பீடு அளிப்பது, 50 சதவீதத்துக்கு மேல் மகசூல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் நிவாரணம் வழங்குவது ஆகியவை அந்த அறிவிப்புகளில் குறிப்பிடத்தக்கவை. தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் கிளம்பியுள்ளன. இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். இந்த அறிவிப்பு போதுமானதல்ல என்றும் இது வெறும் கண்துடைப்பே என்றும் அவர் குறை கூறினார். குறைவாக மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கதி என்னவென்று அவர் கேள்வி எழுப்பினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களும் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படாததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து கர்நாடக அரசும் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தியது. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கர்நாடக விவசாயிகள் அதிருப்தியடைந்தார்கள். ‘‘நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் சட்டச் சிக்கல் ஏற்படும் என்ற காரணத்துக்காகவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகத்தின் உரிமையை நிலைநாட்டப் பதவியைத் துறக்கவும் தயார்’’ என்று அம்மாநில சட்டமன்றத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவித்தார். அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 12ஆம் தேதியன்று மறு ஆய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. தமிழகத்திற்குத் தேவையான நீர் மேட்டூர் அணையிலேயே இருப்பதாகவும், தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடக விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாகத் தமிழக அரசு 13ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்துள்ளது. இந்தச் சட்டப் போரால் காவிரி பிரச்சினை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய சூழலில் இரண்டு மாநிலங்களிலும் சரியான மழையின்றி வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகளும் சட்ட நடவடிக்கைகளும் மட்டும் தீர்வாக அமையாது என்றும் சிலர் கருதுகிறார்கள். “தலைக்காவிரியில் இருந்து காவிரி நதி பாய்கிறது. அது இரண்டாகப் பிரிந்து தமிழகத்துக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பாயும் நதி வீணாகக் கடலில் கலக்கிறது. அந்த நீரை நேத்னாவதி அணையில் சேமித்து வைப்பதன் மூலம் கிடைக்கும் 400 டி.எம்.சி. தண்ணீரை இரண்டு மாநிலங்களும் சரிபாதியாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும். இப்போது தமிழகத்தின் தேவை 192 டி.எம்.சி. மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதை நாங்கள் மாற்று ஏற்பாடாக முன்வைக்கிறோம்” என்கிறார் பாரதிய கிசான் (விவசாயிகள்) சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், வழக்கறிஞருமான அய்யாக்கண்ணு. கங்கையும் காவிரியும் இணையும் வகையில் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் கடலில் கலக்கும் 30,000 டி.எம்.சி. தண்ணீர் மிச்சமாகும். இந்தியாவின் தென்மூலையில் தமிழகம் இருப்பதால் அதில் சிறிய அளவு நீராவது கிடைத்தால் தமிழகம் வளமான பூமியாகும் என்று அவர் நம்புகிறார். மழையின் பங்கு கணிசமாக குறைந்துவரும் இந்த சமயத்தில் மாற்று வழியையும் யோசிக்க வேண்டியுள்ளது என்று பலர் கருதுகிறார்க்கள். பல ஆண்டுகளாக நீடித்துவரும் காவிரிப் பிரச்சினை இரண்டு மாநிலங்களிலும் வலுவான அரசியல் ஆயுதமாகியுள்ளது. கர்நாடகத்தை ஆளும் தேசியக் கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் இல்லை என்பதால் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் நினைக்கிறார்கள். அதை முற்றாகத் தவிர்த்து இதை ஒரு வாழ்வாதாரப் பிரச்சினையாகப் பார்த்தால் மட்டுமே பிரச்சினை தீரும்.

No comments:

Post a Comment